Thursday, April 19, 2012

விளையாடுவோம் வாருங்கள் -13

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

காயா பழமா?"


விளையாட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று "காயா பழமா?" என்று கேட்டு விளையாட்டும் விளையாட்டு , அக் கேள்வியையே பெயராகக் கொண்டது.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.

விளையாடும் இடம்: ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்க் "காயா, பழமா?" என்று கேட்டு நீருள் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் 'தளார்' என்னும் ஓசை யெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது; பாதி முழுகின் 'டபக்கு' என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் "காய்" என்றும், பழமாயின் "பழம்" என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர்.ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருள் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்கமுயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.

விளையாட்டின் தோற்றம்: உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச் சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றி யிருக்கலாம்.

விளையாட்டின் பயன் : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும

                                                                                                                தொடரும் ....................

Wednesday, April 18, 2012

விளையாடுவோம் வாருங்கள் -12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

மரக்குரங்கு
('கொம்பரசன் குழையரசன்')

விளையாட்டின் பெயர்  : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் விளையாட்டு மரக்குரங்கு என்பதாம். இது பாண்டி நாட்டில் 'கொம்பரசன் குழையரசன்' எனஅழைக்க படுகிறது.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர்.

விளையாடும் முறை: : விளையாடுபாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக் காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சையாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்திலேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். 

பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தி னின்றும் குதித்து வட்டத்திற்குள் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளை தாவி
ஆட்டங் காட்டுவர். வட்டத்திற் குட்போய் நிற்கு முன் யாரேனும் தொடப் பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். 

மரக்கிளைகளிலிருக்கும்போது 'கொம்பரசன் குழையரசன்' என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக் கொள்வர்.

விளையாட்டின் தோற்றம்  : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும்.

விளையாட்டின் பயன்  : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம்.

                                                                                                         தொடரும் .....................

Tuesday, April 17, 2012

விளையாடுவோம் வாருங்கள் -11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பிள்ளையார் பந்து 

விளையாட்டின் பெயர் : பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின் மேற் பந்தை எறிந்தாடும் விளையாட்டுப் பிள்ளையார் பந்து. இது திருச்சிராப்பள்ளி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டு என சொல்லப்படுகிறது. 

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பொதுவாக, பலர் இதை ஆடுவர். 

விளையாட்டு பொருள் : ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும், ஒரு பந்தும், இதற்குரிய கருவிகளாம். 

விளையாடும் இடம்: சுவரடியும் அதையடுத்த வெளிநிலமும் இதை ஆடுமிடமாம். 

விளையாடும் முறை: ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினவான இரு அணியாகப் பிரிந்துகொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு நீளக் கல்லைப்
பிள்ளையாராகப் பாவித்து ஒரு சுவரடியில் சிறிது மணலைக் குவித்து அதில் அதை நட்டு, ஒரு கட்சியார் ஐங்கசத் தொலைவில் எதிர்நின்று 

ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கட்சியார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிசையாக நின்றுகொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை யாரேனும் அந்தரத்திற் பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையார்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்கா விடினும், எறியுங் கட்சியார் ஆள்மாறிக் கொண்டேயிருந்து அனைவருந் தீர்ந்த பின், எதிர்க் கட்சியார் அடிக்குங் கட்சியாராகவும் அடித்த கட்சியார் பிடிக்குங் கட்சியாராகவும், மாறல் வேண்டும்.

பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப் படாவிடின், பிடிக்க நின்ற கட்சியர் அனைவரும் உடனே ஓடிப்போய்ச் சற்றுத் தொலைவில்
இடையிட்டு நிற்பர். அடித்த கட்சியாரனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின்மேல் வைத்து அது
வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக்கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கட்சியாருக்குத் தோன்றுமாறு தனித்தனி
நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர். 

எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்ப வனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்துவிடுவான். அதோடு ஓர் ஆட்டை முடியும். 

அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகர் விருப்பத்தைப் பொறுத்தது.

விளையாட்டின் தோற்றம்   : ஒருகால், பிறமதப் பகைமை பற்றியும் கொள்ளையடித்தற் பொருட்டும்,  இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரகங்களை) உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கை யாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத்தக்கன.

                                                                                                           தொடரும்......................

Monday, April 16, 2012

விளையாடுவோம் வாருங்கள் -10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பந்து விளையாட்டு 

துணியாலும் கயிற்றாலும் இறுகக் கட்டப்பட்ட உருண்டையை எறிந்தாடும் விளையாட்டு , பந்து எனப்படும். (பந்து = உருண்டையானது).

பேய்ப்பந்து

விளையாட்டின் பெயர் : பேய்த்தனமாக ஒருவன்மேலொருவன் எறிந்தாடும் பந்து, பேய்ப்பந்து எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : பெரும்பாலும் நால்வர்க்கு மேற்பட்ட பலர் ஆடுவதே இவ் விளையாட்டிற்கேற்றதாம். ஆடுவார் தொகை பெருகப் பெருக இவ் ஆட்டுச் சிறக்கும்.

விளையாட்டு பொருள் :ஆடுவார் எத்துணையராயினும் ஒரு பந்தே இவ் ஆட்டிற்குரியதாம்.

விளையாடும் இடம் : பொட்டலும் வெளிநிலமும் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : பலர் இடையிட்டு நின்றுகொண்டிருக்க அவருள் ஒருவன் பந்தை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டு, "பந்தே பந்து" என்று உரக்கக் கத்துவான். பிறர் "என்ன பந்து?" என்று கேட்பர். அவன் "பேய்ப்பந்து" என்பான். "யார் மேலே" என்று ஒருவன் கேட்க, அவன் "உன்மேலே" என்று
சொல்லிக் கொண்டு அவன்மேல் வன்மையாய் எறிவான். அது அவன்மேல் பட்டாலும் படும்; படாதுபோனாலும் போகும். பந்து யார் கைப்பட்டதோ அவன்
அதை ஓங்கி யார்மேலும் எறிவான். 

இங்ஙனம் விருப்பமுள்ள வரை மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டேயிருப்பர். யார் எறியினும் அவனுடைய வலிமைக்குத் தக்கவாறு வன்மையாய் எறிவதே வழக்கம்.

விளையாட்டின் தோற்றம்: குரங்கெறி விளங்காயினின்றோ, பேய்ச் செயலாகக் கருதப்பட்ட ஒரு பந்து வீழ்ச்சியினின்றோ, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

விளாமரத்திலிருக்கும் குரங்கைக் கல்லாலெறிய அது விளங்காய் கொண்டெறிவது, குரங்கெறி விளங்காயாம்.

விளையாட்டின் பயன் : சற்றுத் தொலைவில் நிற்கும் அல்லது இயங்கும் இருதிணைப் பொருள்கள் மேலுந் தப்பாது எறிதற்கேற்ற பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். வேட்டையாடல், போர் செய்தல், திருடனைக் கல்லால் அடித்தல் முதலிய வினைகட்கு இப் பயிற்சி ஏற்றதாம்.

                                                                                                                   தொடரும்.......................

Sunday, April 15, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

சோழ-கொங்குநாட்டு முறை

கில்லித்தாண்டு

பாண்டிநாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு நாட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றுதான் . ஆயினும், இடவேறுபாடு காரணமாக, இரண்டு இடத்து ஆட்டிற்கும் பின்வருமாறு 

சில வேற்றுமைகள் உள்ளன

(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் அழைக்கப் படுகிறது.

பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் இணையானது.

'எடுத்து ஊற்றுதல்' என்னும் பாண்டிநாட்டுக் குறியீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு 'கஞ்சிவார்த்தல்' என்பதாகும்.

(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு பக்கத்தில் மட்டுங் கூராயிருக்கும். ஆனால் கில்லி இருபக்கமும் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.

(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமையத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரேனும் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்த பின் இன்னொருவன் ஆடுவன். இங்ஙனம் ஒவ்வொருவனாக எல்லாருந் தொலைந்த பின் ஓர் ஆட்டை ஒருவாறு முடியும். இங்ஙனம் ஆடுவது கிரிக்கட்டு (cricket) என்னும் ஆங்கில விளையாட்டை ஒரு புடை யொத்திருப்பதால், இவ் ஆட்டை 'இந்தியக் கிரிக்கட்டு' என நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம்.

பாண்டிநாட்டில், அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவை அளந்து அது கொண்டு வெற்றியைக் கணிப்பதில்லை. அடிக்குங் கட்சியர் அனைவருந்
தொலைந்தபின், எதிர்க்கட்சியார் ஆடல் வேண்டும். சோழ கொங்கு நாட்டிலோ,  தாண்டை அளவுகோலாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் அடிக்கப்பட்ட குச்சுப் போய்விழுந் தொலைவைக் கருவி கொண்டோ மதிப்பாகவோ அளவிட்டு, குறித்த தொகை வந்தவுடன் எதிர்க் கட்சியாரைக் 'கத்திக் காவடி' யெடுக்கச் செய்வர். குறித்த தொகை வருவதற்கு எத்துணைப்பேர் அடித்தனரோ, அத்துணைப் பேரும் குழியினின்று குச்சை மும்மூன்று தடவை தொடர்ந்தடித்துப் போக்கிய தொலைவிலிருந்து,

எதிர்க்கட்சியார் 'கத்திக் காவடி கவானக் காவடி' என்று இடைவிடாமல் மடக்கி மடக்கிச் சொல்லிக்கொண்டு குழிவரை வருதல் வேண்டும். இதுவே 'கத்திக் காவடி யெடுத்தல்' என்பது. கத்திக் காவடியெடுக்கும்போது இடையிற் சொல்லை நிறுத்திவிட்டால், முன்பு போக்கிய தொலைவினின்று மீண்டும் குச்சை முன்போல் அடித்துப்போக்கி, அது விழுந்த இடத்திலிருந்து மறுபடியும் கத்திக் காவடியெடுக்கச் செய்வர்.அதை யெடுத்து முடிந்தபின், முன்பு அடித்தவரே திரும்பவும் ஆடுவர். ஆகவே, கத்திக் காவடியெடுத்தல் தோற்றவர்க்கு விதிக்கும் ஒருவகைத் தண்டனை யெனப்படும்.

முதலில் அடித்த கட்சியார் அனைவரும் அடித்த பின்பும் குறித்த தொகை வராவிடின், அவர் தோற்றவராவர். ஆயின், அவர் கத்திக் காவடியெடுக்க
வேண்டியதில்லை. அடுத்த ஆட்டையில் எதிர்க்கட்சியார் அடித்தல் வேண்டும். இதுவே அத் தோல்வியின் விளைவாம். ஆகவே, கத்திக் காவடித்
தண்டனை எடுக்குங் கட்சியார்க்கன்றி அடிக்குங் கட்சியார்க்கில்லை யென்பதும் அறியப்படும். பாண்டிநாட்டில் எடுக்குங் கட்சியார்க்கு அவ் எடுத்தலேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.

கிட்டிப்புள்

கிட்டிப்புள் என்பது கில்லித்தாண்டின் மற்றொரு வகையே. இரண்டிற்குமுள்ள வேறுபாடாவன :

பெயர் : கில்லி என்பது புள் என்றும், தாண்டு என்பது கிட்டி என்றும் பெயர்பெறும்.

முறை : கில்லித்தாண்டில், குச்சு குழியின் நீட்டுப் போக்கில் வைத்துக் கோலால் தட்டியெழுப்பி யடிக்கப் பெறும். கிட்டிப் புள்ளிலோ, குச்சுக் குழியின்
குறுக்கே வைத்து அதற்கு நட்டுக் குறுக்காக ஒரு கோலைப் பிடித்து அது கையினால் தட்டியெடுக்கப் பெறும். கில்லித்தாண்டில், அடிக்கப்பட்ட குச்சை
எடுப்பவன் எடுத்தெறிந்தபின், அதை அடிப்பவன் எந்நிலையிலும் அடிக்கலாம். ஆயின், கிட்டிப்புள்ளில், அது இயக்கத்தில் (அசைவில்) இருக்கும் போதே
அதை அடித்தல்வேண்டும். அசைவுநின்று கிடையாய்க் கிடந்தபின், அதை அடித்தல் கூடாது. அடிப்பின், அடித்தவன் தவறியவனாவன். அதனால், எடுத்தெறிந் தவன் அடிக்கவேண்டியிருக்கும். இயங்குங் குச்சு நட்டுக்கு நிற்கும்போது அடிக்கப்படின், அது கில்லிக்குத்து எனப்படும்.

குச்சுப் போம் தொலைவை அளப்பதும் கத்திக்காவடி எடுப்பதும் கிட்டிப்புள்ளில் இல்லை. பிறவகையில் இது பெரும்பாலும் சில்லாங்குச்சை ஒத்திருக்கும்.

பெரும்பாலும் சிறுவரே, அவருள்ளும் இருவரே, இவ் விளையாட்டை ஆடுவர். கோலால் குச்சைத் தட்டி யெழுப்பி அடிக்கமுடியாத இளஞ்சிறார்க்கென இவ் ஆட்டு எழுந்ததாகக் கூறுவர். சேரநாடாகிய மலையாள நாட்டில் கொட்டிப்புள் என வழங்கும் ஆட்டு, சில்லாங்குச்சைச் சேர்ந்ததே.

                                                                                                             தொடரும் ...........................

Saturday, April 14, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 8


பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

சில்லாங் குச்சு

பாண்டிநாட்டு முறை

விளையாட்டின் பெயர் : சில்லாங்குச்சு என்னும் ஒரு சிறு குச்சை ஒரு கோலால் தட்டி ஆடும் ஆட்டு சில்லாங்குச்சு எனப்படும். இப் பெயர் சிறுபான்மை சீயாங்குச்சு எனவும் மருவி வழங்கும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : இவ் விளையாட்டை ஆடக் குறைந்தது இருவர் வேண்டும். பலராயின் உத்திகட்டிச் சமதொகையான இருகட்சியாகப் பிரிந்துகொள்வர்.

விளையாட்டு பொருள்  : இருவிரல் முதல் அறுவிரல் வரை நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு நுனியில் கூர்மையும் உள்ள ஓர் உருண்ட குச்சும்; ஒரு முழம் முதல் இரு முழம் வரை (அவரவர் கைக்கேற்றவாறு) நீளமும், இருவிரல் முதல் நால்விரல் வரை சுற்றளவும், ஒரு தலையிற் சிறிது கூர்மையும், உள்ள ஓர் உருண்ட கோலும்; இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம். பெரும்பாலும் குச்சும் கோலும் ஒரே சுற்றளவினவாக இருக்கும்.  கோலைக் கம்பு என்பர்.

ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஒவ்வோர் இணையர்க்கும் ஒவ்வொரு கோலுங் குச்சும் இன்றியமை யாதன. சில சமையங்களில் ஒவ்வொருவனும் தான் தான் பயின்ற அல்லது தன் தன் கைக்கேற்ற கருவிகளைத் தனித்தனி வைத்துக்கொள்வதுமுண்டு.

குச்சை மேனோக்கிய சாய்வாக வைத்து அதன் கூர்நுனியிற் கோலால் தட்டியெழுப்புமாறு, குச்சிற் பாதியளவு நீளமும் அரைவிரல் முதல் ஒருவிரல் வரை ஆழமும் உள்ள ஒரு சிறு பள்ளம் நிலத்திற் கில்லப்படும். குச்சைப் பள்ளத்தில் வைத்திருக்கும்போது, அதன் அடிப்பக்கம் (அல்லது மொட்டைப் பக்கம்) பள்ளத்திலும், அதன் நுனிப்பக்கம் (அல்லது கூரிய பக்கம்) வெளியிலும் இருக்கும்.

விளையாடும் இடம்   : அரைப் படைச்சால் (? furlong) சதுர அல்லது நீள்சதுர நிலப்பகுதியிலாவது, பரந்த வெளி நிலத்திலாவது இவ் ஆட்டம் ஆடப்படும்.

விளையாடும் முறை : ஆடுவார் இருவராயினும் பலராயினும், ஆடுமுறை யொன்றே. இருவராயின், இருவரும் ஒரே குழியில் முன் பின்னாகவாவது, வெவ்வேறு குழியில் உடனிகழ்வாக வாவது, தம் குச்சை வைத்து நுனியிற் கோலால் தட்டியெழுப்பி, அது நிலத்தில் விழுமுன் அடித்து இயன்ற தொலைவு போக்குவர்.யார் குச்சு மிகத் தொலைவிற்போய் விழுந்ததோ அவன் முந்தியாடல் வேண்டும். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன் அதை அடிக்கத் தவறினும், குறைந்த தொலைவு குச்சைப் போக்கினும், பிந்தி யாடல் வேண்டும்.

விளையாட்டைத் தொடங்குபவன், முன் சொன்னவாறு குச்சை யெழுப்பி யடித்து இயன்ற தொலைவு போக்குவன். எழும்பிய குச்சு நிலத்தில் விழுமுன்
அடிக்கத் தவறின் அடுத்தவன் அடிக்க வேண்டும். யார் அடிப்பினும் குச்சை யடித்துப் போக்கிய பின், எடுத்தடிக்கும் நிலையில் கோலைக் குழியருகே
கிடத்தி நிற்பன்.

இன்னொருவன் (எதிரி), தொலைவில், குச்சுப்போகும் திசையிலும் அது விழக்கூடிய இடத்திலும் நின்றுகொண்டிருந்து, அது நிலத்தில் விழுமுன் அதைப் பிடிக்க முயல்வான். பிடித்து விடின், அவன் குச்சடிப்பவனாகவும், முன்பு அடித்தவன் அதை எடுப்பவனாகவும், மாறவேண்டும். பிடிக்க முடியா விடின், குச்சு நிலத்தில் விழுந்தவுடன் அதையெடுத்து, அடித்தவன் குழியருகே கிடத்தியிருக்கும் கோலிற் படும்படி யெறியவேண்டும். 

கோலிற் பட்டுவிடின், அன்றும் இருவர் நிலைமையும் மாறும். படாவிடின், அடிப்பவன் விரைவாய்க் குச்சை யெடுத்து அதை முன்போல் அடித்துப் போக்குவான். அவன் அதை அடிக்குமுன் குச்செடுப்பவன் வேகமாய் ஓடிவந்து அவனைத் தொட்டு விடின், அன்றும், இருவர் நிலைமையும் மாறும். தொடாவிடின்,  குச்செடுத்தவன் முன்போற் குச்செடுக்க வேண்டும். இங்ஙனம், இருவரும் விரும்பிய வரை தொடர்ந்து ஆடுவர். அடித்த குச்சை எடுத்தெறி தலுக்கு எடுத்தூற்றுதல் என்று குச்சடிக்கிறவன் எவ்வகையிலும் தவறாதும் பிடி கொடாதும் அடிப்பின், விளையாட்டை நிறுத்தும்வரை எத்தனை முறையும் தொடர்ந்து அடிக்கலாம்.

பல இணையர் சேர்ந்து ஆடின், தொடங்குங் கட்சியைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் குச்சை மிகத் தொலைவில் போக்கிய கட்சியார் முந்தியாடுவர்; இதற்கு, ஒரு கட்சியார் அனைவரும் மிகத் தொலைவிற் போக்க வேண்டும் என்னும் யாப்புறவில்லை. அவருள் ஒருவர் போக்கினும் போதும். முந்தியாடுங் கட்சியார் அடிப்பாரும் பிந்தியாடுங் கட்சியார் எடுப்பாருமாய், ஆட்டந் தொடங்கும்.

அடிக்குங் கட்சியாருள் ஒவ்வொருவனும் அடிக்குங் குச்சை, அவ்வவனுடன் உத்திகட்டிய எதிர்க்கட்சி இணைஞனே எடுப்பான். இணைஞனுக்கு உத்தியாள் என்று பெயர். அடித்த குச்சை உத்தியாள் உடனே வந்து எடுக்காவிடின், அடித்தவன் அதைத் தொடர்ந்து அடித்து, மிகத் தொலைவிற் போக்குவது முண்டு.எடுக்குங் கட்சியார் எல்லாருங் குச்சுக்களை யெறிந்த பின்புதான், அடிக்குங் கட்சியார் ஒரே சமையத்தில் மீண்டும் அடிப்பர்.

தவறும் வகையும் தவறாது ஆடும் வகையும், இருவர் ஆடினும் இரு கட்சியார் ஆடினும் ஒன்றே. ஒவ்வொருவனாக வோ ஒருங்கேயோ அடிக்கும் கட்சியார் அனைவரும் தொலையும் வரை (அதாவது தோற்கும்வரை), எதிர்க்கட்சி நிலைமை மாறாது. ஆயின், அடிக்குங் கட்சியார் தொலையத் தொலைய,
அவருடைய இணைஞரான எதிர்க்கட்சியார் நின்றுகொண்டே வருவர். அடிக்குங் கட்சியின் இறுதியாளுந் தொலைந்த பின், இருகட்சியும் வினைமாறும்.

விளையாட்டின்த் தோற்றம்  : இவ் விளையாட்டு வேட்டை வினையினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. குறிஞ்சி நிலத்திலுள்ள குறவராயினும், குறிஞ்சி நிலத்திலும் பாலை நிலத்திலுமுள்ள வேடராயினும், பிறராயினும், காட்டிலுள்ள கோழி முயல் முதலிய ஒருசார் உயிர்களைக் குறுந்தடி கொண்டே யெறிந்து கொல்வது வழக்கம். இவ் வழக்கத்தினின்றே "கோழி யடிக்கக் குறுந்தடி வேண்டுமா?" என்னும் பழமொழியும் எழுந்துளது.

ஒரு குறவனும் அவன் கையாளான சிங்கன் என்னுங் குளுவனும் குறுந்தடி கொண்டு வேட்டையாடின், குறவன் புதர் புதராய்க் குறுந்தடியால் தட்டிப் பார்ப்பான். ஒரு புதரினின்று திடுமென்று ஒரு காட்டுக் கோழி பறக்கும்; அல்லது ஒரு முயல் குதிக்கும். அந் நொடியே, குறவன் அதைக் குறுந்தடியால்
அடிப்பான்; அல்லது எறிவான். கோழி அல்லது முயல் அடிபட்டுச் சற்றுத் தொலைவிற் போய் விழும். குளுவன் ஓடிப்போய் அதை எடுத்து வருவான்.
வேறு நிலத்தினின்று இருவர் வேட்டையாடச் செல்லினும் இவ்வகையே நேரும்.

இத்தகை வேட்டை வினையையே சில்லாங் குச்சுக் குறிக்கின்றது. குச்சை யடிப்பவன் அதைத் தட்டியெழுப்புவது, குறவன் புதரைத் தட்டிக் கோழி முயலை யெழுப்புவது போன்றது. குச்சை மீண்டும் அடிப்பது, அவ் வுயிரி களைக் குணிலால் அடிப்பதும் எறிவதும் போன்றது. குச்சு தொலைவிற் போய் விழுவது, அடிபட்ட வுயிரிகள் தொலைவிற்போய் விழுவது போன்றது. குச்சை எடுப்பவன் அதை எடுத்தெறிவது, அடிபட்டு விழுந்த வுயிரிகளைக் குளுவன்
எடுத்தெறிவது அல்லது எடுத்து வருவது போன்றது.

விளையாட்டின் பயன்  : மேலெழும் ஒரு பொருளை விரைந்து குறிதப்பாது வன்மையாய் அடிப்பதும்; வானின்று விழும் பொருளை அது தகாத இடத்தில்
விழுமுன்னும், தாழப் பறக்கும் பறவையை அது தன்னைவிட்டுக் கடக்கு முன்னும் பிடிப்பதும்; தொலைவிலுள்ள பொருளைக் குறிதப்பாது ஒரு கருவியால் அடிப்பதும்; ஒரு பொருளைத் தொலைவிலுள்ள குறித்த இடத்தில் எறிவதும்; ஒரு குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இதன் பயனாம்.

                                                                                                                   தொடரும்..................

Thursday, April 12, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

முக்குழியாட்டம்

சேலம் வட்டார முறை

விளையாட்டின் பெயர்  : சுவரடி யரங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழி வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம்.

விளையாடும் முறை  : சென்ற பதிவில் சொன்ன இரு குழியாட்டமும் முக்குழி யாட்டமும் ஒன்றே ,இட வேறுபாடு காரணமாகப் பின்வருமாறு மூவகை வேற்றுமை யுண்டு.

திருச்சிராப்பள்ளி

(1) கருவி : இருகுழி 

(2) முறை : மூட்டல் ஒரே தள் 

(3) பெயர் : இஷ்டம் அல்லது கிசேபி வெளிமட்டு 'லைன்' அல்லது 'லாக்கு'

சேலம்

(1) கருவி :முக்குழி

(2) முறை :மூட்டல் 3 தள் வரை

(3) பெயர் : முக்குழியாட்டம் வெளி டிப்பு கீர் அல்லது கீறு

தெல் விளையாட்டு 

தெல்லைத் தெறித்து விளையாடுவது தெல்.

கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி விளையாட்டு வகையாலும் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு.  

ஆயினும், கருவி வேறு பாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறு பட்டதாம். 

தெல்லுக்காய் 
இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது
இரு கருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும், சிறப்பாம். சிலர்
வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும் போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்; தெல்லைத் தெறிக்கும் போது அது மேனோக்கி நிற்கும்.

தெல்லுத் தெறித்தல் பாண்டிநாட்டு விளையாட்டு.

தெல்லுக்காய்( சூட்டுக்கொட்டை )குறிஞ்சி நிலத்தில் இயற்கையாய் வளரும் ஒருவகை மரத்தின் விதை. தெல் என்னுஞ்சொல் தெறிக்கப் படுவது என்னும் பொருட் காரணத்தை யுடையது.
                                                                                                                 
                                                                                                                 தொடரும்.....................

Wednesday, April 11, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 6

பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

இருகுழியாட்டம் (இஷ்டம்)

விளையாட்டின் பெயர்  : சுவரடி அரங்கிற்குள் இரு குழி வைத்தாடும் கோலியாட்டு வகை இருகுழியாட்டம் எனப்படும். இதற்கு இட்டம் (இஷ்டம்) அல்லது கிசேபி என்றும் பெயர். இவ் விளையாட்டு பெரும்பாலும் திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஆடப்பெறுவதாகும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் அல்லது (இருவர்க்கு மேற்பட்ட) பலர் இதை ஆடுவர். ஓர் ஆட்டையில் இருவரே இதை ஆட முடியுமாதலால், பலர் ஆடுவதாயின் இவ்விருவராகவே ஆடக்கூடும்.

விளையாட்டு பொருள்  : சுவரடி (அல்லது மேட்டடி) நிலத்தில், ஏறத்தாழ 3 அடி நீளமும் 2 அடி அகலமுமுள்ள ஒரு நீள் சதுர அரங்கமையுமாறு ஓர் அகன்ற பகரக்கோடு கீறிக் கொள்ளல் வேண்டும். அவ் வரங்கின் நெடும் பக்கங்களுள் ஒன்று சுவரடியாயிருக்கும் வண்ணம், பகரத்தின் இரு பக்கக் கோட்டு முனைகளும் சுவரைத் தொடுதல் வேண்டும். அவ் வரங்கிற்கும் இடவலமாக இரு குழிகள் கில்லல் வேண்டும்.

அரங்கிற்கு ஏறத்தாழ முக்கசத் தொலைவில் ஓரடி நீளம் உத்தி கீறப்படும். அதற்கு டாப்பு (Top) என்னும் மூடி இடப்படும்.

ஒருவன் ஆடும்போது இன்னொருவனுக்குக் கோலி தேவையாயிராமையின், ஆடகர் எல்லார்க்கும் பொதுவாக முக்கோலி யிருந்தால் போதும். அவற்றுள்,
இரண்டு உருட்டுவன; ஒன்று அவற்றை அடிப்பது. அடிக்குங் கோலி சற்றுப் பெரிதாகவிருக்கும். அதற்குத் திருச்சிராப்பள்ளிப் பாங்கரில் குட்டு அல்லது
தெல் என்று பெயர்.

விளையாடும் இடம்   : சுவரடி நிலமும் மேட்டடி நிலமும் இதை ஆடுமிடமாம்.

விளையாடும் முறை : தோற்றவன் கெலித்தவனுக்கு இவ்வளவு காசு கொடுத்தல் வேண்டுமென்று முன்னதாக முடிவு செய்து கொண்டு, உடன் பாட்டின் படியோ திருவுளச் சீட்டின் படியோ யாரேனும் ஒருவன் முந்தியாடுவன். ஆடுவார் எல்லார்க்கும் கோலி பொதுவாயின், கோலிக்குச் சொந்தக்காரன் முந்தியாடுவது வழக்கம்.

ஆடுகிறவன் உத்தியில் நின்றுகொண்டு, முதலாவது இரு சிறு கோலி களையும் அரங்கிற்குள் உருட்டி, அவற்றுள் எதை அடிக்க வேண்டு மென்று எதிரியைக் கேட்பான். அவ் இரண்டினுள் ஆடுகிறவனுக்குக் கிட்ட இருப்பதை அடிக்க வேண்டு மென்று விரும்பின் "கீழ்" என்றும், சற்று எட்ட (அதாவது தொலைவில்) இருப்பதை அடிக்க வேண்டுமென்று விரும்பின் "மேல்" என்றும், 

எதிரி சொல்வான். "கீழ்" என்பதிற்குப் பதிலாக "எதிர்" என்றும் சொல்வதுண்டு. 
ஆடுகிறவன் எதிரி சொன்ன கோலியை அடித்துவிட்டால் கெலித்தவனாவன்.

அவனுக்குப் பேசினபடி எதிரி காசைக் கொடுத்துவிடல் வேண்டும். முதலில்
எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்குமேல் இடையிட்டிருப் பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின்,
எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.

இடையீடு இருவிரற் குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், பச்சா என்னுங் குற்றமாம். அதோடு, 

அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், இரட்டைப்பச்சா என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே.

முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும், மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடல் வேண்டும்.

முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக் கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்றுபெயர்.

அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்து விடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங்
குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.

மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், கோடு என்னுங் குற்றமாம். அதை 'லைன்' (line) அல்லது 'லாக்' (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும்போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.

ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றை யொன்று தொட்டுக் கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்ற வனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டில் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.

விளையாட்டின் பயன்  : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டு நிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ் வாட்டின் பயனாம்.

                                                                                                            தொடரும் .................

Tuesday, April 10, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 5

பாகம்-4 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

அஞ்சல குஞ்சம்

விளையாட்டின் பெயர்  : ஐந்தாம் எண்ணைச் சொல்லும் போது 'அஞ்சல குஞ்சம்' என்று சொல்லப்படும் கோலியாட்டு வகை, அத் தொடர் மொழியையே
பெயராகக் கொண்டது. இதற்கு ஒரே குழியுள்ளமையால், இது 'ஒற்றைக் குழியாட்டம்' எனவும்படும்.

விளையாடுவர்களின் எண்ணிக்கை  : சிறுவருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர். 

விளையாடும் இடம்  : பேந்தாவிற்குரியதே இதற்கும்.

விளையாட்டு பொருள்  : பாண்டிநாட்டுக் கோலியாட்டிற்குக் கூறிய அளவுள்ள ஒற்றைக் குழியும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம்.

விளையாடும் முறை : ஆடகர், குழிக்கு 8 அடி அல்லது 10 அடித் தொலை விலுள்ள உத்திக் கோட்டின்மேல் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை உருட்டல் வேண்டும்.

ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்துவிட்டால் பத்தாம். அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.

முதலில் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குல் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குல் போட்டுவிடின் நான்காம்.

நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண் வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல்.

நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின் 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்; ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்; 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், 

மீண்டும் நான்காம். குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது,

ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண்வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை,

அஞ்சல குஞ்சம்,

அறுவக்க தாடி,

எழுவக்க மைனா,

எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை)

தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி).

தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம்.

பத்தாம் அடி தவறாது முந்தியடித்தவன் எதிரியின் கோலியை மூன்று தடவை அடித்துத் தள்ள வேண்டும். அடித்துத் தள்ளப்பட்ட கோலிக்காரன் முட்டி தள்ள வேண்டும்; அதாவது தன் கோலியைத் தன் முட்டிக் கையால் குறிப்பிட்ட தடவை தள்ளிக்கொண்டு வந்து குழிக்குள் வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்திவிடின் கெலிப்பாம்; இல்லாவிடின் தோற்பாம்.

பத்தாம் அடி தவறாது அடித்தவன் எதிரியின் கோலியை அடித்துத் தள்ளும் போது,  எதிரி தன் கோலி நெடுந் தொலைவிற்குப் போய் விடாதவாறு தன் முட்டிக் கையால் அதைத் தடுக்கலாம்; காலால் தடுத்தல் கூடாது; காலால் தடுப்பின் 7 தடவை முட்டி தள்ளல் வேண்டும்.

முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குல் கொண்டு வந்து நிறுத்த முடியாவிடின், அடித்தவன் அதை மீண்டும்

அடித்துப் போக்குவான். முட்டி தள்ளினவன் மீண்டும் முட்டி தள்ளுவான். இங்ஙனம் நான்கு முறை அடிப்பும் தள்ளும் நிகழலாம். ஒவ்வொரு முறைக்கும்

அடிப்பிற்கும் தள்ளிற்கும் கணக்குண்டு.

முதன்முறை 3 அடி 3 தள்ளு

2ஆம் முறை 2 அடி 2 தள்ளு

3ஆம் முறை 1 அடி 1 தள்ளு

4ஆம் முறை 1 அடி 3 தள்ளு

முட்டி தள்ளுகிறவன் குறிப்பிட்ட தடவை தள்ளியும் தன் கோலியைக் குழிக்குல் கொண்டு வந்து நிறுத்த முடியா விடின், கீழ்வருமாறு ஒரு வலக்காரத்தைக் கையாள்வதுண்டு. அவனது கோலி அடிக்க முடியாத தொலைவிலிருக்கும்போது, அடிக்கிறவன் தனக்கு வசதியுண்டாகுமாறு மேலுஞ் சற்றுத் தள்ளச் சொல்வான். அப்போது தள்ளுகிறவன், அடிக்கிற வனுக்குத் தெரியாதவாறு தன் கோலியை ஒரு கைக்குளிட்டு மறைத்து இரு கைகளையும் முட்டியாக வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றைச் சற்று முன்னாக எடுத்து வைத்துப் "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் "போதாது" என்று சொல்லின்,தள்ளுகிறவன் இன்னொரு முட்டிக் கையை முந்தினதினும் சற்று முன்பாக எடுத்து வைத்துப் "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் 

மீண்டும் "போதாது" என்று சொல்லின், தள்ளுகிறவன் மீண்டும் பின்னாக இருக்கும் கையை முன்னாக எடுத்து வைப்பான். அடிக்கிறவன் கோலிக் கை எதுவென்றும் வெறுங்கை எதுவென்றும் தெரியாமல், "போதாது", "போதாது" என்று மேலும் மேலும் சொல்லச் சொல்லத் தள்ளுகிறவன் தன் இரு கைகளை யும் மாறி மாறி முன்னாக எடுத்து வைத்து, 

இறுதியில் கோலிக் கையைக் குழிமேல் வைத்துக்கொண்டு, "போதுமா?" என்று கேட்பான். அடிக்கிறவன் குழிக் கையை வெறுங்கை என்று கருதிக்கொண்டு, "போதும்" என்பான்; 

உடனே தள்ளுகிறவன் தன் கோலியைக் குழிக்குள் இட்டுவிட்டுத் தன் கையை எடுத்துவிடுவான்; 

அடித்தவன் ஏமாறிப் போவான்; தள்ளினவன் கெலித்துவிடுவான். இதற்கு மீன் பிடித்தல் என்று பெயர்.

தள்ளுகிறவன் மீன் பிடிக்கலாமா பிடிக்கக் கூடாதா என்பது, முட்டி தள்ளு முன்னரே முடிவு செய்யப்பெறும்.

                                                                                                                 தொடரும்...................

Monday, April 9, 2012

நாம் யார் -45

பாகம்-44 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தமிழகம் வரவரக் குன்றியமை

ஒரு காலத்தில், முழுகிப் போன தமிழ் நாடாகிய பழம் பாண்டி நாடும் நாவலந் தீவு என்னும் இந்தியா தேசமும் தமிழகமாயிருந்தன. பழம் பாண்டி நாடு மூழ்கிய பின், விந்தியமலைக்கு வடக்கிலுள்ள நிலப்பகுதி பிராகிருதம் என்னும் வடநாடாகி, ஆரியர் வந்தபின் ஆரியாவர்த்தம் என்னும் ஆரிய நாடாக மாறிற்று.

அதன் பின், குசராத்தி மராட்டியம் ஒட்டாரம் (ஒரிசா) ஆகிய நாடுகள், முன்பு திரவிடமாக மாறிப் பின்பு ஆரியமாகத் திரிந்தன.

அதன்பின், வடுகம் என்னும் தெலுங்கநாடும் பின்னர்க் கன்னட நாடும் மாறின. கன்னடநாடு 7ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடாகக் கருதப்பட்டது. அதனால், வட கன்னடத்திலுள்ள கோகர்ணம் அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரின் தேவாரப்பாடல் பெற்றது. அம் மட்டத்திற் கீழ்கரை வரையுள்ள இற்றைத் தெலுங்கு நிலமும், அன்று தமிழ் நிலமாயிருந்தது.

கன்னட நாடு தோன்றியபின், தெலுங்க நாட்டின் தென் எல்லை அல்லது தமிழகத்தின் வடஎல்லை, சற்றுத் தெற்கே தள்ளி வந்தது.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்,மூவேந்தர் தமிழ்நாடு களுள் ஒன்றான சேரநாடு, கேரளநாடு அல்லது மலையாள நாடு என்னும் நாடாகப் பிரிந்து விட்டது.

எஞ்சிய சோழ பாண்டிநாட்டு நிலப்பரப்பே, இன்று தமிழ்நாடும் புதுவை நாடுமாகப் பிரிந்த தமிழகமாக இருந்து வருகின்றது.

இதிலும் சில வட்டங்களைக் (கூற்றங்களைக்) கன்னடர் சுறண்டப் பார்க் கின்றனர்.

தமிழ்த் திரிபினாலேயே, தமிழர் பல்வேறு சிற்றினங்களாக மாறினர்; பல்வேறு நாடுகளும் தோன்றின. அதனால் தமிழகமும் வரவரக்குறுகிற்று. இனிமேலுங் குறுகாவாறு, செந்தமிழ்நடையைப் போற்றிக்காத்தல் வேண்டும்.

ஆரிய நச்சுத்தன்மை இன்னும் அறாமை

மறைமலையடிகள் தனித் தமிழ்க்கிளர்ச்சி தொடங்கிய 1916ஆம் ஆண்டி லிருந்து, வடசொல் வழக்கிற்கு எத்தனையோ வகையில் எதிர்ப்பிருந்து வந்தும், இன்னும் ஆரியர் ஒல்லும் வகையிற் செல்லும் வாயெல்லாம் வடசொல்லைப் புகுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர்.

சேலங் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா.அச்சுத நாயர் (எம்.ஏ.) மலையாள நாட்டிற்பூங்குன்னம் என்னும் ஊரிலிருந்தபோது, அவ்வூர்ப்பிராமணர், அவ்வூர்ப் பெயரை புஷ்பகிரி என்று மாற்ற நெடுநாட் பெருமுயற்சி செய்து, இறுதியிற் பேரா.அச்சுத நாயரின் துணை வேண்டினர். அதற்கு அவர் இசையாத தால், அப் பெயர் மாற்றம் நிகழ வில்லை.

ஆங்கிலக் கல்வி

தமிழுக்கு நெருக்கமாயும் அறிவியல் இலக்கியப் பெட்டகமாயும் அமைப்பிலும் வழக்கிலும் உலகப் பொது மொழியாயும் உள்ள ஆங்கிலம், தமிழர் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் கல்வி வாயிலாயிருத்தல் வேண்டும். தமிழ் வாயிற் கல்வியால் தமிழ்ப்பற்று வந்து விடாது;ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுப் போய்விடாது. தமிழ் வாயிற் கல்வியே தமிழ்ப்பற்றைக் காட்டுமென்பது, ஆங்கிலர் மீது வெறுப்பும் ஆங்கில வறியாமையுங் கொண்ட அரசியற் கட்சித் தலைவராற் பரப்பப்பட்ட, குருட்டு மடக் கூற்றாகும்.இரசியரும் சப்பானியரும் போல் தமிழர் புதுப்புனைவாளராகும் வரை, ஆங்கிலவாயிற் கல்வி இருந்தே தீரல் வேண்டும். குளத்தொடு புலந்து குளியாமலும் கூவவொடு புலந்து குடியாமலும் போனவனுக்கு, கேடேயன்றி ஆக்கமில்லை.

தனித்தமிழ்

தமிழ் என்பது தனித்தமிழே. தனித்தமிழா லன்றிக் கலவைத் தமிழால் தமிழன் உயர்வடைய முடியாது. தமிழென்று பெயரிட்டுக் கலவைத்தமிழ் வழங்குபவன்,  அவலை நினைத்துக்கொண்டு உரலையிடிப்பவனே யாவன்.

ஆராய்ச்சியாளரைப் போற்றலும்(கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.D. நாயுடு) போன்ற புதுப்புனைவாளரை (inventors)ஊக்கலும்

செயற்கை மழை பொழிவிப்பு, கடல்நீரை நன்னீராக்கல், மண் ணினின்று நேரடியாக உணவுருவாக்கல், பாலையை மருதமாக்கல், கரடுகளையும் பாறைகளையும் தகர்த்து மனைநில மாக்கல், கதிரவன் வெம்மையைச் சமையற்குப் பயன்படுத்தல், நச்சுக்காய்கனிகளை நல்லனவாக்கல், கனிதரா மரஞ்செடி கொடிகளைக் கனிதரச் செய்தல்,வெப்பமானகாலத்திலும் இடத்திலும் குளிர்காற்று வீசுவித்தல், தீங்கு செய்யும் பூச்சிகளையும் ஊரிகளையும் அறவே தீர்த்தல், மருந்திலா நோய்கட்கு மருந்து காண்டல், உள்ளக் கருத்தைஅறிதல், இறந்தவனை எழுப்பல், பேரொலியைச் சிற்றொலியாக்கல், மூளையைத் திருத்தி மடயனைமதிஞனாக்கல், கூனுங் குருடும் ஊமுஞ் செவிடும் முதலிய எச்சப் பிறவிகளைச் சீர்ப்படுத்தல் முதலிய பல்வேறு அருஞ்செயல்களை, அறிவியற் பெருமதிஞரைக் கொண்டும் சூழ்ச்சியத் திறவோரைக் கொண்டும்ஆற்றுவித்தல்.

பல்கலைக்கழகங்களில்ஆராய்ச்சிப் பதவிகளில் இருக்கும் தமிழ்ப்பகைவரை அகற்றல்

பேரா. (P.T.)சீனிவாச ஐயங்காரும் பேரா. (V.R.)இராமச்சந்திர தீட்சிதரும் போல், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் என்று கொள்பவரையே, பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக அமர்த்துதல் வேண்டும்.

அறுவகை ஆராய்ச்சித் தகுதி:

பரந்த கல்வி, மதிநுட்பம், நடுவுநிலை,அஞ்சாமை, தன்னல மின்மை, மெய்யறியவா.

இலவசக் கட்டாயத் தொடக்கக்கல்வி

துவக்கக் கல்வியால்தான்,தாழ்த்தப்பட்ட வகுப்புப் பொது மக்கட்கு நாகரிகமும் தன்மான வுணர்ச்சியும் துப்புரவும் உண்டாகும். அதனால் தீண்டாமை நீங்கித் தமிழின ஒற்றுமை ஏற்படும். ஒருசிலர் கல்வி கற்பதால் மட்டும் முன்னேற்றம் வந்து விடாது. பிற வகுப்பாரொடு குடியிருக்கவும் கடைத் தெருவிலிருந்து வணிகஞ்செய்யவும், கல்வியறிவும் துப்புரவும் ஒழுக்கமும் இன்றியமையாதன. இவ்வகை முயற்சியில் நாடார்குலத்தினரைப் பின்பற்றல் வேண்டும்.

பொதுத் தேர்தலில் தகுந்த தலைவரைத்தேர்ந்தெடுக்கவும், தமிழ்ப் பொத்தக வெளியீடுகள் பல்கவும், சிறந்த அறிஞரும் புதுப்புனைவாளரும் தோன்றவும், புலவர் போற்றப்படவும்,கட்டாயத் துவக்கக் கல்வி பெரிதுந் துணை செய்யும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்க்கு வேலையுங்கிடைக்கும்.

திராவிடர் யார் ?

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் , கேரளாவிலும் உள்ள தமிழ் குடிகளை திராவிடர்கள் .

தமிழர் யார்?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதே தமிழர் கொள்கை. தமிழைப் போற்று வாராயின், தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும், ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல்நாட்டாரும் தமிழரே.

திராவிட நாடு ?

பழந்தமிழ் நாடே திராவிட நாடு ..

நாம் யார் - தமிழர் தான்                                                                                                            

Sunday, April 8, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 4

பாகம்-3 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.
வட்டப்பேந்தா

 விளையாட்டின் பெயர் : பேந்தா எனப்படும் வட்டக் கோட்டிற்குள் உருட்டி யாடுங் கோலியாட்டு வகை வட்டப் பேந்தாவாம். இது சதுரப் பேந்தாவுடன் ஒப்புநோக்கி வட்டப் பேந்தா எனப்பட்டது.

ஆடுவார் எண்ணிக்கை : மூவர் முதல் எத்துணைப் பேராயினும் இதை ஆடலாம். ஆயினும், ஐவர்க்குக் குறையாதும் பதின் மர்க்குக் கூடாதும் இருப்பின் சிறப்பாம்.

ஆடுகருவி : ஆடகருள் ஒவ்வொருவனுக்கும் பல கோலிகள் இருத்தல் வேண்டும். அவற்றோடு தெல் என்னும் ஒரு பெருங்கோலி ஒவ்வொரு வனிடத்துமாவது எல்லார்க்கும் பொதுவாகவாவது இருத்தல் வேண்டும்.

ஏறத்தாழ முக்கச விட்டமுள்ள ஒரு வட்டக்கோடு கீறப்படும். அதன் நடுவில் ஒரு குழி கில்லப்படும். வட்டத்தின் அடியில் கால் வட்டம் அமையுமாறு ஒரு குறுக்குக் கோடும் கீறப்படும்.

கால் வட்டமுள்ள பக்கத்தில், வட்டத்தினின்று ஏறத்தாழ முக்கசத் தொலைவில்,  உத்தி கீறப்படும். அதற்கு மேலும் இரு பக்கத்தும் கவியுமாறு ஒரு தலைகீழான பகரக்கோடு இடப்படும். அது மூடி எனப்படும். அதை இன்று டாப்பு (Top) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

ஆடிடம் : முற்றமும் புறக்கடையும் பொட்டலும் வெளி நிலமும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடகரெல்லாரும் முதன் முதல் உத்தியில் நின்றுகொண்டு, ஒவ்வொருவனாய்த் தன் தன் கோலியை வட்டத்தின் நடுவிலுள்ள குழியை
நோக்கி உருட்டல் வேண்டும். யார் கோலி குழிக்கு அண்ணணித்தாய் (அதாவது மிக நெருங்கி) நிற்கின்றதோ, அவன் முன்னும்; அதற்கு அடுத்து நிற்குங் கோலிக்காரன் பின்னும்; அதற்கடுத்து நிற்குங் கோலிக்காரன் அதன் பின்னுமாக; இங்ஙனம் குழியண்மை வரிசைப்படி எல்லாரும் ஆடல் வேண்டும். 

கோலியை உருட்டும்போது ஒருவன் கோலி இன்னொருவனதை அடித்து விட்டால்,  எல்லார் கோலியும் மீண்டும் ஒவ்வொன்றாய் உருட்டப்படும். கோலிகள் ஒன்றோடொன்று அடிபடுவது சடபுடா எனப்படும்.

ஆடுவார் வரிசை யொழுங்கு இவ்வாறு துணியப்பட்ட பின், முந்தி யாடு கிறவனிடம் ஏனையோரெல்லாரும் ஆளுக்கொரு கோலி கொடுத்துவிடல் வேண்டும். அவன் அவற்றுடன் தன் கோலியையுஞ் சேர்த்து, எல்லா வற்றை யும் மொத்தமாய் வட்டத்திற்குள் உருட்டுவான். அதன்பின், தெல்லால் (அதாவது குண்டால்) முக்கால் வட்டத்திலுள்ள கோலிகளுள் எதையேனும் எவற்றையேனும் அடிப்பான். கால் வட்டத்துள் உள்ளவற்றை அடித்தல் கூடாது; 

அடிப்பின்,  பச்சாவாம். அதற்கு ஒரு கோலி போட்டுவிட வேண்டும். அதன்பின், அடுத்தவன் ஆடுவான். 

உருட்டுவான் யாராயினும், மூடியை மிதிக்கவாவது தாண்டவாவது கூடாது. அங்ஙனஞ் செய்யின் தவறியவனாவன்.

அதனால் அடுத்தவன் ஆட நேரும்.மூடி பொதுவாக முதலிற் போடப்படுவ தில்லை. பலமுறை சொல்லியுங் கேளாது, ஒருவன் உத்திக்கு முன்னாற் கால் வைத்து முன்புறமாகச் சாய்ந்து அடிப்பின், மூடி போடப்படும். அது போடப் பட்ட பின் அதை மிதிப்பின் அல்லது தாண்டின் பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு காய் போட்டு விடவேண்டும்.

உருட்டப்பட்ட கோலிகளுள் ஏதேனும் ஒன்று நேரே குழியில் விழுந்துவிடின், வெற்றியாம். அவன் காய்களை அடிக்கத் தேவையில்லை. உருட்டினவன் திரும்பவும் ஆடலாம்.

முக்கால் வட்டத்துள் உள்ள கோலியை அல்லது கோலிகளை அடிப்பின், அடிபட்ட கோலியனைத்தும் வட்டத்தி னின்று வெளியேறிவிடல் வேண்டும்.
அங்ஙனம் வெளியேறி விடின் அது ஒரு வெற்றியாம். குழியிற் போட்டாலும் காயடித் தாலும், ஏனையோரெல்லாரும் கெலித்தவனுக்கு ஒவ்வொரு காய்
கொடுத்துவிடல் வேண்டும். குழியுள் போட்டுக் காயும் அடித்து விடின் இரட்டைக் கெலிப்பாதலின், ஏனையோர் இவ்விரு காய் கொடுத்துவிடல் வேண்டும்.முக்கால் வட்டத்துள் உள்ள காய்களை அடிக்கும்போது, குழிக் காயையும் அடிக்கலாம்; வெளிக் காயையும் அடிக்கலாம். வென்றவன் என்றும்
திரும்பியாடுவான்.

குழியிலும் போடாமல் முக்கால் வட்டத்திற்குள் உள்ள காயையும் அடிக்காமல் போனவன், தன் ஆட்டத்தை இழந்து விடுவான். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அன்று ஒருவரும் காய் போடுவதில்லை.
அடித்த காயாவது அடிக்கப்பட்ட காயாவது வட்டத்தை விட்டு வெளியே போகாவிடின், பச்சா என்னுங் குற்றமாம். அதற்கு ஒரு கோலி அடுத்தவனிடம்
கொடுத்துவிட்டு, ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். 

குழியிற் போட்ட விடத்தும் அடித்த காய் அல்லது அடிக்கப்பட்ட காய் வெளியேறாவிடின், இரட்டைப் பச்சாவாம். அன்று, அடித்தவன் இரு காய் கொடுத்து விட்டு ஆட்டத்தை விட்டுவிடல் வேண்டும். அடுத்தவன் அவற்றையுஞ் சேர்த்து உருட்டுவான். 

அவன் கெலித்துவிடின், அப் பச்சாக் காய்களையும் வழக்கப்படி கொடுக் கிறவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்; கெலிக்காவிடின் பச்சாக் காய்கள்
பழங்காய்களுடன் சேர்த்து உருட்டப்பெறும். எவன் எங்ஙனம் கெலிப்பினும், பழங்காய்களை ஒருபோதும் கெலிப்புக் காயாகப் பெறல் முடியாது. ஆட்டம் முடியும் வரை, அவை ஒரு முதல்போல் இருந்துகொண்டே யிருக்கும். ஆட்டம் முடிந்தபின், அவனவன் முதற்காய் அவனவனைச் சேரும்.

ஒருவன் கெலித்தவிடத்து இன்னொருவனுக்குப் போடக் காயில்லாவிட்டால், அவன் கடனாகவாவது விலைக்காவது பிறனிடம் வாங்கிக்கொள்ளலாம்; அல்லாக்கால், அவன் முதலில் இட்ட காயை இழந்துவிடுவான்.

எல்லாரும் ஆடி முடிந்தபின், ஒருவரிடமாவது பலரிடமாவது காய் மிகுதி யாய்ச் சேர்ந்திருக்கும். அவற்றுள் அவரவர் சொந்தக் காய்க்கு மேற்பட்ட வெல்லாம் கெலிப்புக் காயாகும்.

ஆட்டின் பயன் : கோலியாட்டின் பொதுப்பயனாக முற்கூறப்பட்டவற்றொடு, பெருந்தொகையான கோலிகளை எளிதாய் ஈட்டிக்கொள்வதும், சிறு முதலையிட்டுப் பேரூதியம் பெறும் கருத்துறவும், இவ் ஆட்டின் பயனாம்.

                                                                                                                    தொடரும்...............

Saturday, April 7, 2012

நாம் யார் -44

பாகம்-43 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

இன்று பிராமணியத்தை நடத்தி வருபவர் தமிழரே

பண்டை நாளில், பிராமணர் தம் வெண்ணிறத்தாலும் வேதமந்திர வெடிப்பொலி யாலும் வேறு வழியாலும் மூவேந்தரையும் வயப்படுத்தி, அவர் வாயிலாகத் தம் கொள்கையைப் பொதுமக்களிடம் வலிந்து புகுத்தினர். இக்காலத்தில், சில கட்சித் தலைவரையும் சில செல்வரையும் துணைக்கொண்டு, தம் கருமத்தை முடிக்கப் பார்க்கின்றனர்.

ஆயினும், அவருள்ளும் ஒள்ளிய மனமும் தெள்ளிய அறிவு முடையார் உளர். தமிழரெல்லாரும் நல்லவரல்லர்; பிராமண ரெல்லாரும் தீயவரல்லர். திருவதங் கோட்டில் (Travancore) தீண்டாதார்க்கு முதன் முதல் திருக்கோவில்களைத் திறந்து விட்டவர் (C.P.) இராமசாமி ஐயரே. வரலாற்று நூல் தமிழ்த் தொண்டருள் தலை சிறந்த மூவர் பிராமணரே.

சின்னஞ்சிறு தொகையினரும் போர் மறமும் வல்லுடம்பும் இல்லாத வருமான பிராமணர், காட்டிக் கொடுக்கும் போலித் தமிழருதவியின்றித் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாக எதுவுஞ் செய்ய முடியாது.

முத்தமிழ்க் காவலர்

(1) தவத்திருக் குன்றக்குடி யடிகள்

அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், கட்டாய இந்திக் கல்வியைக் கண்டித்தும், தமிழ்நாடு முழுதும் இடைவிடாது அல்லும் பகலும் இனிய தமிழிற் சொற்பொழிவாற்றியும், ஆண்டுதோறும் பறம்புமலையிற் பாரிவிழா நடாத்திப் பாரி புகழைப் பரப்பிப் பல் புலவர்க்குச் சிறப்புச்செய்தும், திருக் கோவில் களில் தமிழ் வழிபாடு நடைபெறச் செய்தும், தமிழ்க் காப்பு நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்புப்பணியில் ஈடுபடுமாறு தமிழக அரசைத் தூண்டியும், தமிழரின் இருமை நலத்திற்கும் அருந்தொண்டாற்றியவர், தமிழ்நாட்டுத் திருமடத் தலைவர் அனைவருள்ளும் தலைசிறந்த தவத்திருக் குன்றக்குடி அடிகள் ஆவர்.

(2) தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை

நீண்ட காலமாகக் கிடைக்காத நூல்கள்நேர்மையான விலைக்குக் கிடைக்கு மாறும், விளங்காதசெய்யுட் பனுவல்கள் எளிதாக விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களின்மூலத்தையும் உரையையும் ஆங்கிலமொழிபெயர்ப்பையும், திண்ணிய வெண்டாளில் முத்துப்போன்ற எழுத்திற் செவ்வையாக அச்சிட்டு,கண்கவர் கவின் கட்டடங் கட்டி, உலக முழுதும் பரப்பித் தமிழ் நூல் வெளியீட்டுத் துறை யில் வாகைசூடியும், இந்தி யெதிர்ப்புப் போராட்டத்தில் ஆழ்ந்து ஈடுபட்டும், ஓய்வு பெற்ற தமிழ்ப் புலவர்க்கு வேலை யளித்தும், சென்னை வாணர்க்குச் சிறப்பாகப் பயன்படும் மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியும், ஆங்காங்கு நூற்காட்சி யமைத்தும், ஆண்டு தோறும் மறைமலையடிகள் விழாக்கொண்டாடியும், தனித்தமிழ்த் தொண்டரை ஊக்கியும், இடைவிடாது தமிழைக் காத்து வருபவர், தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை ஆவர்.

(3) பாவலர் பெருஞ்சித்திரனார்

பட்டம் பதவியோ செல்வச் சிறப்போ அமைச்சர் துணையோ சற்றும் இல்லாதிருந்தும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் அரசுகளும் வெட்கித் தலைகுனியவும், அகப்பகையும் புறப்பகையும் அடியோ டொழியவும், தமிழன்பர் தம் தவப்பயனை வியந்து மகிழவும், (சித்தியம் ஆரியம் சேமியம் என்னும்) முப்பெரு மொழிக் குடும்பங்களுக்கும் குமரிநாட்டுக் குலத்தமிழே உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யென்று முரசறைந்து சாற்றவும், மக்களினமுள்ள காலமெல்லாம் முத்தமிழ் அரியணையில் வீற்றிருந்து மொழியுலகம் முழுவதையும் ஒருகுடைக்கீழ் ஆளுமாறும், தமிழன் தலை நிமிர்ந்து ஏறுபோற் பீடுநடை கொள்ளுமாறும், எருதந்துறை ஆங்கிலச் சொற் களஞ்சியத்தையொத்த, பன்னிருமடலச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்கவும் வெளியிடவும், இதுவரைஎவரும் செய்யாத வகையில் 'தென்மொழி'த் திட்டம்வகுத்து, எதிர்காலத் தமிழ் வரலாற்றில் தம்பெயரைப் பொன்னெழுத்திற் பொறிக்குமாறு செய்து கொண்டவர், 'தென்மொழி' ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார் ஆவர்.

                                                                                                          தொடரும்..........................

Thursday, April 5, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 3

பாகம்-2 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் , தொடர்ந்து விளையாடுவோம்.

பேந்தா
சதுரப் பேந்தா

ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டுப் பேந்தா எனப் படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்கு நாட்டில் சிறப்பாய் விளையாடப் படுவது பற்றி, திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.

ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள்சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லு மாயின், தெறித்தடிக்கப்படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித் தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தி யெனப்படும்.

ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.

ஆடுமுறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின் மேல் நின்று கொண்டு,  ஒவ்வொருவனாய்க் கோலியைப் பேந்தா நோக்கி உருட்டல் வேண்டும்.பேந்தாவிற்கு உள்ளே அல்லது அருகே யார் கோலி நின்றதோ, அவன் மேற்கொண்டு ஆடல் வேண்டும். பேந்தாவிற்கு வெளியே அல்லது மிக வெளியே யார் கோலி நின்றதோ, அவன் தன் கோலியைப் பேந்தாவின் நடுக்கோட்டு நடுவில் வைத்தல் வேண்டும்.

ஆடும் வலியுடையவன் மீண்டும் உத்தியில் நின்று கொண்டு தன் கோலி யைப் பேந்தாநோக்கி உருட்டல் வேண்டும். கோலி பேந்தாவிற்குள்ளேனும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்குள்ளேனும் போய் நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று
நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், பேந்தாவிற் குள்ளிருக் குங் கோலி யை அடித்தல் வேண்டும். அவ்வாறு அடித்த பின், அடிக்கப்பட்ட கோலியன்றி

அடித்த கோலி பேந்தாவிற்குள்ளும் பேந்தாவினின்று நால்விரற் கிடைக் குள்ளும் நிற்றல் கூடாது; நிற்பின் தவறாம். அதன்பின் அடுத்தவன் ஆடல் வேண்டும். அங்ஙனமன்றிப் பேந்தாவினின்று நால்விரற் கிடைக்கப்பாற் போய் நிற்பின், அடித்தவன் மீண்டும் உத்திக்குச் சென்று அதன்மேல் நின்றுகொண்டு, எதிரியின் கோலியை அடித்தல் வேண்டும். அங்ஙனம் அடிக்குமுன், எதிரியின் கோலி பேந்தா விற்கு வெளியில் நிற்பின், "பேந்தா செத்து ஆறு மாசம்" என்று கூறுதல் வேண்டும்; அல்லாக்கால் தவறாம். தவறிய போதெல்லாம் ஆடகன் மாறல் வேண்டும்.

அடிப்பவன் மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும் போது, எதிரியின் கோலியை மூன்று தரம் தொடர்ந்து அடித்தல் வேண்டும். அதனால் எதிரியின் கோலி பேந்தாவிற்குத் தொலைவிற் போக்கப்படுவதுண்டு.

மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிக்கும்போது, எதிரியின் கோலி பேந்தாவிற்குள் இல்லாக்கால், அடிக்குங் கோலி பேந்தாவிற்குட் சென்று நிற்பினும் குற்றமில்லை.

ஒருவன் பேந்தாவின் அருகிற்போய் நின்ற தன் கோலியால் எதிரியின் கோலியை அடிக்கும்போது, "பேந்தாமேற் கைபடும்" என்று அடிப்பவன் முந்திச் சொல்லினும், "பேந்தாமேற் கைபடக்கூடாது" என்று அடிக்கப்படும் கோலிக்காரன் முந்திச் சொல்லினும், அவ்வாறே நிறைவேற்றப்படல் வேண்டும்.

அடிக்கப்படும் கோலி ஒரு பள்ளத்திலிருப்பின், அடிப்பவன் "நேர்" என்று சொல்வான். உடனே, அடிக்கப்படும் கோலியை எதிரி எடுத்து அடிப்பவனுக்கு எதிராகப் பள்ளநேருக்குச் சமநிலத்தில் வைத்தல் வேண்டும்.

அடிக்கப்படும் கோலி ஓர் இடுக்கிலிருப்பின் அடிப்பவன் "சாண்சூடி சடாபுடா" என்று சொல்வான். உடனே எதிரி அதை எடுத்து அடிப்பவனுக்குத் தெரியும்படி வைத்தல் வேண்டும். "சாண்சூடி சடாபுடா இல்லை" என்று எதிரி முந்திச் சொல்லிடின், அதை எடுத்து வைக்க வேண்டுவதில்லை.

ஒருவன் தன் கோலியால் அடிக்கும்போது, அதை வழிச்செல்வோர் யாரேனும் தடுத்துவிடின், அடிப்பவன் "தடுத்தால் தூர்" என்று சொல்வான். அதன்பின், அவ்வழிச் செல்வோர் தம் காலால் அதைத் தள்ளும்படி வேண்டப்படுவர்.

அடிக்கப்படும் கோலி உத்திக்குக் கிட்டே இருக்கும் போது அதற்குரியவன் அவ்விடத்தினின்று உத்திக்குத் தாண்டிவிடின், அடிப்பவன் தன் கோலியைத் தன் கண்ணில் வைத்தாவது உயர்த்திய கையில் வைத்தாவது எதிரியின் கோலியின் மேலிட்டடித்தல் வேண்டும். அவ் அடி தவறின், மீண்டும் நில மட்டத்திற் கையால் தெறித்தடிக்கலாம். அவ் வடியும் தவறின் தோல்வியாம்.

மூன்றாம் முறை உத்தியில் நின்று அடிப்பவன் எதிரியின் கோலியைத் தொடர்ந்து மூன்று தரம் அடித்துவிடின் எதிரி தன் கோலியைத் தன் முட்டிக் கையால் ஒரு தடவை அல்லது பல தடவை தள்ளிப் பேந்தாவிற்குள் கொண்டு வந்து நிறுத்தல் வேண்டும். அங்ஙனம் நிறுத்திவிடின், அவனே கெலித்தவ னாவன்; அல்லாக்கால் தோற்றவனாவன். முட்டிக்கையால் கோலியைத் தள்ளுவதை முட்டிதள்ளல் என்பர்.



                                                                                                                 தொடரும் ...............

Wednesday, April 4, 2012

நாம் யார் -43

பாகம்-42 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தமிழ் வளர்த்த தனிப்பெரும் முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

1925-ற்கும் 1950-ற்கும் இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வரா யிருந்த தமிழர் அனைவருள்ளும், வயிறு வளர்க்காது தமிழ் வளர்த்த தனிப்பெரு முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர். கணிதப் பேராசிரியரா யிருந்தும் பெருங் கல்லூரிக்குச் சென்று பெருஞ்சம்பளம் பெறாது சேலத்திலேயே நிலைத்திருந்து, பண்பட்ட தமிழரையே பாடத்துறைத் தலைமையாசிரியராக அமர்த்தியும், பிற கல்லூரிகளில் இடம்பெறாத ஏழை மாணவர்க்கெல்லாம் இடந்தந்தும், திருக்குறட் கழகம் நிறுவிவகுப்பு நடத்தியும், திருக்குறட்கு உரை வரைந்தும்,பெரியார்க்குத் துணை நின்றும், கல்லூரிகளிலும் மன்றங்களிலும் சொற்பொழிவாற்றியும்,சாத்திரியார் கலைச்சொற் குழுவி லிருந்து பணிபுரிந்தும்,   மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் வேண்டிய ஏந்துகளை யெல்லாஞ் செய்து அவரின் மொழி யாராய்ச்சியை முற்றுவித்தும், தம் துணையாசிரியர் சிலரைப் பிற கல்லூரி முதல்வராக்கியும், விருந்தோம்பி வேளாண்மை செய்து இறுதிவரை தமிழ் வாழ்வு வாழ்ந்தும், இறவாப்புகழ் பெற்றவர் சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்.

தமிழரை முன்னேற்றிய நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை

இரண்டாந் தரமா யிருந்த சேலம் நகராட்சிக் கல்லூரியை முதற்றரமாக்கியும், ஆரியத்தை யெதிர்த்தும், இராமசாமிக் கவுண்டரையூக்கியும், மறைமலை யடிகளைப் போற்றியும்,தமிழிசை மன்றம் நிறுவியும், தமிழையும் தமிழரையும் முன்னேற்றியவர், சேலம் நகராட்சித்தலைவர் இரத்தினசாமிப் பிள்ளை.

பேராய வீழ்ச்சியும் தி.மு.க.ஆட்சியும்

நாட்டு விடுதலைக் கொள்கை யின்மையால் நயன்மைக் கட்சி தோல்வி யுற்றது. நாட்டு மொழிப் பற்றின்மையால் பேராயக்கட்சி வீழ்ந்தது. திராவிடர் முன்னேற்றக் கழகம் 1967-இல் தமிழ்நாட்டு ஆட்சியைக்கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரையார் சென்னை நாடென் றிருந்ததைத் தமிழ்நாடு என மாற்றினார்; சீர்திருத்தத் திருமணத்தையும் தமிழ்த் திருமணத்தையும் சட்ட முறைப்படி செல்லுபடியாக்கினார்;  கோவை மாணவர் கிளர்ச்சி செய்த பின், சட்டப் பேரவையில் இந்தி விலக்குத் தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பேராயம் இந்தியை ஏற்றுத் தமிழ்நாட்டிற்குக் கேடு செய்தது. ஆங்கிலேயன் தமிழர்க்கு மீட்பனாகவன்றி அடிமைப் படுத்தியாக வரவில்லை. அவன் வந்த நிலையில், தமிழன் நாயும் கழுதையும் பன்றியும் போல் பிராமணனின் எச்சிலுண்டியைத் தின்று கொண்டிருந்தான். அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப் படுத்தினவன் ஆங்கிலேயனே. அவன் வந்திராவிடின், இந்தியா முழுதும் ஒருபோதும் ஓராட்சிக்குட்பட்டிராது. இரசியா கைப்பற்றியிருப்பின் விடு தலையே பெற்றிருக்க முடியாது. கிழக்கிந்தியக் குழும்பாட்சியில் தான் ஊழலிருந்தது.

இங்கிலாந்தரசு இந்திய ஆட்சியை மேற்கொண்டதிலிருந்து மேன்மேலும் சீர்திருத்தம் நிகழ்ந்து கொண்டேவந்தது. இறுதியில், இந்தியரைத் தம்மாட்சிக்குத் தகுதிப்படுத்திய பின் தானே நீங்குவதற்கிருந்தான் ஆங்கிலேயன். பேராயந்தான் அவனை முந்தித் துரத்தியது. அதனால் இந்தியா அடைந்த பொருளிழப்பும் ஆளிழப்பும் அமைதிக் குலைவும் கொஞ்ச நஞ்சமல்ல. பேராயம் நயன்மைக்கட்சிக்கு மாறாகவே பிராமணரால் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டது. அதைத் தோற்றுவித்த பிராமணர் இவ்வுல கினின்றோ அக் கட்சியினின்றோ நீங்கி விட்டனர். அடிமைத்தனமும் தன்னலமுங் கொண்ட தமிழரே அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக் கின்றனர். பெருநன்மை செய்த ஆங்கிலேயனைப் பெருந்தீங்கு செய்தவனாகக் கூறுவது, கழுவாயில்லா வழுவாயாகும்.இக் குற்றம் பேராயத்திற்சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கோ பன்மடங்கு பெரிதாகும்.

ஆங்கிலவரசு பல்கலைக்கழகக் கல்வி நிலையங்களில் தான், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க்கு இடந்தர முடிந்தது. மேல்வகுப்பார் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளி களிலும், கீழ் வகுப்பாரும் இடம்பெறச் செய்தது நயன்மைக் கட்சி யாட்சியே. அதன்பின்னரே, காந்தியடிகளின் முயற்சி யால்,பேராயமும் நயன்மைக் கட்சியைப் பின்பற்றியது. ஆயினும், குலங்களின் பிறவித் தொடர்பைக் காந்தியடிகள் நீக்க இயலவில்லை.

பேராயத் தமிழத் தலைவர் செய்த நன்மையெல்லாம், மனு தரும முறைப்படி பிள்ளைகள் பெற்றோர் தொழிலை மேற்கொள்ள வேண்டு மென்று ஆச்சாரியார் புகுத்த விருந்த தொடக்கக் கல்வித் திட்டத்தைத் திரு. காமராசர் தடுத்ததும்; திருவையாற்று அரசர் கல்லூரி விடுதியில்,பிராமணன் சமைத்த வுண்டியைப் பிராமண மாணவர்க்குத் தனியிடத்திற் படைத்து வந்த வழக்கத்தை, தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவர் நாடிமுத்துப் பிள்ளை நிறுத்தியதுமே. இவை நயன்மைக்கட்சி யாட்சியிலும் நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதே யில்லை.

ஆங்கிலேயர் வந்திராவிடின், ஒரேயொரு வையாபுரி தவிர மற்றெல்லா அமைச்சரும் பிராமணரா யிருந்திருக்கக் கூடிய நிலைமை, இன்றில்லையே என்றெண்ணித்தான், அக் குலத்தார், நயன்மைக்கட்சியையும், அதன் கான் முளையாகிய தி.மு.க.வையும், காட்டிக் கொடுக்கும் கூட்ட வகையார் (Quislingvariety) என்று பழிக்கின்றனர். இத்தகைய குற்றச்சாட்டு, நாட்டு மக்கள் வாயினின்று வரத்தக்கதே யன்றி, நாட்டைக் கெடுக்கும் வந்தேறிகள் வாயினின்று வரத்தக்கதன்று.

தி.மு.க. பொதுவுடைமைக் கொள்கையைப் படிப்படியாகத் தழுவுவதால், பொதுவுடைமைக் கட்சி இனிப் பிரிந்து நிற்க வேண்டுவ தில்லை.

தமிழ்நாடு விடுதலை பெறவில்லை

வெள்ளைக்காரனை விரட்டி விட்டோமென்றும், நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தோமென்றும், பேராயத்தார் நாக்கடிப்பாகவாய்ப் பறை யறைந்து வரினும், ஆங்கிலன் நீங்கிக்கால்நூற்றாண்டான பின்னும், தமிழ்நாடு விடுதலை பெறவில்லை.

சமற்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடைப்பட்ட நிலைமை, தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்ட தொத்ததே. தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற முறையிலேயே தமிழின்  தாழ்வு சமற்கிருத வுயர்வு என்னும் நிலைமையுள்ளது. தாக்கு வோனைத் தாக்காதுதற்காப்போன் விடுதலை பெற முடியாது. பிராமணர் இக்காலத்தில் தம்மை நிலத்தேவர் என்று சொல்ல முடியாதாகையால், சமற்கிருதம் தேவமொழி யென்று சொல்லித் தம் மேம்பாட்டை நிலைநிறுத்த முயல்கின்றனர். கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலை யடைந்து தன் பழம் பெருமையை மீளப்பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்.

                                                                                                   தொடரும்.........................

Tuesday, April 3, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 2

பாகம்-1 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடர்ந்து விளையாடுவோம்.


கோலி விளையாட்டு

பாண்டிநாட்டு முறை

விளையாட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி =உருண்டை).

விளையாடுவர்களின் எண்ணிக்கை : குறைந்தது இருவரும் அதற்கு மேற்பட்டவரும் இதை ஆடுவர்.

ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாலடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடுபவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலி யும்,  இதற்குரிய கருவிகளாம். கோலி யாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே.

ஆடும் இடம் : அகன்ற முற்றமும் புறக்கடையும் பொட்டலும் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடகர், குழி வரிசைக்கு நேரான இரு திசைகளுள் ஒன்றில், கடைசிக் குழிக்கு மூன்று அல்லது நான்கு கசத் தொலைவில் கீறப்பட்ட கோட்டில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்த்தன் தன் கோலியை அக் குழி நோக்கி உருட்டல் வேண்டும். குழிக்குள் வீழ்த்தியவர் முன்னும், வீழ்த்தாதவர் பின்னும், ஆடல் வேண்டும். ஒருவரும் குழிக்குள் வீழ்த்தாவிடின், குழிக்கு நெருங்க உருட்டியவர் முன்னும், அதற்கடுத்த அண்மைக்கு உருட்டியவர் பின்னும் ஆடல் வேண்டும். ஆடுவார் பலராயின், இங்ஙனமே அண்மை சேய்மை முறைப்படி முன்னும் பின்னும் ஆடல் வேண்டும்.

முதலில் ஆடுவான் குழிக்குள் வீழ்த்தாதவனாயின், தன் கோலியைக் குழிக்குள் தெறித்து வீழ்த்தியபின், அதற்கடுத்த நடுக்குழிக்குள்ளும், அதன்பின்
அதற்கடுத்த எதிர்ப்பக்க இறுதிக் குழிக்குள்ளும், பின்பு தொடர்ந்து முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த குழிக்குள்ளும், பத்தாம் எண்வரை முன்போன்றே
வீழ்த்தவேண்டும். அங்ஙனம் வீழ்த்துவதற்கு நான்கு முறை முன்னும் பின்னுமாகத் திசை திரும்ப நேரும். பத்தாம் வீழ்த்து நடுக் குழிக்குள் நிகழும்.
அதன்பின் எதிரியின் கோலியைத் தன் கோலியால் தெறித்து அடித்துவிடின் கெலிப்பாகும். பல எதிரிகளாயின் அவ் அனைவர் கோலியையும் அடித்தல்
வேண்டும்.

முதலில் ஆடுவான் ஏதேனும் ஒரு குழிக்குள் வீழ்த்தத் தவறின், எதிரி ஆடல் வேண்டும். எதிரியும் தவறின் முதலாவான் ஆடல் வேண்டும். இங்ஙனம்
தவறுந்தொறும் ஆடகன் மாறுவான்.

ஒருவன் ஆடும் போது எதிரியின் கோலி அருகிலிருப்பின், அது அடுத்த முறை குழிக்குள் வீழ்வதைத் தடுக்குமாறும், அதன் அடியினின்று தப்புமாறும்,
அதனை அடித்துத் தொலைவிற் போக்கிவிடுவது வழக்கம். ஆட்டின் இடையிலாயினும் இறுதியிலாயினும் எதிரியின் கோலியை அடிக்கத் தவறின்,  எதிரி ஆடல் வேண்டும்.  எதிரியின் கோலி தொலைவிலிருக்கும் போது அதை அடிக்கும் ஆற்றல் அல்லது உறுதியில்லாவிடின், தன் கோலியைச் சற்றே முன்தள்ளி அடுத்த முறை எதிரியின் அடிக்குத் தப்புமாறு செய்வதுமுண்டு. 

ஒருவன் தவறி மற்றொருவன் ஆடும்போது, ஆட்டின் தொடக்கத்தில் ஆடிய முறைப்படியே ஆடல் வேண்டும்.

ஆடுவார் இருவராயினும் பலராயினும் தோற்பவன் ஒருவனே. பலராயின், இறுதியில் தோற்பவனொழிந்த ஏனையரெல்லாரும் கெலிக்கும்வரை ஆட்டுத் தொடரும்.

ஆட்டு முடிந்தபின், தோற்றவன் கெலித்தவரிடம் முட்டு வாங்கல் வேண்டும். தோற்றவன் தன் முட்டிக் கையை, இரு கணுவிற்கும் இடைப்பட்ட பகுதி கெலித்தவர்க்கு எதிராகத் தோன்றுமாறு, நிலத்தில் ஊன்றி வைத்துக் கொண்டிருக்க, கெலித்தவர் தம் கோலியால் அவன் முட்டியில் அடிப்பர். இது முட்டுப்போடுதல் எனப்படும். பொதுவாக மூன்று முட்டு அடிப்பது வழக்கம். முட்டுப் போடுவதுடன் ஓர் ஆட்டை முடியும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடகரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு விளையாட்டை ஒரு முறை ஆடி முடிப்பது ஓர் ஆட்டை எனப்படும்.

ஆட்டுத் தோற்றம் : ஒருகால், அருகிலுள்ள பள்ளத்திலிருக்கும் காட்டுப் பறவையைக் கையில் வில்லில்லாவிடத்து விரல்கொண்டு கல்லால் தெறிக்கும் வேட்டை வினையினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

ஆட்டின் பயன் : விரல் நரம்பு உரங்கொள்வதும், குறி தப்பாமல் தெறித் தடிக்கப் பயில்வதும், இவ் ஆட்டின் பயனாம்.



சோழ கொங்குநாட்டு முறை

சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டத்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம் முதலிய பல வகைப்படும்.


                                                                                                      தொடரும்.......................

Monday, April 2, 2012

நாம் யார் -42

பாகம்-41 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்

கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம்சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism),அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர்,பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகையாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மையொப்புக் கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட்டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந்தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போக விருந்த நிலையில்,1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகை வடிவிலும்,

அறிவியல்,  சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம்,உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும்,ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும்என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங்காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த்திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi bethe Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொது மொழியா யிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறு நூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக் கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணையற்றவர்; பல்லவபுரம் பொது நிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள். 

பெரியார் அருஞ்செயல்

நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந் தெரியாது ஓடி ஆங்காங்குப் பதுங்கிக் கொண்டனர்.அன்று பெரியார் ஒருவரே திரவிட-ஆரியப் போர்க்களத்தில் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாது போராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து கற்றோர்க்குந் தன்மான வுணர்ச்சி யூட்டி,பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணா தடித்து வீழ்த்தி, ஆச்சாரியார் புகுத்திய இந்தியை எதிர்த்துச் சிறைத் துன்பத்திற் காளாகி, கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத் தும், பகுத்தறி வியக்கத்தைத் தோற்றுவித்தும், மூடப் பழக்கவழக்கங் களையொழித்தும்  பெரியார்.

திரு.வி.கலியாணசுந்தர முதலியார் பொதுநலத் தொண்டு

பெண்ணின் பெருமை, தொழிலாளர் உரிமை, சமயப் பொது நோக்கு, காதற் சிறப்பு முதலிய உண்மைகளையும் உரிமைகளையும் பண்புகளையும் நாட்டி, பல தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தவர் திரு.வி.க.

இரு தமிழ்ப் போராடியர்

உலக மொழிகளுள் ஒலிப்பு முயற்சி குன்றியது தமிழே யென்றும், அதன் நெடுங்கணக்கு முழு நிறைவானதென்றும், மேலை யாரிய மொழிகளும் தமிழினின்று கடன் கொண்டுள்ளன வென்றும், நாடுமுழுதும் மேடையேறிப் பறைசாற்றிய பா.வே.மாணிக்கநாயகரும் ; தமிழ்ப் பற்று, ஆரியத்தினின்று விடுதலை, தமிழ் வாழ்வு, குடும்ப நலம், கண்மூடிச் சடங்கொழிப்பு முதலியன பற்றி, எளிய இனிய மறப்பாடல்கள் ஏராளமாகப் பாடி நாட்டைத் திருத்திய புரட்சிப் பாவலர் பாரதிதாசனும் இருதமிழ்ப் போராடிய ராவர்.

இந்தி யெதிர்ப்புத் தலைவர் இருவர்


மறைமலையடி களும் பெரியாரும் தத்தம் நிலையில் நின்று இந்திக் கட்டாயத்தை எதிர்த்துநிற்க, இயன்றபோதெல்லாம் நாடு முழுதும் பொதுக் கூட்டங்களும் மாநாடுகளும் கூட்டி, இடை விடாது இந்தியை வன்மையா யெதிர்த்த தறுகட்படைத் தலைவர் இருவர், பேரா. சோமசுந்தர பாரதியாரும் தமிழகப் புலவர் குழு அமைப்பாளர் கி.ஆ.பெ.விசுவநாதமும் ஆவர்.

புலவர் பொறை குறைத்த பேராசிரியர்

ஆரியச் சூழ்ச்சியால், தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த சமற்கிருதப் பகுதியைப் பெருமுயற்சி செய்துநீக்கியவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்.

பல்துறைத் தமிழ்த் தொண்டர்

தாமோதரம் பிள்ளை, பர்.உ.வே.சாமிநாதையர், பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத்தேவர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ச. பவானந்தம் பிள்ளை, த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பன்னீர்ச்செல்வம், கா. சுப்பிரமணியப் பிள்ளை, மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வ.திருவரங்கம் பிள்ளை, அண்ணாமலை யரசர், பண்டிதமணி கதிரேசச்செட்டியார், க.ப.மகிழ்நன் (சந்தோஷம்), துடிசை கிழார் அ.சிதம்பரனார், அம்பத்தூர்த் தலைமை யாசிரியர் (M.)சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்பேரறிஞர், தத்தம் துறையில் தத்தமக் கியன்றவாறு தமிழ்த் தொண்டு செய்தவராவர்.

வரலாற்று நூல் தொண்டர் மூவர்

சேசையங்கார், (P.T.) சீநிவாச ஐயங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவரும், தம் வரலாற்று நூலால் தமிழின் பெருமையைக் காத்தவராவர்.

கணியர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, தலைமையாசிரியர் சாமி வேலாயுதம் பிள்ளையொடு கூடிக் கலைச் சொற்கள் ஆக்குவித்தும்,பின்னர் ஆட்சிச் சொல் அகரவரிசை தொகுப்பித்தும், தமிழாட்சி நடைபெறத்தக்க தொண்டு செய்தவராவர்.

இசைத் தமிழாராய்ச்சித் தொண்டர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், அவர் மகனார் வரகுண பாண்டியன், மதுரைப் பொன்னுச்சாமிப் பிள்ளை முதலியோர், இசைத் தமிழாராய்ச்சியால் தமிழிசையின் பெருமையையும் முதன்மையையும் நாட்டியவராவர்.

நடிப்புத்துறைத் தொண்டர்

இன்னிசை நடிகர் தியாகராசப் பாடகரும் நகைச்சுவை நடிகர் (N.S.) கிருட்டிணனும், நடிப்புத் துறையில் தமிழன் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டையும் காத்தவராவர்.

                                                                                                         தொடரும்.....................

Sunday, April 1, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 1

நமது விளையாட்டுகளை பற்றி தேரிந்து கொள்வோம் .தமிழர்களின்  விளையாட்டு பகுதிக்கு பகுதி வேறுபட்டுள்ளது இதை விரிவாக பார்ப்போம் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. கோலி
  2. தெல்
  3. சில்லாங் குச்சி 
  4. பந்து 
  5. மரக்குரங்கு
  6. காயா பழமா 
  7. பஞ்சு வெட்டுங் கம்படோ 
  8. குச்சு விளையாட்டு 
  9. பம்பரம் 
  10. பட்டம் 
இரவு விளையாட்டு 
  1. குதிரைக்குக் காணங் கட்டல்
  2. வண்ணான் தாழி 
  3. சூ விளையாட்டு 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. கிளித் தட்டு 
  2. பாரிக்கோடு 
  3. அணிற்பிள்ளை
  4. சடுகுடு 
  5. கால்தூக்குற கணக்கப்பிள்ளை 
  6. பூக் குதிரை 
  7. பச்சைக் குதிரை 
  8. குதிரைச்சில்லி 
பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. தட்டாங்கள்
  2. கிச்சுக் கிச்சுத் தம்பலம் 
  3. குறிஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. பாக்கு வெட்டியைக் காணோமே 
  2. நிலாக் குப்பல் 
  3. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. ஒருகுடம் தண்ணீர் ஊற்றி 
  2. என் உலக்கை குத்துக்குத்து 
  3. ஊதாமணி 
  4. பூப்பறிக்க வருகிறோம் 
  5. தண்ணீர் சேந்துகிறது
ஆண்கள் பெண்களுக்கும் சேர்ந்த விளையாட்டு 

பகல் விளையாட்டு 
  1. பண்ணாங்குழி
  2. பாண்டி 
  3. கம்ப விளையாட்டு 
  4. கச்சக்காய்ச் சில்லி
  5. குஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. கண்ணாம் பொத்தி 
  2. புகையிலைக் கட்டையுருட்டல் 
  3. புகையிலைக் கட்டைஎடுத்தல் 
  4. பூச்சி 
  5. அரசனுத் தோட்டமும் 
  6. குலை குலையாய் முந்திரிக்காய் 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. நொண்டி
  2. நின்றால் பிடித்துக்கொள்
  3. பருப்புச்சட்டி 
  4. மோதிரம் வைத்தல் 
  5. புலியும் ஆடும் 
  6. இதென்ன மூட்டை 
  7. கும்மி 
குழந்தைகள் விளையாட்டுகள்  
  1. சோறு கொண்டுபோகிற வழியிலே 
  2. அட்டலங்காய் புட்டலங்காய்
பெரியோர் விளையாட்டுகள் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம்

இரவு  விளையாட்டு -கழியல் 

பகல் -இரவு விளையாட்டுகள்  - முக்குழியாட்டம் 

பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம் , பண்ணாங்குழி

பகல் -இரவு விளையாட்டுகள்  - கும்மி 

                                                                                                            தொடரும்............................

Saturday, March 31, 2012

நாம் யார் -41

பாகம்-40 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

கிறித்தவ விடையூழியர் (Missionaries)தொண்டு

திருவில்லிபுத்தூர் வட்டத் தென் எல்லையிலுள்ள சீயோன் மலை என்னும் திருக்குளிப்புத் (Baptist) திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்த காலத்தில், அருள் புத்தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்தவ ஆசிரியர், கல்பட்டியில் பிராமண ஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாக வந்தாரென்று, அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை,வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளி யில்லத்தையடைந்தார். அவர் வருகை யறிந்த, ஊராளியார், வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித்தாழிட்டுக் கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம்கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத்திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்று சொல்லிவிட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய்விடும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக்கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக்கேட்டுச் சென்றார்.

குலவேற்றுமைக் கொடுமையினின்று தப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதியராயினர்.

கால்டுவெலார் கண்ட உண்மை

கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்துகிடந்தன. மறைமலை யடிகள் போலும் தனித்தமிழ்ப்புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத் தில்லை. இனவிழிப்புறுத்தப் பெரியாரியக்கமும், இனத்தை முன்னேற்ற நயன்மைக் கட்சி யாட்சியும், தமிழின் பெருமை யுணர்த்தச் சுந்தரம் பிள்ளையும் அன்றில்லை. குமரிநாடென்ற பெயரும் ஒருவரும் அறியார்.

எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக்கடிமைப்பட்டு ஊமையரா யிருந்த காலத்தில், கால்டுவெலார் வழிகாட்டுவாரின்றித் தாமே ஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும் சமற்கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரிய கலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவையென்றும், இலங்கைக்கப்பால் எத் தீவுந்தமிழர்க்குத் தெரியா தென்றும் தவறாகக் கூற நேர்ந்தது. ஆயினும் மொழித்துறையில் ஓர் உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்தியதும் மாந்தன் முதன் மொழிக்கு நெருக்க மானது மாகும்என்பதே. இவ் வுண்மை விளங்கித் தோன்றிய சொற்றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப்பெயர்களுமாகும்.

நயன்மைக் (நீதி )கட்சி 

ஆங்கில ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியின் பயனாகவும், திரவிடர் அறிவு கண்விரிவாகத் திறக்கப்பட்டு, நயன்மைக் கட்சிதோன்றி, 1920-லிருந்து 1937 இடைவரை இரட்டை யாட்சியைத் (Diarchy)திறம்பட நடத்தி, தமிழரையும் திரவிடரையும் முன்னேற்றியது. அதனால், வகுப்பு வாரிச்சுழல் பதவிகளும், குலத்தொகை விழுக்காட்டு அலுவல்பேறும், பிற்பட்டோர்க்குப் பலவகைச் சலுகைகளும் ஏற்பட்டன. பேராய ஆட்சியிலும்,தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள தெலுங்கு கன்னட நாடுகளிலும் பிராமணரல்லார் முதலமைச்சராக வரவும், தமிழ்நாட்டில் பிராமணரில்லா அமைச்சுக் குழு ஏற்படவும் முடிந்தது.

கல்வித் தொழில் பிராமணர்க்கேயுரிய தென்னுங் கொள்கைக்கு மாறாக, ஆங்கிலர் எல்லா வகுப்பார்க்கும் அதைப் பொதுவாக்கித் தமிழரைப் பிராமணர்க்குச் சமமாக்கினதனால், தம் மேம்பாடும் பிழைப்பும் குன்றுவது கண்டு, ஏற்கெனவே ஆங்கிலராட்சியில் வெறுப்புற்றிருந்த பிராமணர், நூற்றிற்கு மூவராயுள்ள பிராமணர்க்கு அரசியல்அலுவற்பேறு நூற்றிற்கு மூன்றே யென்று நயன்மைக்கட்சி யாட்சி திட்டஞ் செய்தபின், கிளர்ந்தெழுந்து ஒன்று கூடிச் சூழ்ந்து, ஆங்கில அரசை அடியோடொழித்தா லொழியத் தமக்கு உயர் வாழ்வில்லை யென்றறிந்து, மும்மொழிக் கூட்டுநாடாயிருந்த சென்னை மண்டலத்தில், தமிழருள்ளும் திரவிடருள்ளும் இளைஞரையும் தன்னலக் காரரையும் தமிழின் பெருமையை அறியாதவரையும் துணைக்கொண்டு, தேசியக் கட்சியைத் தோற்றுவித்து, வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்றும், அவனை அகற்றிவிட்டால் விண்ணுலக வாழ்வு வந்து விடுமென்றும், நயன்மைக் கட்சி அயலானுக்கு நாட்டைக்காட்டிக் கொடுக்கின்ற தென்றும் பொதுமக்களிடம் சென்று புகட்டலாயினர்.

நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் கல்லாதவராயும் ஏழைகளாயும் இருந்ததனால், அடிமேலடியடித்தால் அம்மியும் நகர்வதுபோல், நாளடைவில் பொதுமக்கள் தேசியக் கட்சித் தொண்டர்க்குச் செவி சாய்த்தனர்.  நயன்மைக் கட்சி யமைச்சர், எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும் பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடி தென்றும்,ஆங்கிலர் ஒருகாலும் இந்தியா வினின்று நீங்காரென்றும் கருதினதனால், ஆங்கிலராட்சிக்கு மாறாகப் பேசின வரையும் ஒழுகினவரையும் தடியடியடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இதுபொது மக்கட்கு நேரிற் சொல்லப்பட்டபோதுஅவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சிவிரைந்து வளர்ந்தது. இறுதியில், பிரா மணரல்லாத காந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப்பட்டவரை யணைத்துப் பொது மக்களொடு தொடர்புகொண்ட பின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும் கிடைத்தது. விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக்கட்சித் தலைவர் 1937ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் படுதோல்வி யடைந்தனர். பேராயம் (காங்கிரஸ்) ஆட்சியைக் கைப்பற்றியது.

தனித்தமிழ் முன்னோடியர் இருவர்

நாட்டுப்பற்றிற்கு உயிர்மொழிப்பற்று. முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்;  பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.

சூரியநாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி, நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும் மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.

                                                                                                            தொடரும்......................

Thursday, March 29, 2012

நாம் யார் -40

பாகம்-39 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும்

ஆங்கிலராட்சி, 18 ஆம் நூற்றாண்டிடையில் தோன்றி, இருபதாம் நூற்றாண்டின் இடையில் நீங்கியது. அரசினர் அலுவலகங்களிலும், பெருஞ் சாலை களிலும், பொது விடங்களிலும், புகைவண்டிகளிலும், மின்வண்டி களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி எல்லா வகுப்பார்க்கும் பொது வாயிற்று. எல்லாத் துறை யிலும் பொய்யும் புரட்டும் கட்டுங் கதையுமான ஆரியத் தொல்கதை (புராண) முறைக் கல்வி யின்றி, உண்மையும் அகக்கரண வாற்றலை வளர்ப்பதும் அறியாமையையும் அடிமைத் தனத்தையும் அறவே அகற்றுவதுமான அறிவியற்கல்வி புகட்டப் பட்டது. கல்வித் திறமைமிக்க அனைவர்க்கும் வகுப்பு வேற்றுமை யின்றிப் படிப்புதவி (Scholarship) யளிக்கப்பட்டது. இந்தியா முழுதும் படிப்படியாக ஒரு பேரரைய ஆட்சிக்குட் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலராட்சி யிருந்த இலங்கை ,காழகம் (பர்மா) மலையா , தென்னாப்பிரிக்கா முதலிய பல வெளிநாடுகளிலும், இந்தியர் குடியேறித் தமக்கேற்ற தொழிலும் அலுவலும் பெற்று ஏந்தாக வாழ்ந்தனர். ஆங்கில வரசு மதத்துறையில் தலையிடவே யில்லை. குலமத கட்சி யின வேறுபாடின்றி, எளியார்க்கும் வலியார்க்கும் ஏழைகட்கும் செல்வர்க்கும் ஒரே நடுநிலை நயன்மை (நீதி) வழங்கப்பட்டது.

இதனால், ஆங்கிலராட்சி நேர்மையையும், புதுச்சேரி காரைக்கால் தெரு நேர்மையையும் ஒருங்கு நோக்கி ,"பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும்"என்று பழமொழியாக வழங்குமாறு, பொது மக்கள் புகழ்ந்து பாராட்டினர். சமுதாய இன்ப வாழ்க்கைக்கும் மக்கள் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையா யிருந்த உடன்கட்டை யேறல், செடிற்குத்தல் (hook-swinging), குழந்தை மணம், நரக்காவு (human sacrifice) முதலிய குருட்டுப் பழக்கவழக்கங்களும்; தக்கர், பிண்டாரியர், தீவட்டிக் கொள்ளைக்காரர் முதலியகொடிய கயவர் கூட்டங்களும் அறவே ஒழிக்கப்பட்டன.

அருமையான அஞ்சல் துறையும், குறைந்த செலவில் விரைந்து வழிச் செல்லும் இருப்புப் பாதைகளும், அழகிய மாடமாளிகைகளும் மலைநகர் களும், இந்தியாவெங்கும் அமைந்தன. உயிருக்கும் பொருட்கும் சேதமின்றி அமைதியாக வாழுமாறு சிறந்த ஊர்காவலொழுங்கும், கலகமும் போருங் கனவிலுங் காணாவாறு மாபெரும் படையமைப்பும் ஏற்பட்டன.எல்லாத் திணைக் களங்களிலும் (departments), இந்தியர் தத்தம் கல்விக்கும் திறமைக்கும் தக்கவாறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப்பெற்றனர். 

இந்தியா முழுதும் ஒன்றுபட்டுநாளடைவில் தன்னாட்சி பெறுமாறு இந்தியத் தேசியப் பேராயம் (Indian National Congress) கியூம் (Hume, Allen Octavian)என்னும் ஆங்கிலப் பெருமகனாரால் 1855-ல் தோற்றுவிக்கப்பெற்றது. அதன் பயனாக, பேராயத்தலைவர்கள், ஆங்கிலர் நேரடியாட்சி மண்டலங்களில் மட்டு மன்றி, எல்லா உள்நாட்டு மன்னர் நாடுகளுள்ளும் உரிமையொடும் பாதுகாப்பொடும் புகுந்து, விடுதலைப் போராட்டத்திற்கு விதைகளை வாரியிறைத்துவந்தனர். இறுதியில், 1947ஆம் ஆண்டு முழு வெற்றியும் பெற்றனர். தந்தை மகனிடத்திற் சொத்தையும், அரசன் இளவரசனிடத்தில் நாட்டையும், தகுந்தபருவத்தில் ஒப்படைப்பதுபோல், ஆங்கிலரும் பேராயத் தலைவரிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு அமைதியாய் அகன்றனர். அதனாற்பிரெஞ்சியரும் போர்த்துக்கீசியரும் சற்றுப்பிந்தி இந்தியாவை விட்டு நீங்க நேர்ந்தது. 

ஆங்கிலர்க்கும் பிராமணர்க்கும்வேற்றுமை




ஆங்கிலர் 

பிராமணர்
(1)
வாணிகத்திற்கு வேண்டிய பொருளொடும், பாதுகாப்பிற்கு வேண்டிய படையொடும், ஆட்சிக்கேற்றஅறிவொடும், வந்தனர்.
 கையுங் காலுமாக வந்தனர்.
(2)
வெண்ணிறமாயிருந்தும், தம்மை மக்களென்றேகூறினர். 
வெண்ணிறம் பொன்னிறமாயும கூறினர். செந்நிறமாயும் கருநிறமாயும் மாறிய பின்னும், தாம் நிலத்தேவரென்றே கூறியே மாற்றினர்.
(3)
தம் மொழி மக்கள் மொழி யென்பதைமறைக்கவேயில்லை.
ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா  யிருந்தும், தம் முன்னோர் மொழியையும் இந்தியா விற்புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடை மொழியையும் (literary dialect), இன்றும் தேவமொழி யென்றே துணிச்சலுடன் சொல்கின்றனர்.
(4)
தாழ்த்தப்பட்ட தமிழருள் கடைப் பட்ட பறையரைத் தம் சமையற்காரராக்கி, அவர் ஆக்கியதையும் படைத்ததையும் பிராமணரும் விரும்பியுண்ணும் படி செய்தனர்.
தமிழருள் தலைமையான வராகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளர், பொற்கலத்திற் கொடுக்கும் தண்ணீரும் குடிக்கத் தகாதது போல் நடிக்கின்றனர்.
(5)
அகக்கரண வாற்றலை வளர்க்கும் உண்மையான அறிவியலைக்கற்பித்தனர். 
தமிழரை அடிமடையராக்கி, அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் தொல் கதைக்கல்வியைப் புகட்டினர்.
(6)
தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்திய தென்றும், மக்கள் முதன் மொழிக்கு நெருங்கிய தென்றும், கூறினர் (கால்டுவெல்).
தமிழ் சமற்கிருதக் கிளை யென்றும் பன மொழிக் கலவை யென்றும் காட்டியுள்ளனர். (சென்னைப் ப.க.க.தமிழ் அகரமுதலி)
(7)
குலம் தொழில்பற்றிய தென்றும் மக்கள் படைப்பென்றும் கூறு கின்றனர். 
குலம் பிறவி பற்றிய தென்றும் இறைவன் படைப்பென்றும் அதை இறைவனே சொன்னா னென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை)
(8)
ஆங்கிலத்திலுள்ள அயற் சொற்களை யெல்லாம் தாமே தெரிவிக்கின்றனர்.
வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற் களெல்லாம்வடசொல்லே யென்று வலிக்கின்றனர்.
(9)





(10) 










(11)    




(12)  







(13)  



(14)  






(15) 




(16)  



(17)   


கிறித்தவ மதம் உரோம நாட்டினின்று வந்து இலத்தீன் வாயிலாகப் புகுத்தப்பட்டும், தம் தாய்மொழியில் வழிபாட்டை நடத்துகின்றனர்.

ஆட்சியினாலும் கல்வியினாலும் இந்தியா முழுவதையும் ஒற்றுமைப் படுத்தினர். 









தமிழ் தூய்மையாகப் பேசப் படுவதையே விரும்புவர். 



தம் திருமறை இறைவனால் ஏவப்பெற்ற முற்காணியரால் (தீர்க்கதரிசிகளால்) எழுதப்பட்டதென்பர். 





தாம் கண்டவற்றையும் செய்த வற்றையுமே தம் செயலாகக் கூறுவர்.  

தம் வள மனைக்குள் நல்லார் எவரையும் தாராளமாகப் புகவிடுவர். 


தமக்கு உதவிய மொழிகளையும் அயலாரையும் நன்றியறிவோடு புகழ்வர்.  

தமிழ் நூல்களை அச்சிடின், உள்ளபடியே அச்சிடுவர்.  


பிரித்தானியம் உடலைமட்டும் தாக்கி, ஆங்கிலனுடன் நீங்கி விட்டது 
சிவனியமும் மாயோனியமும் முழுத்தூய தமிழ மதங்களா யிருந்தும், தமிழர்கோவில் வழிபாட்டையும் சடங்கு களையும் அவர்க்குத் தெரியாத வடமொழியிலேயே ஆற்றி வருகின்றனர்.


ஒரேபேரினத்தைப் பல சிற்றினமாகவும், ஒவ்வொரு சிற்றினத்தையும் பற்பல அகமணப் பிறவிக்குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித் தாட்சிமுறையைப் பிராமணரைப் போற் கையாண்டவர்,இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை.


நூற்றிற்கு நூறும் வடசொற் கலந்து பேசப்படுவதையே விரும்புவர்.


ஐம்பூதச் சிறு தெய்வவழுத்து களும் ஆரிய வரலாற்றுத் துணுக்குகளுமான வேத மந்திரங்கள், இறைவனால் இயற்றப் படவில்லை யென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும்,பிதற்றுவர்.

அயலார் நாகரிகத்தையும், இலக்கியத்தையும் தமவென்றே கூசாது பறையறைவர்.

தம் இல்லத்திற்குள் பிராமணர் அல்லார் புகின் தீட்டெனக் கருதுவர்.


தமக்கு வாழ்வளித்த தமிழையும் தமிழரையும், இழிந்தோர் மொழி (நீசபாஷை) யென்றும், சூத்திரர் என்றும் பழிப்பர்.


பழந் தமிழ் நூல்களையும் பாடல் களையும் அச்சிடும் போது,தம் குல மேம் பாட்டிற்கேற்றவாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர்.

பிராமணியம் ஆதனையும் (ஆன்மாவையும்) அகக்கரணங் களையும் தாக்கி, உயிர் நீங்கிய பின்னும் தொடர்வதாயுள்ளது.


                 தொடரும் .....................