Tuesday, March 13, 2012

நாம் யார் -28

பாகம்-27 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேவாரப் பதிகங்கள் 

அப்பர், சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 96,000 என்று சொல்லப்படுகின்றது. இன்று கிடைத்திருப்பவை 796. இவற்றுள் ஒரு சிலவே இராசராசன் காலத்தில் கோவில்களில் பாடப்படும் வழக்கிலிருந்தன.  ஏனைய வற்றின் ஏடுகளையெல்லாம் பிராமணர் தொகுத்து, தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குளிட்டுப் பூட்டிவிட்டனர். இராசராசன் இம்மருமத்தை யறிந்து, அவ்வறையைத் திறக்கச் சொன்னான். கோவில் சொத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த தில்லை வாழந்தணர் என்னும் மூவாயிரம் பிராமணரும் மறுத்துத் தடுத்தனர். இராசராசன் ஒரு சூழ்ச்சிசெய்து திறந்தான் சிதல் அரித்த ஓர் ஏட்டுக் குவியல் காட்சியளித்தது.  இக்காலத்திற்கு வேண்டியவற்றை மட்டும்வைத்துக்கொண்டு, வேண்டாத வற்றை யெல்லாம் யாமே சிதலரிக்க   விட்டேம்" என்று ஒரு வானுரை யெழுந்தது! 'சூத்திர' வேந்தன் நிலத்தேவரை ஒன்றும்செய்ய இயலவில்லை. 

மூவேந்தர் ஆரிய அடிமை 

கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் வேள்வி மதத்தைத் தழுவி ஆரிய அடிமைகளாய்ப் போய்விட்டதனால், இந்தியாமுழுவதையும் நிலையான ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்த்துதன் பொருட்டு, நால்வரண வொழுக்கத்தை நிலை நிறுத்தும் மனுதரும சாத்திரம் என்னும் குலவொழுக்க நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலும் ;கோவிலமைப்பு,  வழிபாட்டு முறை, போற்றியான்(அருச்சகன்) தகுதி, கொண்முடிபு (சித்தாந்தம்),தெய்வச் சிறப்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றைவிளக்கிக் கூறும் ஆகமம் என்னும் வழிபாட்டு மறை கி.பி. 6ஆம் நூற்றாண்டிலும் சமற்கிருதத்தில் இயற்றப்பட்டுவிட்டன. சிவனிய ஆகமங்கள் காமிகம் முதல் வாதுளம் வரை 28. காளிவழிபாட்டு மறையைத் தந்திரம் என்பர்.

"தந்த்ரங்கள் ,ஸம்ஹிதை, ஆகமம், தந்த்ரம் என மூவகைப்படும். அவற்றுள் ஸம்ஹிதைகள் வைஷ்ணவர்களாலும், ஆகமங்கள் சைவர்களாலும், தந்த்ரங்கள் சாக்தர்களாலும் போற்றப்படுகின்றன. அவை முற்றிலும் வைதிகக் கொள்கைகளைப் பின்பற்றியன எனக் கூறுதற்கு இடம் இல்லை. அவை தீக்ஷை கொண்டு ஆசிரியனிடமிருந்து கொள்ளத்தக்கன. தந்த்ரங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னரே உண்டாயின என்பர்.

ஆகமம் என்னும் சொல்லே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பதுதான் பொருள்.  எல்லாவகையிலும் ஆரியத்தை எதிர்க்கக்கூடிய தமிழநாகரிகக் கோட்டையான தென்னாடு பிடிபட்டுப்போகவே, இந்தியா முழுதும் மதத்துறையிலுங் குலத்துறையிலும் ஆரிய வயப்பட்டுவிட்டது. பிராமணப்பூசகனே சமற்கிருதத்தில் போற்றி செய்வது, தமிழ்நாட்டுக் கோவில் மரபாயிற்று.

முதற் பராந்தகச் சோழன் (கி.பி.907-953),வேதம் வல்ல பிராமணர்க்கு வீரநாராயணபுரம் முதலிய ஊர்களை முற்றூட்டாகக் கொடுத்து, பொற்கருப்பைத்தானமும் ஆள்நிறைப் பொன் தானமுஞ் செய்தான்.ஆற்றூர் (ஆத்தூர்), திருத்தவத்துறைக் (லால்குடி) கோவில்களில், பூசைவேளையில் திருப்பதிகம் ஓதப்பிராமணரை அமர்த்தினான்.

முதலாம் இராசராசன் (கி.பி.958-1014) கட்டின தஞ்சைப் பெருவுடையார் கோவிற் கோபுரம்,தாசுமகால் இந்தியாவிற்குத் தருவதினும் பல மடங்கு பெருமை தமிழகத்திற்குத் தருவதாகும். ஆயின் அவனும் அடிமை யானதனால்,  சோழ மார்த்தாண்டசதுர்வேதி மங்கலம் என்னும் திருவியலூரில், ஆள்நிறைப் பொன் தானஞ் செய்தான். அவன்தேவியும் பொற்கருப்பைத் தானஞ் செய்தாள். அவனுக்குக் குருக்களா யிருந்தவர்கள் இலாடம் ( வங்கநாட்டின் ஒரு பகுதி ), காசி ,காசுமீரம் முதலிய வடநாடுகளிலிருந்துவரவழைக்கப்பட்ட பிராமணர்கள். அவர்கள் பெருமடத் தலைவர்களாயிருந்து அரசியலில் மிகுந்தசொற்செல்வு பெற்று விளங்கினர்.

இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரனும் (கி. பி.1014-42) தஞ்சைப் பெரியகோவிலில் பூசைசெய்து வந்த தன் குருவாகிய சர்வசிவ பண்டிதருக்கும்,  ஆரிய நாட்டிலும் மத்தியநாட்டிலும் கௌட (வங்க) நாட்டிலுமிருந்த அவர் மாணவருக்கும், ஆண்டு தோறும் ஈராயிரங் கலம் நெல் குரவ நுகர்ச்சியாகக் (ஆசாரிய போகமாகக்) கொடுக்குமாறு கட்டளை பிறப்பித்தான்.

கி.பி.1034-ல், எண்ணாயிரம் என்னும்இடத்தில், 300 பிராமண மாணவரும் 10 பிராமணஆசிரியரும் கொண்ட ஓர் இலவச மறைநூல் விடுதிக்கல்லூரி கட்டித் தானஞ் செய்தான்.

வீரராசேந்திரச் சோழன் (கி.பி.1062-67) திருமுக்கூடல் என்னுமிடத்தில், பிராமண மாணவர்க்கு வேதமும் பிறநூற் கலைகளும் கற்பிக்கு மாறு, மருத்துவசாலையொடு கூடிய ஓர் இலவசவிடுதிக் கல்லூரியைக் கட்டிக் கொடுத்தான்.

மூன்றாங் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) திருவொற்றியூரிற் பிராமண மாணவர்க்குப் பாணினீயம் கற்பிக்குமாறு, வியாகரண தான வியாக்கியான மண்டபம் ஒன்று அமைத்து, அதற்கு 60 வேலி நிலங்கொண்ட குலோத்துங்கன் காவனூர் என்ற ஊரை இறையிலியாக்கினான். அவன் குருவும் இலாட நாட்டுப்பிராமணரே.

பல கோவில்களில் துலாபார மண்டபம் என்றே ஒன்று கட்டப் பட்டிருந்தது. துலாபாரம் என்று ஒரு வரியும் குடிகளிடம் வாங்கப்பட்டது. சோழர்போன்றே பாண்டியரும் ஒழுகினர். சேரரைப் பற்றிச்சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் குடிகள் பொதுப்பணம், தமிழும் தமிழனும் தளரவும்,பிராமணனும் பிராமணியமும் வளர்ந்தோங்கவும் வாரியிறைக்கப்பட்டது.

கடுங்கோன், காய்சினவழுதி, இளஞ்சேட்சென்னி, நெடுங் கிள்ளி, மாவலி, உதியஞ்சேரலாதன் என்றிருந்த அரசர் தனித்தமிழ்ப் பெயர்களெல்லாம் ஜடில பராந்தகன், விஜயாலயன், பாஸ்கர வர்மன் என வடசொற்பெயர்களாக மாறின.

பாண்டியர் பெயருக்கு முன் மாறவர்மன்ஜடாவர்மன் என்பனவும், சோழர் பெயருக்கு முன் ராஜகேசரி பரகேசரி என்பனவும் அடைமொழிகளாகச் சேர்க்கப்பட்டன.

அரசர் மெய்க்கீர்த்திகள் ஸ்வஸ்திஸ்ரீ என்று தொடங்கின. இடையிடை சமற்கிருதச் சொற்கள் கலந்தன. முன்னும் பின்னும் சமற்கிருதச் சொலவங்களும் (சுலோகங்களும்) அமைந்தன.

சமற்கிருதச் சொற்களும் சொலவங்கள் போன்றே கிரந்த எழுத்தில் வெட்டப்பட்டன. கல்வெட்டுச் சிலாசாசனம் என்றும், செப்பு வெட்டுத் தாமிரசாசனம் என்றும் பெயர் பெற்றன.

மதத்துறை போன்றே மற்றத்துறைகளிலும் மூவேந்தரும் பிராமணர்க்கு எடுப்பார்கைப் பிள்ளைக ளாயினர். தமிழ் சமற்கிருத வார்ப்பகத்தில் வார்க்கப்பட்டது. வடசொல் மிகுந்து, கொச்சை வழக்கும் இலக்கண வழுக்களும் புகுந்து, தமிழ்ப் புலவர் கைகடந்து, பகைவர் ஆட்சிக்குட்பட்டுவிட்டது. அரைகுறையா யிருந்ததும்,தஞ்சை மராட்டிய மன்னராட்சியிலும் நிரம்பிவிட்டது. தஞ்சைச் சரபோசி மன்னர், தம் 'சரசுவதி மகால்' என்னும் கலைக்கூடத்தில் தொகுத்துள்ள 22,000-ற்கு மேற்பட்ட பொத்தகங்களுள் பெரும்பாலன சமற்கிருதமே.

கடைக்கழகக் காலத் தொழிற்குலங்கள்

அகவர் (சூதர்) , அங்காடி வணிகர்( நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்), அச்சுக்கட்டிகள் , அடியோர் , அண்டர் (இடையர்) , அரசர் (கிழவர், வேளிர், மன்னர், கோக்கள், வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர், கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர் (தெருப் பொதுமகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்) ,இலைய முதிடுவார் (இலை வாணியர்), உமணர், உழவர் (கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர்,ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்),  கடம்பர், கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர், கண்ணுளாளர் (சித்திரகாரர்), கணிகையர் (நாடகக்கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக்கணிதர் , கம்மியர் (கம்மாளர்), களமர் (கருங்களமர், வெண்களமர்),  கன்னார் (செப்புக் கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டுவாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப் பொருநர்), கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார், குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்), குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர், கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர்(கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர், சாலியர் (நெசவர்) ,  தச்சர்,  துடியர்,தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர்,சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர்,பட்டினவர் (மீன்விலைப் பரதவர்), பட்டுச்சாலியர், படையுள் படுவோன் (சின்னமூதி), பரதர்(செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர் (இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்),  பழையர் (கள்விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்), பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்), பாசவர் (ஊன் விற்போர்) , பாணர் (இசைப்பாணர்,குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்), பார்ப்பார், புலையர் , பூ விற்பார், பொருநர் (ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்), பொன்வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார், மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர் (மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்), மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக்கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப்பறையர்) , விலைமகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலைமகளிர்),

பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல்,கடைக்கழகக் காலத்தில் இல்லறத் தாரான பிராமணர்க்கே வரையறுக்கப்பட்டு விட்டது.சிறப்பாகத் துறவியரைக் குறிக்கும் அந்தணர் என்னும் தமிழ்ச் சொல்லும், முதற்கண் பிராமணப்போலித் துறவியர்க்கு வழங்கி, பின்னர் இல்வாழ்பிராமணர்க்கும் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு தொழில் முறையில் பகுக்கப்பட்டது பின்னளில் சாதிகளாக மாறிவிட்டது .             
                                                                                                         தொடரும்.........................

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தவறுதலாக உங்களின் பின்னோட்டம் நீக்க பட்டுள்ளது , மன்னிக்கவும்

      Delete