Saturday, March 31, 2012

நாம் யார் -41

பாகம்-40 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

கிறித்தவ விடையூழியர் (Missionaries)தொண்டு

திருவில்லிபுத்தூர் வட்டத் தென் எல்லையிலுள்ள சீயோன் மலை என்னும் திருக்குளிப்புத் (Baptist) திருச்சவை நிலையத்தில், மேனாடு துரையிருந்த காலத்தில், அருள் புத்தூரிலிருந்து வந்த தேவதாசன் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்தவ ஆசிரியர், கல்பட்டியில் பிராமண ஊராளி (கிராம முனிசீபு) யிருந்த தெரு வழியாக வந்தாரென்று, அவரேவலால் அடிக்கப்பட்டார். அதை அவர் மேனாடு துரையிடம் முறையிட்டார். உடனே துரை,வண்டி கட்டிக் கல்பட்டி சென்று, ஊராளி யில்லத்தையடைந்தார். அவர் வருகை யறிந்த, ஊராளியார், வீட்டிற்குள் சென்று தலைவாயிற் கதவைச் சாத்தித்தாழிட்டுக் கொண்டார். துரை கதவைத் தட்டிவிட்டுத் தெருத் திண்ணையில் அமர்ந்தார். சிறிது நேரம்கழித்து, ஊராளியாரின் மனைவியார் கதவைத்திறந்து, ஊராளியார் ஊரிலில்லை யென்று சொல்லிவிட்டார். துரை நடந்ததைச் சொல்லி, ஒரு கிழமைக்குள் ஊராளியார் தம்மிடம் வந்து மன்னிப்புக் கேளாவிடின் அவர் வேலை போய்விடும் என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். ஏழாம்நாள், ஊராளியார் தேவதாசன் ஆசிரியரை அழைத்துக்கொண்டு துரையிடம் வந்து மன்னிப்புக்கேட்டுச் சென்றார்.

குலவேற்றுமைக் கொடுமையினின்று தப்பவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பலர் முகமதியராயினர்.

கால்டுவெலார் கண்ட உண்மை

கால்டுவெலார் காலத்தில், தொல்காப்பியமும் கடைக்கழகப் பனுவல்களும் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறைந்துகிடந்தன. மறைமலை யடிகள் போலும் தனித்தமிழ்ப்புலவரும் ஆராய்ச்சியாளரும் அக்காலத் தில்லை. இனவிழிப்புறுத்தப் பெரியாரியக்கமும், இனத்தை முன்னேற்ற நயன்மைக் கட்சி யாட்சியும், தமிழின் பெருமை யுணர்த்தச் சுந்தரம் பிள்ளையும் அன்றில்லை. குமரிநாடென்ற பெயரும் ஒருவரும் அறியார்.

எல்லாத் துறையிலும் தமிழர் ஆரியருக்கடிமைப்பட்டு ஊமையரா யிருந்த காலத்தில், கால்டுவெலார் வழிகாட்டுவாரின்றித் தாமே ஆராய்ந்ததனால், நெடுங்கணக்கும் எண்வேற்றுமையும் சமற்கிருதத்தினின்று வந்தவை யென்றும், உயரிய கலைகளும் அறிவியல்களும் ஆரியர் கண்டவையென்றும், இலங்கைக்கப்பால் எத் தீவுந்தமிழர்க்குத் தெரியா தென்றும் தவறாகக் கூற நேர்ந்தது. ஆயினும் மொழித்துறையில் ஓர் உண்மையைத் தெளிவாகக் கண்டார். அது, தமிழ் ஆரியத்திற்கும் சித்தியத்திற்கும் முந்தியதும் மாந்தன் முதன் மொழிக்கு நெருக்க மானது மாகும்என்பதே. இவ் வுண்மை விளங்கித் தோன்றிய சொற்றொகுதிகள், சுட்டுச் சொற்களும் மூவிடப்பெயர்களுமாகும்.

நயன்மைக் (நீதி )கட்சி 

ஆங்கில ஆட்சியின் விளைவாகவும் ஆங்கிலக் கல்வியின் பயனாகவும், திரவிடர் அறிவு கண்விரிவாகத் திறக்கப்பட்டு, நயன்மைக் கட்சிதோன்றி, 1920-லிருந்து 1937 இடைவரை இரட்டை யாட்சியைத் (Diarchy)திறம்பட நடத்தி, தமிழரையும் திரவிடரையும் முன்னேற்றியது. அதனால், வகுப்பு வாரிச்சுழல் பதவிகளும், குலத்தொகை விழுக்காட்டு அலுவல்பேறும், பிற்பட்டோர்க்குப் பலவகைச் சலுகைகளும் ஏற்பட்டன. பேராய ஆட்சியிலும்,தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலையாள தெலுங்கு கன்னட நாடுகளிலும் பிராமணரல்லார் முதலமைச்சராக வரவும், தமிழ்நாட்டில் பிராமணரில்லா அமைச்சுக் குழு ஏற்படவும் முடிந்தது.

கல்வித் தொழில் பிராமணர்க்கேயுரிய தென்னுங் கொள்கைக்கு மாறாக, ஆங்கிலர் எல்லா வகுப்பார்க்கும் அதைப் பொதுவாக்கித் தமிழரைப் பிராமணர்க்குச் சமமாக்கினதனால், தம் மேம்பாடும் பிழைப்பும் குன்றுவது கண்டு, ஏற்கெனவே ஆங்கிலராட்சியில் வெறுப்புற்றிருந்த பிராமணர், நூற்றிற்கு மூவராயுள்ள பிராமணர்க்கு அரசியல்அலுவற்பேறு நூற்றிற்கு மூன்றே யென்று நயன்மைக்கட்சி யாட்சி திட்டஞ் செய்தபின், கிளர்ந்தெழுந்து ஒன்று கூடிச் சூழ்ந்து, ஆங்கில அரசை அடியோடொழித்தா லொழியத் தமக்கு உயர் வாழ்வில்லை யென்றறிந்து, மும்மொழிக் கூட்டுநாடாயிருந்த சென்னை மண்டலத்தில், தமிழருள்ளும் திரவிடருள்ளும் இளைஞரையும் தன்னலக் காரரையும் தமிழின் பெருமையை அறியாதவரையும் துணைக்கொண்டு, தேசியக் கட்சியைத் தோற்றுவித்து, வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்றும், அவனை அகற்றிவிட்டால் விண்ணுலக வாழ்வு வந்து விடுமென்றும், நயன்மைக் கட்சி அயலானுக்கு நாட்டைக்காட்டிக் கொடுக்கின்ற தென்றும் பொதுமக்களிடம் சென்று புகட்டலாயினர்.

நூற்றிற்குத் தொண்ணூற்றுவர் கல்லாதவராயும் ஏழைகளாயும் இருந்ததனால், அடிமேலடியடித்தால் அம்மியும் நகர்வதுபோல், நாளடைவில் பொதுமக்கள் தேசியக் கட்சித் தொண்டர்க்குச் செவி சாய்த்தனர்.  நயன்மைக் கட்சி யமைச்சர், எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும் பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடி தென்றும்,ஆங்கிலர் ஒருகாலும் இந்தியா வினின்று நீங்காரென்றும் கருதினதனால், ஆங்கிலராட்சிக்கு மாறாகப் பேசின வரையும் ஒழுகினவரையும் தடியடியடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இதுபொது மக்கட்கு நேரிற் சொல்லப்பட்டபோதுஅவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சிவிரைந்து வளர்ந்தது. இறுதியில், பிரா மணரல்லாத காந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப்பட்டவரை யணைத்துப் பொது மக்களொடு தொடர்புகொண்ட பின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும் கிடைத்தது. விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும் பொதுமக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக்கட்சித் தலைவர் 1937ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் படுதோல்வி யடைந்தனர். பேராயம் (காங்கிரஸ்) ஆட்சியைக் கைப்பற்றியது.

தனித்தமிழ் முன்னோடியர் இருவர்

நாட்டுப்பற்றிற்கு உயிர்மொழிப்பற்று. முன்னது எல்லார் வாயிலாகவும் வெளிப்படும்;  பின்னது புலவர் வாயிலாக மட்டுமே வெளிப்படும்.

சூரியநாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித் தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள், சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத் தனித்தமிழ் நூலியற்றி, நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும் மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.

                                                                                                            தொடரும்......................

No comments:

Post a Comment