Wednesday, February 29, 2012

நாம் யார் -20

பாகம்-19 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மதுரை நகர் (தோரா. கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

இரண்டாங்கடல்கோட்குப் பின், நீண்ட காலமாகக் கொற்கையிலும் மணவூரிலும் பாண்டியர்கள் ஆண்டு வந்தனர்.அதன் பின், வைகைக் கரையில் இருந்த கடம்பவனம் என்னும் கடப்பங்காடு அழிக்கப்பட்டு இற்றை மதுரை கட்டப்பட்டது. பஃறுளிக்கரைமேலிருந்த பாண்டியன் முதல் தலைநகர்ப் பெயரே இதற்கும் இடப்பட்டதனால்,அப் பெயர்க் கரணியமே இப் பெயர்க்குமாம்.அக்கால வழக்கிற் கேற்ப, மதுரையைச் சுற்றிநாற்புறமும், பல்வேறு போர்ப் பொறி களைப் பொருத்தற்கும் நொச்சி மறவர் நின்று போர்செய்தற்கும் ஏற்றவாறு, அகன்றுயர்ந்த கோட்டைமதில் எழுப்பப்பட்டது. நாற்புறமும் கோட்டை வாயிலும் வாயில்தொறும் மேன்மாடமும்அமைந்தன. மதின்மேல் இடையிடை காவற்கோபுரங்களும் கட்டப்பட்டன. வாயின்மாடச்சிறப்பினால் மதுரை மாடமதுரை யெனப்பட்டது.

கடைக் கழகத் தொடக்கம் (கி.மு. 5ஆம் நூற்றாண்டு)

மதுரை மாநகர்அமைக்கப்பட்டவுடன், மூன்றாம் புலவர் கழகமும் தோற்றுவிக்கப்பட்டது. 49 உறுப்பினராயினர். முக்கழகத்திலும் உறுப்பினர் தொகைக்கு வரையறை இல்லை. அந்த அந்த காலத்தில்தலையாய புலவர் அல்லது சிறந்த புலவர் எத்தனை பேரோ அத்தனைபேரும் இடம்பெற்றனர். புதிதாக யாரேனும்சிறந்த புலவர் வந்தாலும் சேர்க்கப்பட்டனர்.இதனையே, தகுந்த புலவர் வந்தாலும் கழகப்பலகை தானே ஒருமுழம் நீண்டு இடந்தரும் என்னும் மரபுரை குறிக்கும்.49 என்னும் தொகை ஏழேழென்று வகுக்கப்படுவதால், மொழிப்பற்றும் மூப்பும்புலமைத்திறமும் பார்க்காது, மதம்பற்றியோ குலம்பற்றியோ நிலம்பற்றியோ ஏழெழுவர் தொகுக்கப்பட்டனர் . எத்தனைவர் வந்தாலும் ஏற்றுப் பொருள் செலவு செய்யும் அளவிற்கு செல்வம் பாண்டியனிடத் திருந்தது. முக்கழகத்திலும் புலவர் தொகையை ஒன்பதென்னும் எண்ணில் முடித்தது.

திரித்து விடப்பட்ட கதைகள் 

இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் 20,000 நூறாண்டிற்குமேல் இடைவெளி ஆனதனால்,இடைக்கழகத் திறுதிப் பாண்டியனான முடத்திருமாறனே கடைக்கழக முதற் பாண்டியனானான் என்பது பொருந்தாது.

இந்த கழகத்திற்குத் தொகை யென்றும், கூடல் என்றும் பெயர்கள்ஏற்பட்டன. அதன்பின், இடவாகு பெயராக மதுரையும் கூடலெனப்பட்டு, மாடச் சிறப்பால் மாடக்கூடல், நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றது மாடங்கள் மேகங்கள் படும் அளவிற்கு வானளாவவுயர்ந் திருந்ததனால், நான்முகின் மாடக்கூடல் என்று புலவர் புகழ்ந்துபாடினர். அத் தொடரைத் தொல்கதையாளர் பயன்படுத்திக் கொண்டு, மதுரை மேல் கடுமையான மழைபொழிந்த நான்முகில்களை நான்மாடங்கள் கூடித்தடுத்தன வென்று கதை விட்டனர்.

மதுரைக் கோட்டைவாயில் ஒன்றன் முன், ஒரு மூதால மரம்படர்ந்தோங்கி யிருந்ததனால், அவ்விடம் ஆலவாய் என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். அப்பெயரையும் பொருள் திரித்து, பாம்பினால் எல்லைகாட்டப்பட்ட விடமென்று கதை கட்டி விட்டனர். ஆலவாய் என்பது முதலில் நான்மாடங்களுள் ஒன்றன் ஒருவனின் பெயராகவே யிருந்தது.(இன்றையா அரசியல் வாதிகள் சொல்லுவதை போல மதுரையை மீட்டும் என தம்பட்டம் அடிப்பது போல அன்றே இந்த மாதிரி திரித்து கதை விட்டுள்ளனர் )

சமற்கிருத ஆக்கம்

வேத ஆரியர் என்று சொல்லப்படும் இந்திய ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தவுடன் தம் (கிரேக்கத்தை யொத்த) மொழியைமறந்துவிட்டனர். இதற்கு அவர் சிறுதொகை யினராயிருந்ததும் பழங்குடி மக்களுடன் கலந்து போனது தான் காரணம்.

ஆரியப்பூசாரியரும் அவரைப் பின்பற்றிய விசுவாமித்திரன் போன்ற ஒருசில நாட்டுமக்களும்,பாடிய மந்திரத் தொகுதி என்னும் பாடற்றிரட்டே இருக்கு வேதமாம். 

ஆரியப்பூசாரிகளான பிராமணர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின். வேதமொழியுடன் ஏராளமான தமிழ்ச்சொற்களும் அவற்றினின்று திரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானபுதுச்சொற்களும் இடுகுறிச் சொற்களும் கலந்து,கலவை மொழியில் இதிகாச புராணங்களும் தரும சாத்திரங்களும் நாடகங்களும் பிறவும்இயற்றப்பட்ட பின்னரே, கி.மு. 6ஆம்நூற்றாண்டுபோல் சமற்கிருதம் என்னும் அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழி நிறைவாக உருவாயிற்று. பிராகிருதம் (பிராக்ருத) என்பது முந்திச் செய்யப்பட்டது என்றும், சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத)என்பது கலந்து செய்யப்பட்டது என்றும் பொருள்படும்.(நம்மிடம் இருந்து கற்று கொண்டு நமது மொழி யோடு சேர்த்து வந்தது தான் சமற்கிருதம்) 

இந்தைரோப்பியம்,வேதியம், சமற்கிருதம் என்னும் மூவேறு நிலைகளில் , ஆரியம் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டுள்ளது.வேதியம் கடன்கொண்டது வடநாட்டுப் பிராகிருதவாயிலாக என்பது தெரிகிறது . வடமொழி என்னும் பெயர் வேதமொழிக்கும் சமற்கிருதத்திற்கும் பொது வாகும்.பைசாசி, சூரசேனி, மாகதி என்று வடநாட்டில் மூன்றும்,திராவிடி என்று தென்னாட்டில் ஒன்றுமாக,பிராகிருதம் நான்கென வகுத்தனர்.

பாணினீயம் 

சமற்கிருதத்தின்தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம்பாணினியால் கி.மு.4ஆம் நூற்றாண்டில்இயற்றப்பட்டது. இலக்கணநூலை வியாகரணம் என்பர்வடநூலார். அது கூறுபடுப்பு(Analysis) என்னும் பொருளது. நந்நான்கு இயல்கள் (பாதங்கள்) உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்) கொண்டது பாணினி வியாகரணம். அதனால் அது அட்டாத்தியாயீ (அஷ்டாத்யாயீ) எனப் பெயர்பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திரங்கள்) ஏறத்தாழ 3980. அந் நூற்கு முன் எண்ணிலக்கண நூல்கள்இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவற்றுள் முதலது வேதகாலத்த தெனப்படும் ஐந்திரம்.

தொல்காப்பியம் பாணினீயத்திற்கு மூன்று நூற்றாண்டு முந்தியது.


                                                                                                      தொடரும்..........................

Tuesday, February 28, 2012

நாம் யார் -19

பாகம்-18 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தொழிற்குலங்களும் தொழில்களும்

தொல்காப்பியம் சொல்லும் தொழில்கள் சார்ந்த குலங்களும்.

அடியோர் -அடித்தொழில் செய்பவர், அடிமைகள்

அந்தணர் -துறவி வாழ்க்கை வாழ்வார்.

அரசர் -நாட்டை ஆழ்பவர்

அறிவர் -முக்கால அறிவினர், முற்காணியர் (Prophets)

ஆயர் -ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடையர்.

இளையர்-வேலைக்காரர்.

ஏரோர் -உழவர்.

ஐயர் -முனிவர்.

செவிலி-அரசர் ,செல்வர் முதலிய பெருமக்கள் பிள்ளைகளின் வளர்ப்புத்தாய்.

கூத்தர் -கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர்.

துடியர் -உடுக்கை யடிப்பவர்.

தேரோர்-தேர்ப்பாகர்.

படைஞர்-படைமறவர்.

பரத்தையர்-விலைமகளிர், பொதுமகளிர்.

பாகர் -குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர்.

பாங்கன் -அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன்.

பாங்கி -அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி.

பாணர்-  இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய            இசைத் தொழிலார்

பார்ப்பார்-ஆசிரியர், புலவர், உவச்சர், குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித் தொழிலார்.

பொருநர்-ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும்.

மறவர்-போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர்.

வாணிகர்-சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்ட மாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல் கடந்து வெளிநாட்டொடு வணிகஞ் செய்யும் நீர்வாணிகரும்.

விரிச்சி -விரிச்சி (oracle) கூறுபவர். விள்- விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்.

வினைவலர்-ஏவிய தொழில் செய்வதில் வல்லவர்.

விறலி-விறல்(சத்துவம்)பட ஆடும் பாண்மகள்.

வேட்டுவர்-வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி, முல்லை பாலைவாணர்.

வேந்தர் -சேரசோழபாண்டியர்.

வேயர் -ஒற்றர்.

வேலன்- முருகன் என்னும் தெய்வமேறி யாடுபவன்.

வேளாளர்-உழுதுண்போரும் உழுவித்துண்போரும்.

இந்த மாதிரி பிரிவுகளாக தொல்காப்பியார் சொல்லிவைக்க நம்மவர்கள் பிற்காலத்தில் சாதி பெயர்களாக மாற்றி விட்டானார்.

தொல்காப்பியர் காலத் தமிழக எல்லை

வடக்கில் வேங்கட மலையும்(இன்றைய திருப்பதி மலை அல்ல, ஆந்திராவின் வட எல்லையில் உள்ள விந்திய மலைத்தொடர் தான் இந்த வேங்கடம் , ஏன்னெனில் எல்லை என்பது ஒரு தொடராக இருந்திருக்க வேண்டும்) தெற்கில்குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும்தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எதுஎல்லையெனின், அது குடமலைத் தொடரே.அக்காலத்தில் சேரநாடு திருச்சிராப்பள்ளிமாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு,பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது.அம் மலைத்தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிகவொடுங்கித் துறைநகர்களுக்கன்றி ஒரு நாட்டுமக்கள் அனைவரும் வசிக்கத்தக்க பரப்புள்ளதாயிருந்த தில்லை. பிற்காலத்திலேயேமேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத்தெரிகின்றது.(இப்படிதான் இன்றைய கேரளா வந்திருக்கும் போல )

மூன்று ஐந்தானது 

சேர, சோழ , பாண்டியர் என இருந்த மூவேந்தர்கள் , தொல்காப்பியருக்குப்பின் ஆரியச் சூழ்ச்சியாலும் தன்னலப் பற்றாலும்மூவேந்தரிடையும் அடிக்கடி போர் மூண்டதனாலும்,துணையரசரும் குறுநிலமன்னரும் தம் வேந்தர்க்கடங்காது முடிசூடி முழுவுரிமை யரசரானதனாலும்,சோழநாட்டின் வடபகுதி தொண்டை நாடென்றும்,சேரநாட்டின் கீழ்ப்பகுதி கொங்கு நாடென்றும் பிரிந்து போயின.

தொண்டைநாடு

தொண்டைநாடுஆர்க்காடுபோல் நிலைத்திணையாற் பெயர்பெற்றதாகத் தெரிகின்றது. தொண்டை என்பதுகோவைக் கொடியையும் ஆதொண்டையையும் குறிக்கும்.ஆதொண்டை என்பது காற்றோட்டிச் செடிக்கும்காற்றோட்டிக் கொடிக்கும் பொதுப்பெயர். இம்மூன்றனுள் ஒன்று மிகுந்திருந்த நிலப்பகுதிதொண்டைநாடெனப் பெயர் பெற்றது.

திரையன் என்பதுநெய்தல்நிலத் தலைவன் பெயர். ஆர்க்காடு, செங்கழுநீர்ப்பட்டு,  நெல்லூர் ஆகிய மும்மாவட்டப் பகுதிகளைக் கொண்டது தொண்டைநாடு.ஒருகால் நெய்தல் நிலச் சிறப்புப்பற்றி, அந்நாட்டரசன் திரையன் எனப் பெயர்கொண்டிருக்கலாம்.

கொங்குநாடு

கொங்கு என்பது மணம், பூந்தாது, தேன்,கள், கருஞ்சுரை, சொங்கு (உமி அல்லது புறத்தோல்),குவிவு என எண் பொருள்படும் பலபொரு ளொருசொல்.கொங்குநாட்டில் தேன் மிகுதியாக அல்லதுசிறந்ததாகக் கிடைப்பதால், அந் நாடுகொங்குநாடெனப்பட்டது என்று பலர் கூறுவர். தேன்கொங்குநாட்டிற்கே சிறப்பாக வுரிய தன்று.சோலைகள், சிறப்பாக இயற்கைச் சோலைகள் உள்ளஇடமெல்லாம் தேன்கூடு கட்டப்படும். அத்தகையசோலைகளாற் போர்க்கப் பட்டிருப்பவைபெருமலைகள் அல்லது உயர்மலைத்தொடர்கள்.கொங்குநாட்டு மலைகளிற் போன்றே பிறநாட்டுமலைகளிலும் தேன் கூடு கட்டும்.

கொங்குநாட்டின் பண்டைக் காலப்பரப்பைப் பலர் சரியாக அறியவில்லை. குடகமும்எருமையூர் (மைசூர்) நாடும் சேலங் கோவைமாவட்டங்களும் சேர்ந்ததே முதற்காலக்கொங்குநாடாம். அதில் உடல்போல் மிகுந்திருந்தது எருமையூர் நாடே. மூவேந்தர் நாடுகளுள்ளும் உயர்ந்துகுவிந்திருக்கும் நிலப்பகுதி எருமையூர் நாடென்பதை,புறணிப் படத்தையும் (relief map) மட்டக்கோட்டுப் படத்தையும் (contourmap) பார்த்துத் தெளிக. சேரநாட்டின் கீழைப் பகுதி, மலைகளாலும் உயர்நிலமட்டத்தாலும் குவிந்திருப் பதனாலேயே கொங்குநாடெனப்பட்டது.

கொங்குநாடு பிற்காலத்திற்குடகொங்கு குணகொங்கு என இரண்டாகப் பிரிந்தது.பின்னர்க் குணகொங்கும் வடகொங்கு தென்கொங்குஎன இரண்டாகப் பிரிந்தது. எருமையூர் நாட்டின்மேற்பகுதி குடகொங்கு; குடகப் பகுதியே முதற்காலக்குடகொங்காகும். அதன் கீழ்ப்பகுதியும் சேலங் கோவை மாவட்டங்களும் குணகொங்கு, அது இரண்டாகப்பிரிந்தபின், எருமையூர் நாட்டின் கீழ்ப்பகுதிவடகொங்கு; சேலங் கோவை மாவட்டங்கள்தென்கொங்கு. வடகொங்கின் தென்பகுதி கங்கநாடெனமாறிற்று.

இன்று கொங்கு நாடெனப்படுவது சேலங்கோவை மாவட்ட நிலப்பகுதியே. அதுவே தென்கொங்குவடகொங்கு மேல்கொங்கு (மீகொங்கு) என மூன்றாகப்பிரிந்தும் உள்ளது.

கொங்குநாடு தொடர்ந்த போர்நிகழ்ச்சியாற் செங்களமாகி அமைதிகுலைந்ததனால், சேரன் தன் தலைநகரைக்கருவூரினின்று 


                                                                                                                          தொடரும்...................

Monday, February 27, 2012

நாம் யார் -18

பாகம்-17 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பாரதக் காலம் (தோரா. கி.மு. 1100-1000)

பீடுமன் பரசுராமனிடம் விற்கலைபயின்றவன் என்று சொல்லப்படுவதால், பாரதக்காலம் இராமாயணக் காலத்திற்கு இருதலைமுறையே பிற்பட்டதாகும்.

பாண்டவரும் கௌரவரும் திங்கள் மரபைச் சேர்ந்தவர். வடநாட்டுத் திங்கள் மரபு,பாண்டியன் கங்கைக்கண் நிறுவிய தனது நிர்வாக தேவைக்காக குடியேற்றிய தமிழர்கள் . பாண்டவரின் முன்னோர் புதன் (அறிவன்),புரூரவன், ஆயு, நகுடன், யயாதி, பூரு, துடியந்தன், பரதன்,அத்தி, குரு, சந்தனு, பீடுமன், விசித்திரவீரியன்,திருதராட்டிரன், பாண்டு என்போர். பீடுமன் கௌரவ பாண்டவரின் பாட்டனும், திருதராட்டிர பாண்டுவர்அவரின் தந்தைமாரு மாவர்.

அருச்சுனன் (மருதன்) தென்னாட்டுத் திருநீராட்டு வருகை

அருச்சுனன் குமரிநீராடத் தென்னாடு வந்தபோது பாண்டியன் (சித்திராங்கதன்) மணவூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டிருந்தான். அங்குப் பாண்டியனின் விருந்தினனா யிருந்த அருச்சுன னுக்கும் பாண்டியன் மகள் சித்திராங்கதைக்கும் இடையே காதல் நேர்ந்ததனால், இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இந்த மாதிரி வட நாடு , தென்னாடு பிணைப்போடு இருந்துள்ளது.

ஆரியன் என்னும் சொல்

ஐரோப்பிய மொழிகளும், பாரசீகமொழியும், வேத மொழியும் சமற்கிருதமும், வடஇந்திய மொழிகள் மட்டுமன்றி நடுவிந்தியமொழிகளும், இன்று ஆரியம் என்று சொல்லப்படினும்,முதன்முதல் அப் பெயர் ஏற்பட்டது வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய வடமொழிக்கே. சென்றநூற்றாண்டில் மாகசுமுல்லரே வேத மொழிக்கு அல்லதுசமற்கிருதத்திற்கு இனமான மொழிகட் கெல் லாம்ஆரியம் என்னுஞ் சொல்லைப் பொதுப்பெயராகவழங்கினார்.

ஐரோப்பிய மொழிகட்கும்பாரசீகத்திற்கும் ஆரியம் என்னும் பெயர் பொருந்தினும் வடஇந்திய மொழிகட்கு, சிறப்பாகநடுவிந்திய மொழிகட்கு, அப் பெயர் பொருந்தாது.வடமொழியாளரே வேதக்காலத்தின்பின்,தென்னிந்திய மொழிகளை யெல்லாந் திரவிடமொழிகள் என்று கொண்டு, தமிழ், தெலுங்கு,கன்னடம், மராத்தி, குசராத்தி ஆகிய ஐந்தையும்ஐந்திரவிடம் (பஞ்ச திராவிட) எனக் குறித்தனர்.வடஇந்திய மொழிகளை 'முன்வடமொழி' (பிராகிருதம்)எனக் குறிப்பதே பொருத்தமாம்.

தொல்காப்பியம் (கி.மு.7ஆம் நூற்றாண்டு)

தொல்காப்பியம் இன்றுள்ள முதல் தொன்னூல் மட்டுமன்றி, பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கிநிற்கும் ஒரு பெருந் தூணாகும். அஃதின்றேல், கடைக்கழகத்திற்கு முந்திய தமிழும் தமிழ் வரலாறும் அதனால் தமிழர் வரலாறும் அறவே இல்லாமற் போம்; தமிழன் உலகுள்ள வளவும் ஆரியனுக் கடிமையாகவே இருந்துழல்வான். குமரிநாட்டுத் தமிழன் தன் நுண்மாண் நுழைபுலத்தால் வகுத்த பொருளிலக்கணம், அதற்கு அச்சிறப்பைத் தந்துள்ளது.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள (அகமும் புறமும்பற்றிய) பாட்டு, உரை, நூல் (இலக்கணமும் பல்வேறு அறிவியலும்), வாய்மொழி (மந்திரம்), பிசி (விடுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்னும் எழுநில யாப்பிற்கும்; வெள்ளை, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள், பரிபாடல் என்னும் அறுவகைப் பாவிற்கும்; புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியுறை என்னும் நால்வகை வாழ்த்திற்கும்; பாவண்ணம், தாவண்ணம் முதலிய இருபதுவகை வண்ணத்திற்கும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பிற்கும் இலக்கியமா யிருந்தவற்றுள் ஒன்றுகூட இன்றில்லை.

தொல்காப்பிய அரங்கேற்றம்

தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர். மாணவராயின் அகத்தியரை அல்லது அகத்தியத்தைத் தம் நூலிற் குறித்திருப்பார்.அகத்தியர் தலைமையிலேயே  தொல்காப்பியமும்அரங்கேற்றப் பட்டிருக்கும். "முந்துநூல் கண்டு" என்றதற் கேற்ப, "என்மனார் புலவர்" என்று பலர்பாலிலேயே முன்னூலாசிரியரைத் தம் நூல் முழுதும் குறித்திருக்கின்றார்.  அகத்தியர்க்கும் தொல்காப்பியர்க்கும் இடைப்பட்ட காலம் ஏறத்தாழ ஐந்நூறாண்டாகும். முன்னவரின் மாணவரேபின்னவர் என்று கொண்டவர்,அகத்தியரைப்பற்றித் தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பு மின்மையால், அதற்குங் கரணியங்காட்டுவார்போல் ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.

தொல்காப்பியர்காலத்தில் கழகமும் ஏற்படவில்லை. பாண்டியன் பெரும்பாலும் மணவூரில் வதிந்திருத்தல் வேண்டும்.அற்றைப் பாண்டியன் பெயர் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்று, பனம்பாரனார் குறித்துள்ளார். அவன் இரண்டாம் கடல்கோட்குத் தப்பினஇடைக்கழகப் பாண்டியன் அல்லன். நிலமில்லாத தன்குடிகள் சிலர்க்கு நிலம் ஒதுக்கியதனால், அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

தொல்காப்பியத்திலுள்ளஆரியக் கருத்துகளும் ஒருசில வட சொற்களும் பற்றி நாம் வருந்த வேண்டுவதில்லை. அது அக்காலத்துநிலைமை. ஆரியக் கருத்தும் சொல்லும்கொண்டிருந்ததனாலேயே, அது இதுவரை அழிவுறாம ல்தப்பிவந்துள்ள தென்று நாம் உணர்ந்துமகிழவேண்டும்.(யாராவது தொல்காப்பியத்தில் வடமொழி சொல் இருக்கு என்று கொளுத்துவதற்கு கிளம்பி விடாதிர்கள் )
                                                                                                  தொடரும்.......................................

Sunday, February 26, 2012

நாம் யார் -17

பாகம்-16 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

பிராமணன்.

ஆரியப் பூசாரிகள் சிந்துவெளியினின்று கங்கைவெளிக்கு வந்தபின்,வேத மந்திரங்களின் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பல வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதியும்அரசவேள்வி (ராஜஸூய) வேட்ட பெருநற்கிள்ளியும் பலயானைச் செல்குழு குட்டுவனும் போன்ற அரசரைத் தமிழகத்தில் துணைக்கொண்டது போன்றே, விதேகநாட்டு மாதவன் போன்ற அரசரை வடநாட்டில்துணைக்கொண்டு ஆரிய வேள்வி மதத்தைப்பரப்பியிருக்கின்றனர் என்பது, சதபதபிராமணத்தால் தெரிய வருகின்றது .

வேள்வி எல்லாம் வல்லதும் அளவிலாஆற்றலுடையது மாகுமென்றும், வேள்வி யாசிரியனேமக்களுட் பெரியவ னென்றும், அவன் வேள்விவளர்ப்பதனாலேயே மழை பெய்து பயிர் விளைந்து ஆசுரந்து உலகம் நடைபெறுகிறதென்றும் கருத்துகள்பரப்பப் பட்டன. ஆரியப் பூசாரி பெரியவன் என்னும்கருத்தில் பிரமன் (Brahman)எனப்பட்டான். பிரமன் = பிராமணன்.

நைமிசாடவி மாநாட்டு

பிராமணர் தென்னாட்டுத் தமிழநாகரிகச் சிறப்பைப்பற்றிக் கேள்விப்பட்டு, இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிசஅடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத்தெரிகின்றது.

ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒருபெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்றுபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.இமை-நிமை - வ. நிமி - நிமிஷ - நைமிஷ - நைமிச.

நைமிசாடவி மாநாட்டுத்தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்றுவிந்தமலை யடைந்து அங்கிருந்து தண்டக அடவி வந்துதங்கி, அதன்பின் காஞ்சி யடைந்து, பின் காவிரிதோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலைவழியாகப் பொதியமலை போய்ச் சேர்ந்ததாகக்காஞ்சிப் புராணங் கூறுகின்றது.

அகத்தியர் 

விந்தமலை கடக்க முடியாத தென்று ஆரியர் நெடுநாளாகக் கருதிக் கொண்டிருந்ததனால்,அகத்தியர் அதைக் கடந்து வந்தபோது அதன்செருக்கை யடக்கினதாகக் கூறினர்.

அகத்தியர் காசியிற் புறப்படு முன்னரேசிவபெருமானிடந் தமிழ் கற்றார் என்னுங் கதையும்,அகத்தியருக்கு அடுத்தே ஒரு பிராமணக் கூட்டம் வந்து தண்டக அடவியில் தங்கியிருந்ததும், அகத்தியர்இராமனுக்கு வில்லும் வாளும் வழங்கியதும்நோக்குமிடத்து, ஓர் ஆரியக் குடியேற்றக்கூட்டத்தின் தலைவராகவே அகத்தியர் திட்டமிட்டுவந்ததாகத் தெரிகின்றது.

அவர் தமிழகம் வந்து முத்தமிழுங் கற்று,ஒரு முத்தமிழிலக்கணம் இயற்றி, அதற்கு அகத்தியம்எனப் பெயரிட்டார். தமிழ முனிவர்போற்பொதியமலையில் தங்கி, ஆரியரும் தமிழருமானமாணவர் பலருக்குத் தமிழ் கற்பித்தார்.

அகத்தியர் வழிகாட்டியபின் தமிழகம்வந்த பிராமணர், தென்னாட்டாரும் வடநாட்டார்போன்றே மதப்பித்தரா யிருந்தது கண்டு, தாம்நிலத்தேவரென்றும் தம் மொழி தேவமொழி யென்றும்ஏமாற்றி, குமரிமுதல் பனிமலைவரை இந்தியப்பழங்குடி மக்கள் அனைவரையும், உலகில் மக்களுள்ள கால மெல்லாம் தமக்கும் தம் வழியினர்க்கும்அடிமைப்படுத்துதற் பொருட்டு, குமுகாயத் துறையில்ஒன்றும் சமயத்துறையில் ஒன்றுமாகஈரனைத்திந்தியத் திட்டங்களை வகுத்துவிட்டனர்.

நான்கு வரணப் பகுப்பு

கல்வி ,காவல் ,வணிகம் ,உழவு ,கைத்தொழில் என்னும் மருதநிலத் தொழில்கள் ஐந்தனுள், கைத்தொழில் உழவிற்குப்பக்கத் துணையான இருந்ததால் , ஏனை நான்கிற்கும்உரிய அந்தணர், அரசர் ,வணிகர் ,வேளாளர் என்னும் நால்வகுப்பாரை பிரித்து அறியப்பட்டது.

உலக வழக்கில் கல்வி, காவல் (ஆட்சி),வணிகம், உழவு, கைத்தொழில் என்னும் ஐவகைத்தொழில் செய்வோரும், முறையே, பார்ப்பார் ,அரசர், வணிகர், உழவர்(வேளாளர்) ,தொழிலாளர் எனப்படுவர்.

பிராமணர் இப் பாகுபாட்டைப் பயன்படுத்தி,பார்ப்பாரையும் அந்தணரையும் ஒருங்கே பிராமணர் என்றும், அரசரைச் சத்திரியர் என்றும், உழவர் சிறார் சிலர் மாடு மேய்ப்பதாலும்,உழுவித்துண்ணும் வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்(வெள்ளாளர்) ,பலர் கடைகாரரும் வணிகருமாயிருப்பதாலும், உழவும் வணிகமும் மாடுமேய்ப்பும் ஒருங்கே செய்பவரை வைசியர் என்றும், உழவு,கைத்தொழிலுங் கூலிவேலையுஞ் செய்யும் மூவகுப்பாரைச் சூத்திர ரென்றும் மக்களைநால்வகுப்பாக வகுத்துனார்.

பிராமணனுக்கு வெண்ணிறமும்சத்திரியனுக்குச் செந்நிறமும் வைசியனுக்குப் பொன்னிறமும் சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால்வரணப் பாகுபாட்டைஏற்படுத்தி, பிராமணர் கல்வித்தொழிலை யும் பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்டதொழில்களையும் வழிவழி செய்து வரவேண்டுமென்றும்,

சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவ ரென்றும், சூத்திரன் மேன் மூவர்க்கும் வைசியன் மேலிருவர்க்கும்சத்திரியன் பிராமணர்க்கும் தொண்டுசெய்யவேண்டு மென்றும், இது இறைவன் ஏற்பாடென்றும்,மேல்வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இரு பிறப்பாளரென்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலுங்கேட்கக் கூடாதென்றும், பிராமணனைக் காணின் மற்றமூவரும் தத்தம் தாழ்வுநிலைக்குத் தக்கவாறு ஒதுங்கிநிற்கவேண்டு மென்றும் இறைவன் கட்டளையிட்டதுபோற் கற்பித்துவிட்டனர்.

இச் சட்டதிட்டம் வடநாட்டில்விரைந்து முழுவதும், தென் னாட்டிற் படிப்படியாகப்பேரளவும், ஆட்சிக்குக் கொண்டுவரப் பட்டது.

                                                                                                   தொடரும்....................................

Saturday, February 25, 2012

நாம் யார் -16

பாகம்-15 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

மறைமுக போர்

ஆரியர் தென்னாடுவந்தபின், இந்திரன் என்னும் சொல்தமிழகத்திலும் வழக்கூன்றியது. "இந்திரனேசாலுங் கரி" என்று திருக்குறளிலும் , இந்திரவிழவூ ரெடுத்த காதை யென்று சிலப்பதிகாரத்திலும் இருக்கிறது. இந்திரவிழா பண்டைத் தமிழர் விழாவாயிருந்ததனாலேயே, காவிரிப் பூம்பட்டினத்தார் அந்நகர் மூழ்கும்வரை அதைக் கொண்டாடி வந்தனர்.

வடநாட்டரசர் தமிழர் போன்றேஇந்திரனைக் குலதெய்வமாகக் கொண்டிருந்ததனால்,ஆரியப் பூசாரியர் இந்திரனை மன்றாடி மந்திரங்கள் பாடினர்.

ஆரியக் கொலை வேள்வியையும்சிறுதெய்வ வணக் கத்தையும் அன்னிய மொழிமந்திரங்களையும் ஏற்காத சிவ நெறியாரான மன்னர், ஆரியப் பூசாரியரைப் போற்றவில்லை.அதனால், அப் பூசாரியர் தமக்கு வயப்பட்ட வரைக்கொண்டே வயப்படாதவரொடு போரிட்டு வென்றனர்.இத்தகைய வெற்றிகளே இருக்கு வேதத்திற்சொல்லப்பட்டுள்ளன.நேரடியாக மோதாமல் சூழ்ச்சியால் வென்றார்கள் ஆரிய பூசாரிகள்.

சோழ வழி வந்தவன் ராமன்

சோழன் வேந்தன் வடநாட்டில்தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன் வழிமரபே, சமற்கிருத இலக்கியத்திற் 'சூரியவமிசம்' என்று சொல்லப்படுவது. அவ் வழியில்வந்தவனே இராமன்.

கம்பராமாயணம், பாலகாண்டம், குலமுறைகிளத்து படலத்தில், இராமனின் முன்னோராகச்சொல்லப்பட்டவர் பதினால்வர். அவர் பெயர்கள்: மனு, பிருது (வேனன் மகன்), இட்சுவாகு, ககுத்தன்(ககுத்ஸன்), பாற்கடல் கடைந்து அமுதளித்தவன் (நிமி), மாந்தாதா, முசுகுந்தன், சிபி, சாகரர்,பகீரதன், நூறு குதிரைவேள்வி (அசுவமேதம்) செய்தவன்,இரகு, அசன், தசரதன் என்பன.

முசுகுந்தச் சோழன்

இந்திரனுக்கு உதவியதாக ஒரு வரலாறு

ஒருகாலத்தில் கலுழன் என்பவன் விண்ணுலகையடைந்து, அங்கிருந்த அமிழ்தத்தைக் கவர்ந்து சென்று விடுகிறான் . இந்திரன் தான் திரும்பி வருமளவும்விண்ணகரைக் காக்க முசுகுந்தச் சோழனை அமர்த்தி,அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தையும் நிறுத்திவிட்டு,அமிழ் தத்தை மீட்கச் சென்றுவிட்டான்.

இந்திரன் இல்லாத நேரத்தில் அவுணர் என்பவர்கள் திரண்டு வந்து முசுகுந்தனொடு போர் புரிந்து தோற்றுபோனார்கள், பின்னர் ஒரு வஞ்சனையால் அவனை வெல்லக் கருதி, அவர் மீண்டும் வந்து, அவன் அகக்கண்ணும் காரிருளில் மூழ்குமாறு ஒரு பேரிருள் அம்பைவிடுத்தனர். அவன் செய்வதறியாது மயங்கிநிற்கும்போது, அவன் துணைப்பூதம் ஒரு மந்திரத்தைஉதவ அதனால் தெளிந்து, அவுணரைக் கொன்றுகுவித்தான். மீண்டுவந்த இந்திரன் செய்தியறிந்து, முசுகுந்தனுக்கு நிலையாக வுதவுமாறு அப்பூதத்தையும் அவனுடன் அனுப்பினான்.

சீனா நாட்டுக்கு உதவியதாக ஒரு வரலாறு

சீன நாட்டிற்கு வானவர் நாடு என்றொருபெயருண்டு. அந் நாடு பூதக் கதைகட்குப் பெயர் போனதென்பது அலாடின் கதையால் அறியப்படும்.

முசுகுந்தன் சீனநாட்டரசன் ஒருவனொடுநட்புக் கொண் டிருந்து, அவன் நகருக்குச்சென்றிருக்கலாம். அன்று கலுழவேகன் என்பானொருவன் அமிர்தபதி என்பா ளொருத்தியைக் கவர்ந்து சென்றிருக்கலாம். சீனவரசன் முசுகுந்தனைத் தன்நகரைக் காக்குமாறு இருத்திவிட்டு அமிர்தபதியைமீட்கச் சென்றபின், ஊணர் (Huns- ஹூணர்) என்னும் நடு ஆசியவாணர் சீனத் தலைநகரைத்தாக்கி முசு குந்தனால் முறிடிக்கப்பட்டிருக்கலாம்.சீன அரசன் தனக்குத் துணையென்று கொண்டிருந்தபூதப்படிமையைப் புகாருக்கு அனுப்பியிருக்கலாம்.

இருவேறு வரலாறு வரலாறு கொண்டு இருக்கும் முசுகுந்தன் , மொத்தத்தில் யாராவது ஒருவருக்கு உதவி இருக்கான் என்பது உண்மை.

சிபி சோழன்

சிபி என்பவன், புறாவைத் துரத்திய பருந்திற்குத் தன் தசையை அறுத்துக் கொடுத்த செம்பி அல்லது செம்பியன் என்னும் சோழனே. அவன்பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.இதையறியாத (அல்லது அறிந்தே ஏமாற்று கின்ற) வடமொழிப் புலவர், சோழர் சிபி என்னும் வடநாட்டுஆரிய வரசனின் வழியினராகக் கூறி வந்தனர்.

ஆரிய சூழ்ச்சி

வேதக்காலத்தில் வடஇந்தியாவில் நிகழ்ந்த இனப்போர்களெல்லாம், ஆரியச் சூழ்ச்சியால் பழங்குடிமக்களும் ஆரிய அல்லாத வட நாட்டவருக்குமான ஒரே இனத்திற்குள் நிகழ்ந்தவையே.

தென்னகத்தில் சிறப்பாக இருந்த பண்டைய தமிழர்களில் எதற்கு எடுத்தாலும் அஞ்சி நடுங்கும் மக்களும் , கல்வி அறிவு இல்லாத மக்களும் , எந்தவித உழைப்பும் இல்லாத உண்டு வாழ்ந்த சொம்பெறிகளும் சில எண்ணிக்கையில் இருந்து உள்ளனர் இவர்களை ஆரிய பூசாரிகள் தங்களுக்கு அடிமை படித்தி கொண்டனர் .ஏற்கனவே வட நாட்டில் இனப்போர் கள் நிகழ்த்தி அடிக்கி விட்ட ஆரியார்கள் , தென் நாட்டில் இந்த அடிமை தமிழர்களை வசபடித்தில் தமிழர்களின் மீது தாக்கும் சூழ்ச்சிகளை கையாண்டானர் .

                                                                                               தொடரும்...............................

Thursday, February 23, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது , களத்தில் பணிகளை ஆரமித்து விட , ஆனால் பறக்கும் வேலைகள் நடக்கிறது தலைவர்கள் மத்தில் திட்டம் போடுவது , அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவது என ஒருபக்கம் மொத்த தமிழக அரசியலும் சங்கரன்கோவில் நோக்கி போகிறது.

அதிமுக   

வேட்பாளர் பெயர் :- எஸ்.முத்துசெல்வி

படிப்பு :- பொறியியல் பட்டதாரி

தொழில் :- இல்லத்தரசி

அரசியல் பின்னணி :- சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் மகள்

மதிமுக 

வேட்பாளர் பெயர் :- டாக்டர் .சதன் திருமலை குமார்

படிப்பு :- மருத்துவம்

தொழில் :-மருத்துவர்

அரசியல் பின்னணி :- மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர். இவர் முன்னாள் வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ

திமுக

வேட்பாளர் பெயர் :- ஜவஹர் சூரியகுமார்,

படிப்பு :- எம்.ஏ.பி.எல். பட்டம்

தொழில் :- வழக்கறிஞர்

அரசியல் பின்னணி :- முன்னாள் காங்கிரஸ் மத்திய மந்திரி அருணாசலத்தின் உறவினர் , சங்கரன்கோவில் நகர தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

தேமுதிக

வேட்பாளர் பெயர் :- முத்துக்குமார்

படிப்பு :- பி.இ., எம்பிஏ பட்டப் படிப்பு

தொழில் :- சொந்த தொழில்

அரசியல் பின்னணி :- கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர்தேமுதிக மாவட்ட நிர்வாகி .


அதிமுக போடும் முத்தரப்பு கணக்கு 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் வேகத்தோடு அரசியல் முத்தரப்பு கணக்கு போட்டுள்ளது .

1.எதிர்கட்சிகளை ஓன்று சேர விடாமல் ஓட்டுக்களை பிரித்து சுலபமாக வெல்வது.இதனாலே சவால்கள் விட்டு வலுகட்டாயமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது தேமுதிக , இவர் விட்ட சவால் விஜயகாந்துக்கு மட்டுமில்லை , மறைமுகமாக கருணாநிதிக்கும் தான்.

2.தேர்தல் முடிவை பொறுத்து புதிய கூட்டணி முயற்சி , இருந்த தேமுதிக கழட்டி விட பட்டது அவரின் அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதால்.தமிழக அளவில் மூன்றாவது அணி அமைத்து போட்டி போட்டு வென்று விட்டு , மத்தியில் யார் அதிக இடங்களை வெல்கிரார்களோ அவர்கள் உடன் பின் ஒப்பந்த அடிப்படையில் கூட்டு , பாஜக ,காங்கிரஸ் யாராக இருந்தாலும் சரி 

3. தேமுதிகவை களத்தில் இறக்கி விட்டுள்ளத்தால் , ஏற்கனவே மதிமுக களத்தில் ஆளும் கட்சிக்கு இணையாக பணியில் இருப்பதாலும் , திமுக நான்காம் இடத்துக்கு தள்ளவேண்டும் என்ற நோக்கமும்.

திமுக போடும் முத்தரப்பு கணக்கு 

1.தேமுதிக தன் பக்கம் கூட்டணிக்கு இழுத்து ,2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புது கூட்டணி என்ற நிலை உருவாக்குவது.

2.ஒருவேளை இந்த இடைதேர்தலில் தனது வேட்பாளரை திரும்ப பெற்று கொண்டு , தேமுதிகவை ஆதரித்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை .

3. இந்த இடைதேர்தலில் தோற்று போவோம் என தெரிந்தே திமுக களம் காணுகிறது , எதனால் தன்னிடம் இருந்து போன மதிமுக செல்வாக்கு பெற்றுற கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது , இதனாலும் தேமுதிகவை ஆதரிக்கும் நோக்கம் வலுபெற்று உள்ளது

மற்ற கட்சிகள் , இந்த இரண்டு பெரும் கட்சிகளை மீறி எப்படி இந்த தேர்தல் களத்தை பயன் படுத்த போகிறார்கள் , இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்து பெரிய அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் காத்து இருக்கிறது , அது சங்கரன்கோவில் தொகுதி மக்களின் கையில் இருக்கிறது. இலவசம் , பணம் இரண்டையும் மக்கள் வெறுத்து வாக்கு செலுத்தினால் , நிச்சயம் சங்கரன்கோவில் ஒரு மாற்றத்தில் ஆரம்பமாக கூட அமைய வாய்ப்புகள் அதிகமே ...

கூர் மழுங்கி போன அரிவாள்கள் , சத்தமில்லாத முரசு ,ஆனால் பம்பரத்தின் வேகம் அதிகமாகவே இருக்கிறது.

                                                                                                 தொடரும்................................

Wednesday, February 22, 2012

நாம் யார் -15

பாகம்-14 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

ஆரிய பூசாரிகள்

ஆரியப் பூசாரிகள், உடல் வளர்ச்சியின்றிச் சிறுபிள்ளைகள் போல்,இயற்கையும் செயற்கையுமான பல்வேறு சிறு தெய்வங்களைப் பற்றி முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலாகவும் பாடிய பாடற்றிரட்டே,ஆரிய வேதத் தொகுப்பாம். முதன்முதலாகத்தோன்றிய தொகுப்பு (ஸம்ஹிதை) இருக்கு (ருக்) வேதம்.அதில் கங்கை வெளியும் பிரமபுத்திர வெளியுமாகியகீழ் வடவிந்தியாவிற்குரிய அரிசி, ஆலமரம்,வேங்கை முதலியன சொல்லப்படாமையால், அத்தொகுப்பு முழுதும் பஞ்சாபு என்னும் ஐயாற்று வெளியில் ஆரியர் தங்கியிருந்த போதேபாடப்பட்டதாக அறிஞர் கருதுகின்றனர்.

வேள்வி வளர்த்தல்

பூசாரிகளல்லாத ஆரிய வந்தேறிகள் பழங்குடி மக்களொடு கலந்து போனதனால், அவர்களொடு கலவாத ஆரியப் பூசாரிகள் நாட்டுமக்களை யடுத்தே பிழைக்க வேண்டியிருந்தது. சிவநெறி யாரும் நாகரிகமக்களும் பொதுமக்களிடை யிருந்ததனால், அவர்களாற் புறக்கணிக்கப்பட்ட ஆரியப் பூசாரிகள்,அரசரை வயப் படுத்தச் சூழ்ச்சி செய்து சில வழிகளைவகுத்தனர். அவற்றுள் ஒன்று வேள்வி வளர்த்தல்.

தெய்வத்தின் பெயரால் என்னசொன்னாலும் நம்புவதும் எதைக் கேட்டாலும் கொடுப்பதும் ஆகிய மதப்பித்தம், பழங்குடிமக்களின் சிறப்பியல் பென்பது கண்டு, அரசரிடம் சென்று,தாங்கள் தேவர் வழிவந்த நிலத்தேவர்(பூசுரர்) என்றும், தங்கள் மொழி தேவமொழியென்றும் தாங்கள் வகுத்த வேள்விகளைச் செய்தால்அரசர்க்கு வெற்றியும் குடிகட்கு நன்மையும் நாட்டிற்குச் செழிப்பும் உண்டாகுமென்றும்,சொல்லி ஏமாற்றினர். இவ் வேமாற்றிற்கு,அவர்களின் வெண்ணிறமும், உரப்பியும் எடுத்தும்கனைத்தும் ஒலிக்கும் ஒலிகள் மிக்க அவர்களின்மந்திரமொழியும் பெரிதும் துணைசெய்தன. அடியைச்சாய்த்தால் மரஞ்சாய்வதுபோல் அரசனை வயப்படுத்தினால் குடிகள் தாமாக வயப்படுவர் என்றுஅவர்கள் கருதியது நிறைவேறிற்று. விசுவாமித்திரர்போன்ற அரசர் சிலர் வயப்பட்டனர்.

நான்கு வேதம்

வேள்வி செய்யவேண்டியமுறையைப்பற்றிப் பெரும்பாலும் உரைநடையில் இருக்கு மந்திரங்களை எடுத்துக் கூறி, அவற்றிற்கு எசுர்( யசுர் வேதம் ) வேதத் தொகுப்பென்றும்; வேள்வியிற் பாடற் கேற்றவாறு பல ரிக் வேத மந்திரங்கட்கு இசையமைத்து, அவற்றின் திரட்டிற்குச் சாமவேதத் தொகுப்பென்றும் பெயரிட்டனர். இதனால், முன்னர் ஒரே வேதமாயிருந்தது மூவேதம் (த்ரயீ) ஆயிற்று.

வேள்வியில் மந்திரம் கூறித்தெய்வங்களை அழைப்பவன் 'ஹோதா' என்றும், தீ வளர்ப்பவன் 'அத்வர்யு' என்றும், இசை வகுத்தமந்திரங்களைப் பாடுபவன் 'உத்காதா' என்றும்பெயர் பெற்றனர். வேள்வியின் பெருமைக்குத்தக்கவாறு, இம் முப்பணியர் தொகையும் மிகும்.

கொளுத்த பூசாரி வர்க்கம்

பற்பல வேள்விகள் வகுக்கப்பட்டன. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும், பொதுமக்கள் பணம் அரசர் வாயிலாகச் செலவிடப்பட்டது.வேள்விப் பணியாளர் (ருத்விக்குகள்) பொன்னும்மணியும் ஏராளமாகப் பரிசு பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ஆரியப் பூசாரியர் கொழுக்க விருந்துண்டனர்.இங்ஙனம், அவர்கள் வாழ்க்கை எளியமுறையில் இனிதுநடைபெற வழிவகுக்கப் பட்டுவிட்டது. அரசர், வேள்விவளர்ப்பே கால மழைக்குக் கரணியம் என்று நம்பியதால், எத்துணைப் பொருட்செலவு நேரினும் பொருட் படுத்தாது, இக்காலத்துப் பொருளியல்வளர்ச்சித் திட்டங்கள் (EconomicProjects) போன்றே கருதி, இயன்றபோதெல்லாம் சிறு வேள்விகளையும் பெருவேள்விகளையும் இயற்றுவித்து வந்தனர்.

                                                                                                     தொடரும்............................

Tuesday, February 21, 2012

நாம் யார் -14

பாகம்-13 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தியூத்தானியம் (செருமானியம்)

தியூத்தானியக்கிளைகள் ,1மேற்குச்செருமானியம், (2) வடசெரு மானியம், (3) கிழக்குச்செருமானியம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.பழைய ஆங்கிலம், பழைய பிரிசியம் (Frisian),பழைய சாகசனியம், பழைய உயர்செருமானியம் என்பன மேற்குச்செருமானியத்தையும் ,ஐசிலாந்தியம், தேனியம் (Danish),நார்வீசியம், சுவீடியம் என்பன வடசெருமானியத்தையும்; கோதியம் (Gothic),வாந்த லியம் (Vandalic)என்பன கிழக்குச் செருமானியத்தையும் சேர்ந்தவையாகும். இம் முப்பிரிவுகம் சேர்ந்ததியூத்தானியத்தின் மூல நிலையே (ProtoTeutonic), தியூத்தானிய முறை என்றுமேற்குறிக்கப்பட்டது.

இலத்தீன்

இத்தாலியரின் முன்னோர், நடுஐரோப்பாவிலிருந்து, கி.மு.8ஆம் நூற்றாண்டிற்குமுன்,ஆல்பசு (Alps),அப்பெனைன் (Appennines) மலைத்தொடர்களின் வழியாக வந்து குடிபுகுந்தனர்.கி.மு.753-ல், திபேர் (Tiber)ஆற்றங்கரைமேல் உரோம நகர் கட்டப்பட்டது. அந்நகரை ஆட்கொண்ட இலாத்தியம் (Latium)என்னும் கோட்டத்தில் (Dt.)பேசப்பட்ட மொழியே இலத்தீன். அது கி.மு.600-லேயேஒரு திரி மொழியாயிருந்தது. கி.மு. முதல்நூற்றாண்டில் தான் அது இலக்கியச் செம்மொழியாயிற்று. அதன் காலம் பின்வருமாறு ஐம்பாகுப்படும்.

1. பழைய இலத்தீன் - கி.மு. 75-ற்குமுன்

2. இலக்கிய இலத்தீன் - கி.மு. 75-கி.பி.175

3. பிந்திய இலத்தீன் - கி.பி. 175-600

4. இடைக்கால இலத்தீன் - கி.பி. 600-1500

5. இக்கால இலத்தீன் - கி.பி.1500-லிருந்து

கிரேக்கம்

கிரேக்க நாடு பல நகரநாடுகளாகத்தோன்றியதனால், கிரேக்க மொழி பல கிளை மொழிகளாகப் பிரிந்திருந்தது. அக்கிளைமொழி கள் ஆதிக்கம், அயோனியம், ஈயோலியம்,தோரியம், ஆர்க்கேடியம், சைப்பிரியம் என்பன. அதில் , அத்திக்கமே சிறந்த இலக்கியச்செம்மொழியாயிற்று. அதன் திரிபான காய்னீ (Koine)என்னும் பொதுமொழியே, அலெகசாந்தர் பேரரசிலும்பிசந்தியப் பேரரசிலும் ஆட்சிமொழியாய்இருந்தது. பழங்கிரேக்கத்தின் மிகப் பிந்திய வளர்ச்சியே இக்காலக் கிரேக்கம்.

இத்தாலியிலிருந்த 'கிரையாய்'என்னும் ஒரு சிறு மக்கட் கூட்டத்தின் பெயரினின்று,கிரீக்கு (Greek) என்னும்பெயர் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது.இத்தாலியும் கிரேக்க நாடும் ஒன்றையொன்று அடுத்திருப்பதனாலும், கிரேக்கப் பேரரசை அடுத்துஉரோமப் பேரரசு தோன்றியமையாலும், பின்னர் தன்தொடர்ச்சியான பிசந்தியப் பேரரசின் காலத்தில் கிரேக்கர் தம்மை உரோமர் என்றும்தம் மொழியை உரோமேயம் (Romaic)என்றும் சொல்லிக் கொண்டமையாலும்,இலத்தீனுக்கும் கிரேக்கத்திற்கும் பல சொற்கள்பொதுவாயிருப்பதனாலும், இருமொழியும் மிகநெருங்கியவை என்பது அறியப்படும். இலக்கியவளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும்கிரேக்கம் முந்தியதே ஆயினும், மொழிநிலையில்இலத்தீன் முற்பட்டதாகும்.

கெலத்தியம், செருமானியம்(தியூத்தானியம்), இத்தாலியம், எல்லெனியம்(கிரேக்கம்), பாலத்தோ-சிலாவியம், அல்பானியம்,அர்மீனியம், ஈரானியம், இந்தியம் எனத் தொண்பெருங்கிளை களையும், வேறு சில சிறு கிளைகளையுங்கொண்டது ஆரியம் என்னும் மொழிக்குடும்பம்.

தெலுங்கு உருவானது 

ஆரியர்கள் இந்தியாவில் உள்ளே வர , மெல்ல தெற்கு நோக்கி வர , ஏற்கனவே அங்கு அங்கே கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்த தமிழர்கள் பகுதியில் வந்து குடியேற , அவர்களுக்கும் ,இவர்களுக்கு உள்ள மொழியில் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் தமிழோடு அவர்களின் மொழியே சேர்த்து பேச ஆரமித்தர்கள் . இந்த ஆரிய குடும்ப மொழிகள் மெல்ல தமிழோடு கலந்து ஒரு பகுதி தெலுங்கு மொழியாக திரிந்து விட்டது , இவ்வாறு இருவருக்கும் ஒரு ஒத்த மொழி தான் ஏற்பட்டதே தவிர ,இரண்டு இனமும் ஓன்று சேர்ந்து விடவில்லை ,(இதனால் தான் இன்றும் தெலுங்கான பிரச்சனை இருக்கும் போல )

ஆரியர் நாட்டாண்மை 

ஆரியர் ஒரே யினத்தா ராயினும்,இசரவேலரைப்போல் முன்னோர் பெயரால் ஏற்பட்ட பல்வேறு குடிவகுப்புகளா யிருந்திருக் கின்றனர்.ஒவ்வொரு குடிவகுப்பிற்கும் ஒரு தலைவனும் ஒருபூசாரியும் இருந்தனர்.

ஆரியர் இந்தியாவிற்கு வந்தபோது ஆடுமாடு மேய்ப்பதை தவிர வேறொன்றும்தெரியாதவராக இருந்து உள்ளனர் ,அவர்கட்குக் கல்வியுமில்லை, கலைஇல்லை, எழுத்துமில்லை, இலக்கியமுமில்லை. பூசாரிகள் இயற்கைத் தெய்வங்களை, சிறப்பாக நெருப்புத் தெய்வத்தை வழிபட்டுத் தங்கள் குடிவகுப்பாரின் சடங்குகளை நடத்திப் பல்வகை வேள்விகளை வளர்த்து வந்தனர். குடிவகுப்புத்தலைவர் தமிழ்நாட்டு ஊர்க் கவுண்டர் அல்லது நாட்டாண்மைக்காரர் போன்றே தத்தம்தொழிலைச் செய்து, அவ்வப்போது ஏற்படும்சண்டைசச்சரவுகளையும் வழக்குகளையுந் தீர்த்துவந்தனர்.

வட இந்தியா  பழங்குடி 

ஆரியர் வரவிற்கு முன் வட இந்தியாவில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த பழங்குடி மக்கள்   ஆரியர் வரவால் , கடலில் கலந்த பெருங்காயம் போல ,வடஇந்தியப் பழங்குடி மக்களொடு இரண்டறக்கலந்துபோய் அவர் மொழியையே ஆரியர்கள் பின் பற்றினார். ஆனாலும் , ஆரியப் பூசாரிகள் மட்டும் தங்கள் உயர்வைக் காத்தற்குத் தனியினமாகவேவாழ்ந்து, மதவியல் பற்றிய தம் முன்னோர்மொழிச் சொற்களை, தம் மந்திரங்கள் என்னும் பாடல்களிலும் இருவகைச் சடங்குகளிலும் பல்வகைவேள்விகளிலும் போற்றி வந்திருக்கின்றனர். இது,அராபியரும் துருக்கியரும் பாரசீகருமான முகமதியர், இந்தியாவிற்கு வந்தபின் தம் முன்னோர்மொழிகளை மறந்து வடநாட்டுப் பழங்குடி மக்களின்தாய்மொழியாகிய இந்தியையே மேற்கொண்டு,மதத்துறையில் மட்டும் அரபிச் சொற்களையும் பாரசீகச் சொற் களையும் போற்றிகின்றனர்.

தென் இந்தியா  பழங்குடி 

வடஇந்தியாவில் ஆரியப் பூசாரிகள் தவிர மற்றெல்லாரும் பழங்குடி மக்களொடு கலந்துபோனதால் , இன்று வடநாட்டு மக்களைஆரியரென்றும் திரவிடரென்றும் பிரித்தறியமுடியாது. தென்னாட்டிற்கு வந்த ஆரிய வகுப்பு பூசாரியரே. ஆதலால், திரவிடருமான தென்னாட்டு அல்லது தென்னிந்திய மக்களெல்லாம் ஆரியக் கலப்பற்ற தூய பழங்குடியினத்தாரே.இந்தியா வெங்கும், தனிப்பட்ட முறையில் ஆடவரும்பெண்டிரும் பழங்குடி மக்களொடு மணவுறவும் கொண்டு வந்திருப்பினும், குலவளவில் ஓரளவு தூய்மையைப் போற்றிவந்திருக்கும் ஆரிய வகுப்பார் பிராமணரென்னும் பூசாரியரே.

                                                                                                                தொடரும்............................

Monday, February 20, 2012

நாம் யார் -13

பாகம்-12 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


பழம்பெரும் தமிழ் நாகரிகம் 

மேனாடுகளுள் முதற்கண் நாகரிகமடைந்தவை சுமேரியாவும் எகிப்தும் ஆகும்.

சுமேரியர், கொளுவுநிலை (Agglutinative) மொழி பேசிய துரேனிய அல்லது சித்திய இனத்தார்.பிற்காலத்தில் சேமிய வகுப்பார் சுமேரியாவைக்கைப்பற்றினர். சுமேரிய நாகரிக வழிப்பட்டது பாபிலோனிய நாகரிகம். இரண்டிற்கும் உரிய நாடு மெசொப்பொத்தாமியா. அது தைகிரிசு ஐப்பிராத்து என்னும் இரண்டுக்கும் கிடையில், கீழைத்துருக்கி நீங்கலாக உள்ள நாடாகும். இன்று கிடைத்துள்ள முதற்பழஞ் சுமேரிய வெட்டெழுத்தின் காலம் கி.மு 3100,சுமேரிய மொழி கி.மு. 2000 வரை ஆட்சிமொழியாயிருந்தது. அதன்பின், பாபிலோனிய அக்கேடிய (Akkadian) மொழி அதன் இடத்தைக் கொண்டது.

தென் பாபிலோனிய அல்லது தென்கல்தேயத் (Chaldean)தலைநகரான ஊர் என்னும் நகர் இருந்த இடத்தில்  அகழ்வில், கி.மு. 3000 ஆண்டிற்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கு உத்தரம் எடுக்கப்பட்டுள்ளது.நிலாத் தெய்வத்திற்கு அங்கொரு கோவிலும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாண்டியர் திங்களைத் தம் குடிமுதலாகக் கொண்டிருந்ததனால்,முதற்காலத்தில் அதைத் தெய்வமாகவும்வணங்கியிருத்தல் வேண்டும். பொதுமக்களும் அதைவணங்கியதைப் ‘பிறைதொழுகென்றல்‘ என்னும் அகப்பொருட் டுறையால் அறியலாம். பூம்புகாரில் ஒருநிலாக்கோவில் இருந்தது.

எகிபதிய அரசாட்சி, 31 ஆள்குடிகள் (Dynasties) தொடர்ந்து, தோரா. கி.மு. 3100-லிருந்து தோரா. கி.மு.335 வரை இருந்து வந்தது. அதன்பின், கி.மு. 332-ல் மக்கதோனியப் பேரரசனான மா அலெக சாந்தர்எகிபதுவைக் கைப்பற்றினான். தொன்மையில்,எகிபதுவும் சுமேரியாவும் ஏறத்தாழச் சமமாகும்.

ஆப்பிரிக்காவின் தென்பாகத்தினின்றும் மேலையாசியா வினின்றும் அடுத்தடுத்துச் சென்ற மக்கட்கூட்டத்தாரே, நீலாற்றின் பள்ளத்தாக்கிலுள்ள சதுப்புநிலங்களையடுத்த தாழ்நிலங்களை, நாலாயிரம் ஆண்டாக மெள்ளமெள்ளத் திருத்திக் குடியிருந்தனர் என்று எகிபதுநாட்டு வரலாறு கூறுகின்றது. அந் நாட்டிற்கும்இந்தியாவிற்கும் தொன்றுதொட்டு வணிகத்தொடர்பிருந்ததாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கூறுகின்றனர்.

"ஆசியாவினின்று கடல் வழியாக,முதற் குடியேற்றக் கூட்டத் தார் கி.மு. 3000-ற்குப்பிற்படாது கிரேக்க நாட்டிற்குச் சென்ற போதே, மெசொப்பொத்தாமியாவில் ஊர் நாகரிகம்முழுவளர்ச்சி யடைந்திருந்தது. அவர்கள்,செப்பறைத் தீவிலும் (Cyprus)கிரேத்தாத் தீவிலும் (Crete)சில சைக்கிலேடுகளிலும் (Cyclades),கிரேக்கத் தீவக் குறையில் மேற்குப் பாகத்தை விடவெப்பமாகவும் காய்ந்துமிருந்த கிழக்குப்பாகத்திலும் குடியேறினார்கள். அன்று அவர்கள்பயிர்த்தொழிலிலும் கடற்செலவிலும் முல்லை வாழ்க்கையிலும் பயின்றிருந்தனர். ஆயினும்,அன்றும் அவர்கள் புதுக் கற்கால நிலையிலேயே யிருந்தனர். ஏனெனின், அவர்கள் கருவிகள் கல்லாலும் பெரும்பாலும் மெலோசுத் (Melos)தீவிற் கிடைத்த புட்டிக்கண்ணாடி போன்ற எரிமலையுறைகூழாலுமே (obsidian)செய்யப்பட்டிருந்தன.

தோரா. கி.மு. 2600 ஆன கிரேக்கஉறைக்காலத் தொடக்கத்தில் (சில ஆசிரியர் உறைக்காலத்தைச் செம்புக்கால மென்றும் சரியான உறைக்காலமென்றும் பிரித்து, அதன்தொடக்கத்தைத் தோரா. கி.மு. 2900 என்றும் முந்தியதாக்குவர்.), செம்பைப் பயன்படுத்தத் தெரிந்தவேறு சில கூட்டத்தாரும் சென்று, முன்பு சிதறலாகக்குடியிருந்தவரொடு கூடிக்கொண்டனர். அவர்களும் ஆசியாவினின்று சென்றவர் களாகவும், தங்கட்குமுந்தினவரின் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும்பெரும்பாலும் இருந்திருக்கலாம்.

மெசொப்பத்தாமியாவிலும்எகிப்துவிலும் நாகரிக மாந்தனாற் செய்யப்பட்ட திருந்திய கலைகளும் தொழில்களும், ஐரோப்பாவில்முதற்கண் கிரேத்தாத் தீவின் மினோவராலும் (Minoans)கிரேக்க நாட்டு மைசீனியராலும் (Mycenaeans) உறைக்காலத்தில் தழுவப்பட்டு வளர்க்கப்பட்டன.

கிரேக்கரின் நகர நாட்டுக்காலத்தில் (கி.மு.458-404) அரசியல் மதியியல் (அகக்கரணவியல்) குமுகாயவியல் புத்தெழுச்சி யுண்டாயிற்று. கிரேக்க நாகரிகம், கி.மு. 8ஆம்நூற்றாண்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை ஐரோப்பியநாடுகட்கும் கருங்கடற்கரை நாடுகட்குங்கொண்டுசெல்லப்பட்டது.

கிரேக்கராலும்மக்கதோனியராலும் (Macedonians)கி.மு.4ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசுஏற்படுத்தப்பட்டது. மக்கதோனிய அரசனானமாஅலெகசாந்தர் (Alexander the Great-கி.மு 356-323), சிந்துவெளிவரை அப் பேரரசைவிரிவுபடுத்தினான். கி.மு.5ஆம் நூற்றாண்டில்உரோமப் பேரரசு கிரேக்கப் பேரரசை வீழ்த்தியது.

உரோமப் பேரரசின் தலைநகர், கி.மு.330-ல், உரோமநகரத்தினின்று (பின்னர்க்கான்சுத்தாந்தினோபில் எனப் பெயர்பெற்ற)பிசந்தியத்திற்கு (Byzantium)மாற்றப்பட்டபோது, பிசந்தியப் (Byzantine)பேரரசு தொடங்கிக் கி.பி. 1453 வரை நீடித்தது.பிசந்தியத்திலும் அதையடுத்த சுற்றுப்புறத்திலும்கிரேக்கரே யிருந்தனர். கிரேக்கப் பேரரசில்மட்டுமன்றி, உரோமப் பேரரசிலும் பிசந்தியப்பேரரசிலும் கிரேக்க நாகரிகமே இணைப்புக் கூறாகஇருந்து, இற்றை ஐரோப்பிய நாகரிகத்திற்குஅடிகோலிற்று. ஆயின், அக் கிரேக்கநாகரிகத்திற்கு அடிமணை தமிழ நாகரிகம் என்பதைஉலகம் இன்னும் அறிந்திலது.

மேலையாசியாவினின்று, கிரேக்கநாட்டிற்கு மக்கள் குடியேறு முன்பே, கொளுவுநிலைமொழிகளைப் பேசிக்கொண்டிருந்த துரேனியஇனத்தார் வட ஐரோப்பாவிற் குடியேறிவிட்டனர்.

துருக்கியர் (Turks),காசக்கர் (Cossacks)முதலிய வகுப்பார் சேர்ந்த தார்த்தாரிய (Tartarian)இனத்தாரும் இரசியாவிற் குடியேறி யிருந்தனர்.அதனாலேயே, "Scratch a Russian and you find aTartar" என்னும் ஆங்கிலப் பழமொழியெழுந்தது.

ஆரியர் இந்தியாவிற்கு வந்தவிதம் 

துரேனியர்க்கும் தார்த்தாரியர்க்கும் பின் மேலையாரியரின்முன்னோரான வடதிரவிடர் வடமேலை ஐரோப்பாவிற்குடியேறி னர். அங்கு அவர் மொழி தியூத்தானிய (Teutonic)ஆரியமாகத் திரிந்தது. அது பின்னர்த் தெற்கில்இலத்தீன முறையிலும் அதன்பின் கிரேக்க முறையிலும்மாறிற்று. அதற்கடுத்த திரிபே கீழையாரியமூலமாகும். அதுவும் பின்னர் இந்தியம் ஈரானியம்என்னும் இருகிளையாகப் பிரிந்தது.

                                                                                                    தொடரும்.........................................

Sunday, February 19, 2012

நாம் யார் -12

பாகம்-11 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.


பாண்டியர்களின் பரவல் 

கடல்கடந்து சென்று, சாவகம்என்னும் சாலித் தீவைக் கைப்பற்றியதாகும்.
சாலி என்பது செந்நெல் என்றுபொருள்படும் தென்சொல். பிற்காலத்திற் பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலிஎன்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதைவடமொழியில் " யவ" என்று மொழிபெயர்த்தான். அதுபின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழில் சாவகம்என்னும் வடிவுகொண்டது. சாலித்தீவின் தலைநகர்சாலியூர்.

சாலித்தீவைப் பாண்டியன்கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்று குடியேறினர். அதனால், அத் தீவின் பல பிரிவுப்பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார்,பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி,செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டுவிளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னுமிடத்துள்ள மலையர், தம் முன்னோர்இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர்.

மீனன் மீனவன்; அஃதாவது மீனக்கொடியுடைய பாண்டியன். மீனன் காப்பு என்பது பாண்டியன்காவலுள்ள இடம் என்று பொருள்படும்.

தமிழர் படிப்படியாகப் பக்கத்துத்தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத்தெரிகின்றது. சாலிக்கு வடகிழக்கில் ஒரு சிறு தீவுமதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra)என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo)என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறைமலையா (Malaya) என்றும்பெயர் பெற்றுள்ளன.

பொருநை (தாம்பரபரணி) என்பதுபாண்டிநாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பதுபொதியமலைப் பெயர். சுமதுரா என்பதன்முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore)என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால்ஏற்பட்டனவாகும்.

சோழர்களின் வெற்றி 

அக்காலத்தில் இலங்கையில் அரக்கர்என்றும் இயக்கர் என்றும் இருவகுப்பார் இருந்திருக்கின்றனர். அரக்கர் அரசன் இராவணன். அவன் தலைநகர் இலங்கை.இயக்கர் அரசன் பிங்கலன் (குபேரன்). அவன்தலைநகர் அளகை. அவன் மாபெருஞ் செல்வன். சங்கம்தாமரை என்னும் பேரெண்களின் அளவுகொண்ட இருபொக்கசம் (நிதி) ஈட்டி வைத்திருந்ததாகச்சொல்லப் படுகின்றான்.  ஒன்றுமூலபண்டார மாகவும் இன்னொன்று வழங்கும்பண்டாரமாகவும் இருந்திருத்தல் வேண்டும்.

அரக்கருக்கும் இயக்கருக்கும் நெடுநாட்பகையிருந்து வந்தது. இறுதியில் மூண்ட கடும்போரில்,இயக்கர் குலம் வேரறுக்கப்பட்டது. பிங்கலன்தப்பிப் பனிமலைக்கு ஓடிப்போய்விட்டான்.பிற்காலத்தில் ஓர் இயக்கி (இயக்கப் பெண்)தமிழகத்தில் நாட்டுப்புறத் தெய்வமும் ஆனாள்.

இலங்கை அரக்கர், அந்தரத்தில் தொங்குமாறு மூன்றுஅரணான கோட்டைகளை அமைத்து இருந்திருக்கின்றனர்.அவற்றை ஒரு சோழன் அழித்து, "தூங்கெயில்எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்னும்விருதுப் பெயர் பெற்றான்.

சேரனின் சிறப்பு 

கரும்பு முதலில் நியூகினியாவில்இயற்கையாக விளைந்த தென்றும், பின்னர்ச்சீனத்திற்கும் அதன்பின் பிற நாடுகட்கும்கொண்டு போகப்பட்ட தென்றும்,  வரலாறு கூறுகின்றது. சாலி (சாவகம்) நியூகினியாப் பக்கத்திலிருப்பதால், சீனத்திற்குமுன் சாலிக்குக் கரும்புசென்றிருக்கும் என்பதை உணரலாம்.

சாலி நாட்டரசர்க்கு இந்திரன்என்னும் பட்டம் இருந்தது. வெள்ளையானை கீழைநாடுகளுள் ஒன்றாகிய கடாரத்தில்(பர்மாவில்) வாழ்ந்தது. இந்திரன் யானைவெள்ளையானை யென்றும், அதன் பெயர் ஐராவதம்என்றும் தொல்கதை கூருக்கிறது . கடாரத்தில்வெள்ளையானை இருந்ததால், அங்கு ஓடும் ஆறு ஐராவதிஎனப்பட்டது.

சேரருள் ஒருவன், இந்திரன் என்னும்பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்றுதமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்துபயிராக்கினான்.

மூவேந்தர் கொண்டுவந்த பொருள்கள் 

இவ்வாறாக , நிலவணிகரும் நீர்வணிகரும் மூவேந்தரும், உலகத்தின் பல விடங்கட்கும் சென்று,ஆங்காங்குள்ள அரும் பொருள்களையெல்லாம் எடுத்து வந்து , தமிழகத்தையும் தமிழர்வாழ்க்கையையும் வளம்படுத்தினர்.

சீனத்தினின்று கற்பூரம் கற்கண்டுசீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்புகராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும்,மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்),இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத் தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும்சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும்அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்றுபெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை),கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும்,மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறுகழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்றுகொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம்,கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும்,மெகசிக்கோ வினின்று மிளகாயும்,அமெரிக்காவினின்று வள்ளி யென்றும்சருககரைவள்ளியென்றும் சொல்லப்படும் சீனிக்கிழங்கும், பிறவிடங்களினின்று பிறவும் வந்துசேர்ந்தன.

                                                                                                              தொடரும்........................  

Saturday, February 18, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல்-6


பாகம்-5 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

தேர்தல் ஆணையம்
==================

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை ஆரமித்தலும் சங்கரன்கோவில் இடைதேர்தல் தேதி யை இப்போது தான் வெளியீட்டு உள்ளது தேர்தல் ஆணையம் .

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் :- 16.02.2012

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் :- 22.02.2012

வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் :-29.02.2012

வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் :- 01.03.2012

வேட்பு மனு திரும்ப பெரும் இறுதி நாள் :-03.03.2012

வாக்குபதிவு நடைபெறும் நாள் :-18.03.2012      (காலை:- 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை )

வாக்குகள் எண்ணப்படும் நாள் :- 21.03.2012

வாக்கு பதிவு மின்னணு வாக்கு பதிவு இந்திரங்கள் மூலம் நடைபெற இருக்கிறது.

அதிமுக
=======

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே வேட்பாளர் அறிவித்து விட்டு , 26 அமைச்சர்களை தேர்தல் பணிக்கு அனுப்பி விட்டது ,ஏன் இந்த பயம் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு , ஒரு வேளை கடந்த எட்டுமாத அரசு மேல் மக்களின் கோபம் இடைதேர்தலில் காலைவாரிவிட்டால் என்ன செய்ய , என்ற பயத்தில், லாரி , லாரியாக இலவசங்களை கொண்டு பொய் அனைத்து தரப்பிலும் முழு மூச்சில் தர , தமிழக அரசின் ஓட்டு மொத்த கவனமும் , ஏன் மொத்த அரசாங்கமே அங்கே முகாம் இட்டு தேர்தல் பணி செய்து வருகிறது .முதலில் உளவு துறை அறிக்கை ஆளும் கட்சிக்கு சாதகமாக வரவில்லை என்பது உண்மை.இவர்கள் பெரிதும் நம்பி இருப்பது நகர்புற வாக்குகளையும் , பெண்களின் வாக்குகளையும் தான் , அதான் நகர்மன்ற தலைவியாக இருக்கும் பெண் வேட்பாளர்.

மதிமுக
=======
இவர்கள் அதிமுக வை விட முன்பே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டார்கள் , வேட்பாளர் மட்டும் அறிவிக்க வில்லை , தனது ஊத்திகளை எல்லாம் பயன் படுத்த ஆரமித்து விட்டார் , மதிமுக பொது செயலாளர் வைகோ , இவர்களின் தேர்தல் வேலைகளை பார்த்த அதிமுக திடுக்கிட்டு பொய் அவசர அவசரமாக வேட்பாளர் அறிவிப்பு , தேர்தல் பணி தொடக்கம் என ஆரமித்தார்கள் , உண்மையில் இவர்களை கண்டு அதிமுக அஞ்சியது உண்மை , வைகோ , ஒரு வழக்கறினார் குழுவை தேர்தல் களத்தில் இறக்கி விட்டு உள்ளார் , வழக்குகள் வந்தால் உடனுக்கு உடன் சந்திக்க அவர்களும் தயாராக இருக்கிறார்கள் . இன்னும் சில யுத்திகளை கையாள தயாராக இருக்கிறது மதிமுக முகாம் , இளைஞர் பட்டாளம் வேறு ஒருபக்கம் தயாராகி கொண்டு இருக்கிறது ,இவர்கள் வைக்கும் சுவர் விளம்பரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது , இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை , அதிலும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்கள் .பெரும்பாலும் இவர்கள் கிராம புற வாக்குகளை அள்ளுவார்கள் என தெரிகிறது . நகர் புறத்தில் கொஞ்சம் பம்பரம் மெதுவாக சுற்றுகிறது , ஒருவேளை சட்டையை சுழற்றினால் , வேகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது .

திமுக
=====

இவர்கள் ஏனோதானோ என எதோ தேர்தல் வேளை செய்ய வேண்டும் என்ற ரீதியில் களத்தில் அங்கு அங்கே தென்படுகிறார்கள் , காங்கிரஸ் கட்சிக்கு இணையாக கோஷ்டிகள் வேற , மூன்றாவது இடம் பிடித்தால் நல்ல வேளை என நினைத்து களத்தில் இருக்கிறார்கள் , ஆளும் கட்சி மேல் வெறுப்பு என்றால் அது நமக்கு தானே ஓட்ட விழும் என்ற வீண் கனவில் இருக்கிறார்கள் , மக்களின் கோபம் எட்டு மாதத்திற்கு முன் இருந்த இவர்களின் ஆட்சியும் மீது சேர்த்து தான் என்பது புரியாமல் பேசி கொண்டு இருக்கிறார்கள்.வேட்பாளர் அறிவித்து விட்டார்கள் , வேளைக்கு ஆள்கள் அமர்த்துவது போல தேர்தல் பணிகளை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் .

தேமுதிக
========

சும்மா இருந்தவர்களை சட்டமன்றத்தில் சீண்டி விட்டார்கள் ,முதலில் இவர்கள் போட்டி போட வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள் , இவர்கள் போட்டி போடாமல் இருந்து இருந்தால் இவர்கள் பிரிக்கும் வாக்குகள் மதிமுகவிற்கு சென்று விட்டால் அவர்கள் வெல்வது உறுதி செய்ய பட்டுவிடும் , எனவே இவர்களை சீண்டி விட்டு வலுகட்டாயமாக தேர்தல் களத்திற்கு இழுத்து கொண்டு வந்துள்ளது ஆளும்கட்சி .கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இவர்கள் இப்போது இருக்கிறார்கள்.

இடதுசாரிகள்
============

இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் எனோ தெரியவில்லை இந்த இடைதேர்தல் எல்லாம் நேர விரையம் என ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டார் .(தோழர்கள் இப்படியே எல்லா தேர்தலிலும் சொல்லிருவார்களோ ).ஜனநாயக அமைப்பு ஓன்று தேர்தல் நேர விரையம் என சொல்லுவது என்ன நியாயம் தெரியவில்லை.ஆனால் அதான் மற்றொரு மூத்த தலைவர் மதிமுகவிற்கு ஆதரவு தரும் எண்ணத்தில் இருக்கிறார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி போடலாம இல்லை , விஜயகாந்தை ஆதரிக்கலாமா என்ற ஒரு குழப்ப நிலையில் இருக்கிறார்கள் , ஏனோ சிகப்பு துண்டு காரர்களுக்கு கருப்பு துண்டு காரரை ஆதரிக்க முன் வருவதில்லை ,(ஒருவேளை அவரின் முல்லை பெரியாறு போராட்டம் இவர்களுக்கு பிடிக்கவில்லையோ )

இதர கட்சிகள்
=============

காங்கிரஸ் , என்னதா சொல்ல எதோ இருக்கிறார்கள் , கூட்டனி தருமம் காக்க திமுகவை ஆதரிக்க போகிறார்களோ என்னவோ , அவர்கள் தான் உள்ளாட்சி தேர்தலில் கூட்டனி தர்மத்தை மீறி தனித்து போட்டி போட்டார்களே , என்ன செய்ய?, கிணத்தில் போட்ட கல்லாக காங்கிரஸ் கட்சி.

கிருஷ்ணசாமி யின் புதிய தமிழகம் போட்டி இடுவார்கள் என தெரிகிறது , இவருக்கு போட்டியாக ஜான் பாண்டியனின் கட்சியும் களத்திற்கு வருவார்கள் போல ,(இல்லை ஒருவேளை வைகோவை ஆதரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது).

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் ,கிருஷ்ணசாமி ,ஜான் பாண்டியனை மீறிய செல்வாக்கு இவர்களுக்கு இல்லை அதனால் தனித்து களம் காண மாட்டார்கள் ,யாருக்காவது ஆதரவு தருவார்கள் , இந்த தொகுதி தனி தொகுதியாக இருந்தாலும் இவர்கள் ஒதுங்கி இருப்பார்கள் என தெரிகிறது.

பாமக , என்ன காமெடி பண்ணுகிறார் களா என தொகுதி மக்கள் மக்களாட்சியை பார்த்து கேட்பது தெரிகிறது , எழுதும் பொது அனைவரையும் சேர்த்து தானே எழுத வேண்டும் , பிறகு மருத்துவர் கோபத்து கொள்ள மாட்டாரா(அவர் வேற 2016 ஆட்சி அமைக்க போகிறார் ) , இந்த தொகுதிக்கும் இவர்களுக்கு சமந்தமே இல்லை, அங்கே பொய் பாமக என கேட்டால் தெரியாது என்ற பதில் தான் முதலில் வரும்.

சில தமிழ் ஆர்வ இயக்கங்கள் இந்த முறை மதிமுகவை ஆதரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது , ஆனால் கடைசி நேரத்தில் இவர்களின் எண்ணத்தையும் கலைக்கும் முயற்சியும் நடக்கிறது.

இந்த மாதிரி எதிர்கட்சிகள் அனைத்தும் தனி தனியாக பிரிக்கும் வாக்குகள் அனைத்தும் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என ஆளும் கட்சி நினைக்கிறது , முடிவுகள் எப்படி இருக்குமோ.

                                                                                                  தொடரும்.......................................

Thursday, February 16, 2012

நாம் யார் -11

பாகம்-10 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

காளை அடக்குதல் 

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்த உடன் , ஒரு சேங்கன்று ஒதுக்கப்படும்,அக்கன்றுகளை,வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்தவூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவைகொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில், கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்ற கால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச்சிவந்த கண்களுடனும்,  கண்டார் அஞ்சும்கடுந்தோற்றத்தை அடைந்தன.

இந்த காளைகளை ஆண்டுதோறும்,பூப்படைந்து மணத்திற் கேற்ற கன்னியர்க்குரிய காளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி,ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக்கப்பட்டஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொரு குமரியையும் மணக்க விரும்பும் குமரர் , அந்தந்த குமரிக்குரிய காளையைத் தனிப்படப்பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்துவிட்டனர்.

ஏறுதழுவுங் குமரர்பலர் எதிர்நின்று கொம்பைப் பற்றியும்,அள்ளையிற் பாய்ந்து கழுத்தைத் தழுவியும்,பின்சென்று காலை வாரியும், பிறவாறும், தாம்குறித்த காளையை அடக்கிநிறுத்த இயன்றவரைமுயன்றனர். சிலர் கண்ட அளவில் அஞ்சிநின்றுவிட்டனர். சிலர் மறு விழாவிற்குக் கடத்திவைத்தனர். சிலர் சிறு புண்ணொடு திரும்பினர்.சிலர் விழுப்புண்பட்டனர். சிலர் குடல் சரிந்துஅங்கேயே மாண்டனர். சிலர் வென்றனர். வென்றவர்தம் விலைமதிப்பில்லாப் பரிசைப் பெற்றதோடு , காளைக்கு உரிய பெண்ணை மணந்தும் கொண்டனர்.

மதுரை உருவாக்கம் 

ஏற்கனனே குமரி கண்டத்தில் இருந்த தலைக்கழகம் கண்ட மதுரை , கால் கோள் வந்து அழிந்து போனது , அங்கே இருந்து இடம் பெயர்ந்த மக்கள் , வடக்கே வந்து , அந்த மதுரையின் நினைவாக இங்கே   தொழுநை யாற்றங்கரையடுத்து (வைகை ) ஒருநகரமைத்து அதற்கு மதுரை என பெயருட்டுள்ளனர், (இன்றைய மதுரை தான் இது ) , இதை வட மதுரை என்றும்,  கடலில் மூழ்கி போனதை தென் மதுரை என்று குறிப்பிட்டுள்ளர்கள்.

இரண்டாம் கடல்கோள்

தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்டுள்ள இரண்டாம் கடல்கோள், கி.மு.2500-ல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக்கடல்கோளால், நாகநாடு என்று சொல்லப்படும் கீழ்த்திசை நிலப்பகுதி, ஏறத்தாழ 1200 கல் தொலைவுபரப்புள்ளது மூழ்கிப்போயிற்று.

கதவபுரமும் குமரியாற்றிற்குத்தென்பால் நிலமும் மூழ்கிப் போயின. இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்துவிட்டது. 

வங்கக் கடல் தோன்றுமுன் அங்கிருந்தநிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழக்கு கரைநெடுகலும் குடியேறியதனால், அவர் சேர்ந்த வூர்கள் நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரிஎனப் பெயர் பெற்றன.

முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்ததுபோன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும்,தென்னாட்டு மக்கள் வடதிசையும் வடநாட்டு மக்கள்வடமேலைத் திசையும் பரவிச் சென்றனர்.கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று.

வட நாட்டில் தமிழன் 

விந்திய மலைகளையும் தாண்டி பரவி இருந்தான் தமிழன் , அந்த கால கட்டத்தில் அங்கே மக்கள் நெருக்கம் குறைவு, தமிழர்கள் அங்கே இருந்ததற்கு எடுத்துகாட்டுகள் 

அங்கு சென்ற தமிழன் ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன.புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரிஎன்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து,பின்னர்ப் பொது வீறுகளாயின.                புரம் = உயர்வு,உயர்ந்த கட்டடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த)கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்திற்பாடலிபுரம் எனத் திரிந்தது.

காளிவணக்கங்கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக்கங்கைக் கரையிற் காளிகோவிலுடன் அமைத்த நகரேகாளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த்தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூயதென்சொல். காளிக்கோட்டம் என்பது, இன்றுஆங்கிலச்சொல் வழியாகக் கல்கத்தா எனத்திரிந்துள்ளது.

 கங்கைக் கயவாய் அடுத்துத்'தம்லுக்' அல்லது 'தமுல்க்' என்னும் பெயர்கொண்டுள்ள துறைநகர்ப் பெயர், தமிழகம் என்னும்சொல்லின் திரிபாயிருக்கலாம். 'தமலித்தி' என்றுபாலிமொழியிலும், 'தம்ரலப்தி' என்றுசமற்கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர்,தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்றதென்சொல்லின் திரிபா யிருக்கலாம்.

                                                                                               தொடரும்................................

Wednesday, February 15, 2012

நாம் யார் -10

பாகம்-9 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.

கதவபுரம் ( கபாடபுரம் )

கடல் விழுங்கியது போக மிச்சம் இருந்த குமரி கண்டம் , இன்றையா குமரி முனையில் இருந்து 500 மைல் தூரம் நிலப்பரப்பு மிச்சம் இருந்த பகுதிகளையும் இன்றைய மதுரை வரை உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளை பாண்டிய மன்னர்களின் ஆளுமையின் கீழ் வந்தது , இவர்களின் பழைய தலைநகரம்  குமரி கண்டத்தில் பஃறுளி யாற்றங்கரைமேலிருந்த மதுரை கடலில் மூழ்க , புதிய தலைநகரமாக குமரியாற்றின் கயவாயில் அமைத்தார்கள். கயவாய் என்பது ஆறு கடலொடுகலக்குமிடம்.

பாண்டியன் தலைநகர் கடல்வழியாகவருவோர்க்கு வாயில்போல் இருந்தமையால், கதவம்அல்லது கதவபுரம் என்று பெயர் பெற்றிருக்கலாம்.கபாடபுரம் என பெயர் பெற்றது.

சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத்திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கருவூரும் தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர்,ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கேபயன்பட்டது.  நெல்லை மதுரை முகவை மாவட்டங்களின் மேல்பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay)மாநிலத்தின் மேல்பாகமும் சேரநாடா யிருந்தன.

ஈழமும் தமிழகமும் இணைந்த பகுதி 

இந்த காலகட்டத்தில் இந்தியா வுடன் இலங்கையும் இனிந்தே இருந்தது , குமரி முனைக்குத் தெற்கில் பழையகுமரிமலைத் தொடரின் பகுதியாகவோ தனியாகவோ ஒருமலை யிருந்த தென்றும், அதனின்றே குமரியாறுதோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும்,குமரியாறும் பொருநையாறும் (இன்றைய தாமிரபரணி ஆறு )இலங்கையூடும் ஓடியது என்று குறிப்புகள் இருக்கிறது , 

இன்றும் இலங்கையில் ஈழ பகுதிகளில் தாமிரபரணி என்ற ஒரு ஆறு இருக்கிறது , தமிழகத்திலும் இருக்கிறது ,

அதே போல இங்கே இருக்கும் திருநெல்வேலி என்ற ஊர் பெயரும் , ஈழத்தில் அதே போல ஒரு ஊருக்கு திருநெல்வேலி என பெயரும் இருக்கிறது , இந்த ஒத்த அடிபடை போதாதா அவர்களும் நம்மவர்களே என்பதற்கு.

இடைக்கழகம் (இரண்டாம் கழகம் )

கதவபுரம் கட்டியமைக்கப்பட்ட பிறகு பல ஆண்டு சென்றபின் இரண்டாம் கழகம் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் 59 என்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் மன்னர்கள் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை மொத்தம் 59 மன்னர்கள் , கழகம் இருந்த காலம் 3700 ஆண்டுகள்

தலைக்கழக வரலாற்றிற்போன்றே, இதன் வரலாற்றிலும் பல செய்திகள்தள்ளது. கழக மிருந்தது மட்டும் உண்மையான செய்தியாகும். இடைக்கழக நூல்நிலையத்தில் இருந்தநூல்கள் 8,000 க்கு மேல் எண்ணிக்கையில் இருந்துள்ளது, செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் மாபெரும் பகுதியைக்கடல் கொண்டுவிட்டதனால், தலைக்கழகத்தில் 549 ஆக இருந்த புலவர் தொகை 59ஆகக் குறைந்து போனது.

போர் ஆரம்பம் 

சண்டை கள் என்றும் மண்ணுக்கும் , பொண்ணுக்கும் தான் வருகிறது போல , பல நூற்று ஆண்டுகள் ஒருவனின் ஆட்சியின் கீழ் இருந்த மக்கள் , பின் மூவேந்தரின் ஆட்சி க்கு கீழ் பிரிவு ஏற்பட்டது .இதன் பின் 

ஒரு வேந்தன் இன்னொரு வேந்தனுக்குப்பெண் கொடுக்க மறுத்தபோதும், ஒரு வேந்தன்கொடுங்கோலாட்சி செய்தால் , மற்றொரு செங்கோல்வேந்தன் அவனைத் திருத்தும்போதும் போர் நிகழ்ந்த்து .
                                                                                            தொடரும்...................................

Tuesday, February 14, 2012

நாம் யார் -9

பாகம்-8 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

கடல் பயணம் 

தரைவழி பயணத்தில் வடக்கே விந்திய வரையும் . ஏன் அதையும் தண்டி இன்றைய இந்தியா மாநிலங்களில் அங்கே குடியேறினான். பின் கடலில் மிதந்து வந்த மரக்கட்டைகளை பார்த்து மர கப்பல்களை தயாரித்தான்.நீர்வழி போக்குவரத்தை தொடங்கினான்.

நெடியோன்

அக்காலத்தில் புயலாலும் பாறையாலும் மர கப்பல் சேதம் அடிக்கடி நிகழ்ந்ததால்,  பெருங்கடலைக்கடப்பதும் கடந்தால் மீள்வதும் கடினமாக இருந்தது .முதன் முதலில் நெடியோன் என்னும் பாண்டியன் மன்னன் ஒருவன், கடல் கடந்துகீழ்த்திசை நாடுகட்குச் சென்று, நல்ல படியாக மீண்டுவந்தான் ,கடல் தனக்கு உதவியாக இருந்ததென்று கருதி, தன்நன்றியறிவைக் காட்டும் விதமாகக் கடல்தெய்வத்திற்கு ஒரு விழாக் கொண்டாடினான்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

இன்னொரு பாண்டியன் மன்னன் ,கலப்படையமைத்துக் கீழ்த்திசைத் தீவொன்றிற்குச் சென்று, தான் கடலைக்கடந்துவிட்டமையால் அதை வென்று தனக்கு அடிப்படுத்தியதாகக் கருதி, அதற்கு அடையாளமாக, கடற்கரையிலுள்ள பாறை யொன்றில் தன் பெயரை பொறித்து, அவற்றைக் கடல் தன்அலையால் என்றும் அலசிக் கழுவுமாறு செய்தான்.அதனால், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான்.

வேல் வீசிய பாண்டியன் 

இன்னுமொரு பாண்டியன் மன்னன் கடன்மேற்செல்லும்போது, கடல் கொந்தளித்தது. அதைக் கடல்தலைவனின் தனக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறான் என கருதி, அதையடக்க ஒரு வேலைவிட்டெறிந்தான். கொந்தளிப்பு இயற்கை யாகஅடங்கிற்று. ஆனால் அது வேலெறிந்ததால் தான் கடல் அடங்கி என நினைத்த அப்பாண்டியனும் அவன் படை பரிவாரங்களும் கருதினர். பொதுமக்கள் அதனால் என்ன நேருமோ என்று அஞ்சிய கொண்டு இருந்தனர்.

கடல்கோள் 

சிறிதுகாலத்தின்பின், அவ் வச்சத்திற் கேற்பவே,பாண்டிநாட்டின் பெரும் பகுதியைக் கடல் கொண்டது.அது கி.மு.5000 போல் நிகழ்ந்துள்ளது. தமிழிலக்கியத்திற் கூறப்பட்டுள்ளமுதற் கடல்கோள் இதுவே. ஆப்பிரிக்காவும்ஆத்திரேலியாவும் குமரிநாட்டினின்று அறவேபிரிந்து நெடுந்தொலைவு நீங்கிவிட்டன. பழம்பாண்டி நாட்டின் தென்பெரும் பகுதிமூழ்கவே, தலைக் கழகமும் ஒழிந்தது.

இடபெயர்ச்சி 

கடல் கோள் ஆட்கொண்ட குமரி கண்டம் பல பகுதிகள் அழியே , மிச்சம் மீதி இருந்தவர்கள், வேறு இடங்களை நோக்கி மொத்தமாக பயணித்தார்கள் , அப்படி வந்தவர்கள் விந்திய மலைக்கு தெற்கே அதாவது இன்றைய தமிழ்நாட்டு , கேரளா ஆந்திரா கர்நாடக என அடர்ந்தும் , விந்திய மலைக்கு வடக்கே அங்கே அங்கே சிறு சிறு கூட்டங்களாக இடம் பெயர்ந்தனர் (இப்போது சொல்லுங்கள் அனைவரும் ஒரு விதத்தில் வந்தேறிகள் தானே )

கடல்கோள் நிகழ்ந்தவுடன், ஒருபெருங்கூட்டத்தார் வடதிசை நோக்கிச்செல்கிறார்கள் .  சிறுசிறு கூட்டத்தாரும்தனிப்பட்டவரும் வடமேற்கும் வடகிழக்கும் பல்வேறுநாடுகட்குச் சென்று, கடல்கோட் செய்தியைப்பரப்பியிருக்கின்றனர்.

இமயத்தில் மீன் கொடி 

பாண்டியநாட்டின் பெரும்பகுதிமட்டுமன்றி, பஃறுளியாறும் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் மூழ்கவே, பாண்டியர் குடியில்எஞ்சியிருந்தவன் தன் பேரிழப்பை யெண்ணி வருந்திஅதற்கு ஒருவாறு ஈடுசெய்து கொள்வதுபோல், வடக்கிற்சென்று பனிமலைக் குவட்டிலும் (இமய மலை ) கங்கை யாற்றங்கரையிலும் தன் கயல் (மீன் கொடியை ) முத்திரையைப் பொறித்துமீண்டான். அன்று அங்கு வல்லரசின்மையாலும்பெரும்பகுதி காடாயிருந்தமையாலும், சிறிதும்அவனுக்கு எதிர்ப்பில்லாது போயிற்று.

சேர , சோழ நாடுகள் 

இதுவரை ஒரே நாடாகவும் , அதற்கு பாண்டிய மன்னனே தலைவனாகவும் இருந்த வந்தான் , கடல்கோட்குத் தப்பிய மக்களைக்குடியமர்த்துவதிலும், தலைநக ரமைப்பதிலும்,ஆட்சித்துணைவரைத் தேர்ந்தெடுப் பதிலும், படைதொகுப்பதிலும் நீண்ட காலஞ் சென்றதனால்,பாண்டியனால் நேரடியாகத் தமிழ்நிலம் முழுவதுங்கவனிக்க முடியவில்லை.

இந்த சமயத்தை பயன்படித்தி நாவலந்தேயப் பகுதிகளையாண்ட இரு துணை யரையரும் (பாண்டியனின் கீழ் நிர்வாகம் செய்தவர்கள் ), அந் நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு இரு வேந்தராகப்பிரிந்துபோயினர். கீழ்நாடு நெல்விளைவாற் சோழநாடென்றும், மேல்நாடு மலைச்சரிவாற் சாரல் நாடென்றும் பெயர் பெற்றிருந்ததனால்கீழைவேந்தன் சோழன் என்றும், மேலைவேந்தன்சேரன் என்றும், ஆள்குடிப் பெயர் பெற்றனர்.

நிர்வாக முறை 

பாண்டியன் ஏற்கனவே நிர்வாகம் செய்து வந்தான் , அதனால் அவனுக்கு , கொடி , சின்னம் , படை இருந்தது இதை போல் சேர , சோழ மன்னர்களும் உருவாக்கினார் (பாண்டியனிடம் கற்று கொண்டு வந்திருப்பார்கள் போல ),

நாற்படையும் ஐம்பெருங்குழுவும்எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன.

முகுடம் (முடி), செங்கோல், மாலை,முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரைஎன்பன பத்துவகைச் சின்னம். கொடியும்முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள்வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம்.

நாடு , குடி , பொருள் , படை, அரண், அமைச்சு,நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம்

இப்போது இருக்கும் உள் துறை , மனித வளத் துறை , நிதி துறை , ராணுவத் துறை , காவல் துறை (உள்நாட்டு பாதுகாப்புக்கு ), பாராளுமற்ற விவகார துறை , வெளியுறவு துறை .

முந்நாடும் தனித்தனி நாடென்றும், ஒருங்கேதமிழகம் என்றும் பெயர் பெற்றன.

                                                                                                                தொடரும்..........................

Monday, February 13, 2012

நாம் யார் -8

பாகம்-7 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

தலைக்கழகம்

ஊர்தலைவர்களை எல்லாம் ஒருகினைத்து , நாட்டுக்கு ஒருவன் தலைவன் ஆனான் , மூவ்வேந்தர்களில் முதல் வேந்தன் பாண்டிய மன்னனின் ஆட்சி செய்தான் , இதன் பிறகே சேர , சோழ என மற்றவர்கள் தோன்றினார்.

முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர்நூற்றுக்கணக்கினர் தோன்றியதனால், பழையஇலக்கியத்தை ஆராயவும் புதிய இலக்கியத்தைஇயற்றவும், பாண்டியன் குமரி கண்டத்தில் பஃறுளி யாற்றங்கரைமேலிருந்த மதுரையென்னும் தன் தலைநகரில் ஒருகழகம் நிறுவினான்.இதுவே தலைக்கழகம் என போற்றபட்டது.

அதன் உறுப்பினர் 549 பேர் இருந்துள்ளார்கள் , மொத்த ஆண்டுகள் -4449 ,

இதை நடத்திய பாண்டிய மன்னர்கள் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை மொத்த மன்னர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 86 பேர் ஆட்சியில் இந்த தலைக்கழகம் தொடர்ந்து நடைபெற்று உள்ளது ,இந்த கழகத்தின் தொடக்கம் சுமார் -கி.மு 10,000 ஆண்டுகள்.இந்த தலைகழக்கம் மூலம் இயற்ற பட்ட பல படைப்பு கிடைக்கவில்லை.

ஐந்திணைப்பெயர்கள்

முத்தமிழும் , இயக்கியமும் , நகரியமும் வளர்த்த தமிழன் நிலங்களின் நிலையை ஐந்து கூறாக பிரித்தான்,குறிஞ்சி , முல்லை, பாலை ,மருதம், நெய்தல் என ஐந்து பகுப்பாக பிரித்தான்.

குறிஞ்சி

குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.

குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.

கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் வயதை கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இந்த முறையை செய்திருத்தல் வேண்டும்.

ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆராய்ந்து குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை குறிஞ்சி இருந்தது என தெரியவில்லை.

முல்லை

முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.

முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடம் என்பதில், முல்லையரும்பை கூர்மையைச் சிறப்பித்துள்ளது.

பாலை

பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.

மருதம்

மல் = வளம்.

மல் - மல்லை = வளம்.

மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.

மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.

மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததால் மருதம் என ஆனது.

நெய்தல்

நள்ளுதல் =அடைதல்
நள் - நளி. நளிதல் = செறிதல்.

நள் - நெள் - நெய். நெய்தல் = தொடுத்தல்,ஆடை பின்னுதல்,ஒட்டுதல்.

நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய்., வெண்ணெய், எண்ணெய்.

நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.

                                                                                                  தொடரும்..............................


Sunday, February 12, 2012

நாம் யார் -7

பாகம்-6 படிக்காதவர்கள் ,படிக்க  இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

பொருள்களை கையாண்ட விதம் 

கனிகள் , தானியங்கள் ,காய்கறிகளும் போன்ற கெட்டிப் பொருள்களை இட்டுவைப்பதற்கு,  பனைநார்ப் பெட்டிகளும் மூங்கிற் கூடைகளும் முடையப்பட்டன. நீரையும் நீர்ப்பொருள்களையும் வார்த்து வைப்பதற்கு, மூங்கில் நாழியும் மரத்திற் கடைந்துகொண்ட கடை காலும் ஆட்டுத்தோற் பையும் பயன்படுத்தப்பட்டன. சமைப்பதற்குக் கற்கலம் உதவிற்று. கல்லில் குடையப்பட்ட பாத்திரம்.

இசைக்கருவிகள் 

ஆடு மாடு உடும்பு முதலியவற்றின் தோலை மரத்தில் கட்டி உலர்த்தியபோதுகுச்சுங் கையும் பட்டு இன்னோசை யெழுந்ததைக் கண்டு , தோலிசைக் கருவிகளும்வண்டினால் துளைக்கப்பட்ட மூங்கிற் குழாயிலும் நாணல் தட்டையிலும் காற்றுப் புகுந்தபோதுஇனிதாய் ஒலித்ததைக் கண்டு புல்லாங்குழலும்முறுகக்கட்டிய வில்லின் நாண் தெறித்தபோதுஇன்னிசை பிறந்ததைக் கண்டு வில் யாழ் என்னும் நரப்பிசைக் கருவியும் கண்டு பிடுத்து இசைத்தான் மனிதன் .

திருமண வாழ்க்கை 

இது வரை கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மனிதன் , குடும்ப வாழ்க்கைக்கு முன்னேறினான் , இன்பத்திற்கு மட்டுமன்றி, வேளைக்கு வேளை உணவு சமைக்கவும், தொழிலுக்குத் துணையாயிருக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், நோய்நிலையில் நலம் காக்கவும் , ஒரு பெண் நிலையாக வீட்டிலிருக்க வேண்டியிருந்ததால், வீட்டு வாழ்க்கை ஏற்பட்டபோதே, ஓர் ஆடவனும் பெண் கூடிவாழும் கூட்டு வாழ்க்கையும் ஏற்பட்டது. அது இல்வாழ்க்கை யென்று பொதுவாகச் சொல்லப்பட்டது .

ஊர்கள் தோன்றின .

இல்வாழ்க்கையும் நிலையான கூட்டுக் குடியிருப்பும் ஏற்பட்டதனால், ஆங்காங்குப் பல ஊர் கள் தோன்றிப் பெருகின. ஒவ்வோர் ஊரிலும் குடிவாணர் பெரும்பாலும் பலதலைமுறைப்பட்ட ஒரே மாபெருங் குடும்ப வுறவினரா யிருந்ததனால், அக் குடும்ப முதியோனே தலைவனாயிருந்து, குற்ற வழக்குத் தீர்த்துத் தண்டித்தும் முறைசெய்தும் வந்தான். அக்காலத்தில் மக்கள் வாழ்வு நீண்டிருந்ததனால் மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன் (சேயான்) என்னும் ஐந்தலைமுறையினரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தனர். (இன்று நிலைமை என்ன என பாருங்கள் ).

உலோகங்கள் 

பொற்காலம் -தங்கத்தின் விவரங்களையும் , செம்புக்காலம் - செம்பின் விவரங்களையும் , உறைக்காலம் -மணிகளின் விவரங்களையும் ,வெள்ளியின் விவரங்களும் , இரும்பு காலம் - இருப்பின் விவரங்களையும் , அதான் பயன்பாடுகளையும் அறிந்து மெல்ல உலகங்களை தனது வாழ்வோடு பயன்படுத்த ஆரமித்தான் மனிதன்.

இதன் மூலம் , ஆயுதங்கள் , வீட்டு, விவசாய உபகரணங்கள் , நகை போற்றவற்றை உருவாக்கினான் மனிதன்.

கொஞ்சம் கொஞ்சமாக நாகரியத்தை கற்று கொண்ட மனிதன் , தனது செயல்பாடுகளையும் முன்னோக்கி நகர்த்தினான்.   


                                                                                                    தொடரும்................................