Monday, April 16, 2012

விளையாடுவோம் வாருங்கள் -10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பந்து விளையாட்டு 

துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் விளையாட்டு , பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).

பேய்ப்பந்து

விளையாட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ் விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப் பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.

விளையாட்டு பொருள் :ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.

விளையாடும் இடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, "பந்தே பந்து" என்று உரக்கக் கத்துவான். பிறர் "என்ன பந்து?" என்று கேட்பர். அவன் "பேய்ப்பந்து" என்பான். "யார் மேலே" என்று ஒருவன் கேட்க, அவன் "உன்மேலே" என்று
சொல்லிக் கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போகும். பந்து யார் கைப்பட்டதோ அவன்
அதை ஓங்கி யார்மேலும் எறிவான். 

இங்ஙனம் விருப்பமுள்ள வரை மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.

விளையாட்டின் தோற்றம்: குரங்கெறி விளங்காயினின்றோ, பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

விளாமரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.

விளையாட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள் மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய வினைகட்கு இப் பயிற்சி ஏற்றதாம்.

                                                                                                                   தொடரும்.......................

No comments:

Post a Comment